பணியும் மணியும்!

 

யாழ்ப்பாணக் குடாநாடு இந்திய இராணுவத்தின் பிடிக்குள் சிக்கியிருந்த கால கட்டம் அது! தங்கள் அமைதிப் போர்வையை உதறி விட்டு தங்கள் ஆயுதங்களால் யாழ்ப்பாணத்து உயிர்களை அவர்கள் குறி பார்த்த நேரம்! காங்கேசன் துறையிலிருந்து யாழ்ப்பாண நகருக்கு இரண்டு இந்திய இராணுவப் பெருவண்டிகள் சென்று கொண்டிருக்கின்றன பிரதான வீதி ஒன்றில்! ஆனால் அவை இரண்டும் போராளிகளின் கண்ணி வெடித் தாக்குதலுக்கு இலக்காகி விடுகின்றன.

 

இப்படி ஆகிவிட்டதே என்ற கவலையில் இராணுவத்தினர் இருக்க எப்படி இது நடந்தது என்று ஆச்சரியப்பட்டார் தளபதி மட்டும்! இரண்டு வண்டிகள் தான் வருகின்றன என்று தெரிந்து கொண்டு எப்படிக் கண்ணிகளை அவசரமாகப் புதைத்தார்கள்? என்ற கேள்வி அவரை உறங்க விடவில்லை!

 

 

இப்படியான தாக்குதல்கள் நடந்துவிடக் கூடாது என்பதற்காகவே அந்த வீதியில் தாராளமான பொதுமக்கள் போக்குவரத்தையும் அனுமதித்திருந்தார் அவர்! பொதுமக்கள் வாகனங்களுக்கு இழப்பு ஏற்பட்டுவிடும் என்று பயந்தாவது போராளிகள் எதுவும் செய்ய மாட்டார்கள் என்று அவர் எண்ணி இருந்ததற்கு மாறாக பொதுமக்கள் வாகனங்களைத் தவிர்த்து தங்களை இலக்கு வைத்துவிட்டனர் போராளிகள் என்பது அவருக்கு வியப்பாக இருந்தது!

 

மறுநாள் இரண்டு வாகனங்கள் நான்கு ஆக்கப்பட்டன. அவற்றின் முன்னே பஸ் வண்டி ஒன்று முதியவர்கள் பெண்கள் குழந்தைகளோடு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது! போராளிகளின் தொலைத் தொடர்புகள் எல்லாம் இடை மறிக்கப்பட்டது. வீதிகள் எல்லாம் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது! விலங்குகளின் கழுத்தில் ஏதாவது செய்திகள் கட்டிக் கடத்தப் படுகின்றதா என்றும் நோக்கப் பட்டது.  அப்படி எந்தப் பரிவர்த்தனையும் இல்லை! பிரயாணம் தொடங்கியது!

 

முன்னே வந்த பஸ் வண்டி மட்டும் கவனமாகத் தப்ப வைக்கப்பட்டுப் பின்னே வந்த நான்கு வாகனங்களும் தகர்க்கப்படுகின்றன! உடனே பெருந்தொகைப் போராளிகள் தோன்றி ஆயுதப் பிரயோகம் செய்கிறார்கள்! எத்தனையோ கள முனைகளைக் கண்ட இராணுவத்துக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை! என்ன நட க்கின்றது என்றும் தெரியவில்லை! மேஜர்கள் பலர் போராடாமலேயே மடிந்து போய்விடுகிறார்கள்!

 

ஒன்றும் விளங்கவில்லை! தோற்றது பிரச்சனை அல்ல! ஆனால் போராளிகள் எப்படி தெரிந்தது கொண்டார்கள் நான்கு வண்டிகள் மட்டுமே வருகின்றன என்பதை? தேவைக்கு ஏற்றபடி நான்கு வெடிகளை மட்டும் எப்படிப் புதைத்தார்கள்! அவர்கள் ஒன்று கூடப் புதைத்திருந்தாலும் அதிர்வினால் அதுவும் வெடித்திருக்கும்! அப்படி இல்லாமல் நான்கினை மட்டும் துல்லியமாகப் புதைத்தது எப்படி? என்ன நடக்கிறது இந்த நாட்டிலே?

முகாமிலே யாரும் உறங்கவில்லை! எப்படித் தகவல்களைப் போ ராளிகள் பெற்றுக் கொள்கிறார்கள்?

 

அதற்கான விடையைத் தெரிந்து கொள்ளாமல் பாதுகாப்பாக பயணம் செய்வது என்பது முடியாத காரியம்! என்று முடிவெடுத்து மறுவாரமும் பிரயாணம் ஒழுங்கு செய்யப் படுகின்றது. மூன்று வண்டிகள்! முதல் வண்டியில் தானும் ஏறிக் கொள்கிறார் இராணுவத் தளபதி. வண்டிகள் நகர்கின்றன. எல்லோர் மனத்திலும் மரண பீதி! யாழ்ப்பாண நகரைச் சென்றடைவது அல்ல அவர்களின் இலக்கு. உண்மையைக் கண்டறிந்து விடவெண்டும் என்று துடித்தார்கள்!

 

வழியில் அந்த விநாயகர் கோவிலைத் தளபதி வணங்கிக் கொள்கிறார்! வாகனத் தொடரணி கோவிலைக் கடந்ததும் கோவில் மணி மூன்று தடவைகள் அடித்து ஓய்கின்றது. தற்செயலாக ஓசையை எண்ணிய தளபதி எனக்கு எல்லாம் தெரிந்து விட்டது! வாகனங்களை நிறுத்துங்கள் என்று கத்தினார்! வண்டியை விட்டு இறங்கி நேராக மணிக்கூட்டுக் கோபுரத்துக்குச் செல்கின்றார்! கூடவே இந்தியச் சிப்பாய்கள்!

 

அங்கே ஒரு முதியவர் மணியை அடித்துவிட்டுச் சிரமப்பட்டுப் படிகளில் இறங்கிக் கொண்டிருந்தார்! மெலிந்த தேகம்! தள்ளாடும் நடை! கையிலே ஒரு ஊன்று தடி! நேற்றியிலே திருநீறு! செயலுக்குத் தகுந்த ஒரு தவக் கோலம்!

 

பெரியவர் நீங்கள் தானே மணி அடித்தீர்கள்?

 

ஆம் ஐயா! நான்தான் அடித்தேன்!

 

ஏன் மூன்று தடவைகளுடன் நிறுத்தி விட்டீர்கள்?  ஏன் தொடர்ந்து அடிக்கவில்லை?

 

அடிக்கலாம் என்றுதான் நினைத்தேன்! ஆனால் உடம்பு முடியவில்லை! இயலாமல் இருக்கின்றது! மிகவும் சிரமப்பட்டு மூன்று முறை மட்டும் அடித்தேன்! ஆண்டவனுக்கு அது போதும்! அவனுக்கு எல்லாம் தெரியும்!

 

அது தான் போன வாரம் இரண்டு முறையும் நான்கு முறையும் அடித்தீர்களா? தளபதி கேட்டார். முதியவர் பதில் பேசாது நின்றார்! தளபதியின் கண்கள் சிவந்தன!

 

பையன்களும் பொண்ணுகளும் தான் போராளிகள் என்று தப்புக் கணக்குப் போட்டு விட்டோம் இல்லையா? சரி. பரவாயில்லை! எங்கள் கூட வாருங்கள்! போகலாம்!

 

வாகனத் தொடரைத் திரும்பச் செய்து முகாமை அடைந்தார் தளபதி! அன்று யாழ் நகருக்குச் செல்லவில்லை! அதனால் பல இராணுவத்தினர் காப்பாற்றப் பட்டனர்.

 

இந்திய இராணுவத் தளபதியாக இருந்த ஒருவர் எழுதிய யாழ்ப்பாணத்தில் நான் என்ற நூலில் இந்த உருக்கமான செய்தி யாழ்ப்பாணத்தின் விடுதலைப் பற்றாகச் சொல்லப்பட்டிருக்கின்றது! இந்த மணி விவகாரத்தை நாம் தெரிந்து கொண்டபோது அனுபவம் வாய்ந்த பல வீரர்களை எமது தரப்பில் வீணாக இழந்திருந்தோம் என்று கவலையுடன் குறிப்பிடுவார் அந்தத் தளபதி! தமது நூலில்!

 

ஆம்! எமது நாட்டிலே ஒரு எழுற்சி இயக்கமாகத் தோன்றிய விடுதலை அமைப்புக்கு பெற்ற மக்களை மட்டும் அனுப்பி விட்டுப் பெற்றார்கள் உறங்கி இருக்கவில்லை! தாய் நாட்டுக்காக தம்மால் முடிந்ததை எல்லாம் முதியவர்கள் கூடச் செய்திருக்கிறார்கள்! அவர்களின் பல செயல்களுக்கு விளம்பரம் கிடையாது!

 

இன்று மாவீரர்கள் ஆகிவிட்ட அவர்களை எல்லாம் யாராவது சுட்டிக் காட்டும் போது தான் நாம் தெரிந்து கொள்கிறோம்! அவர்களுக்கும் எம் வணக்கங்களைச் செலுத்த வேண்டியது எம் மாவீரர் நாள் கடமைகளில் ஒன்றாகி விடுகின்றது!

 

அதே வேளை எங்கள் வாழ்வியலைச் சிதைத்தவர்களாக இருந்தாலும் இத்தகைய வரலாற்றுச் செய்திகளை மறைக்காமல் வெளியிட்டு எங்கள் முன்னோர் வயது வேறுபாடின்றி விடுதலைப் போர் செய்த திறனை எமது மனங்களிலே பதிய வைக்கும் இந்தியத் தளபதி போன்றவர்களும் எம்மால் போற்றப்பட வேண்டியவர்கள் ஆவார்கள்! காரணம் எதிரிகளால் ஆவணப் படுத்தப்பட்டாலும் அந்தத் தியாகங்கள் எம் மண்ணுக்கே சொந்தம் அல்லவா?

 

 

 

 

 

 

 

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.