உயர்ந்து நின்ற பனையும் நடந்து சென்ற படையும்!

சங்க காலத்தில் ஒரு நாள் அந்தப் பெரும்படை நகரத் தொடங்குகின்றது. எதிரே பெரிய பனங்கூடல். படையின் முன்னணி வீரர்கள் உள்ளே நுழைகின்றார்கள். அவர்கள் போகும் வழியெல்லாம் குலையீன்ற பனைகளில் ஏறி அவற்றை வெட்டி வீழ்த்தி நுங்கினைச் சுவைத்துக் கொண்டு போகின்றார்கள். அடுத்து வருவோர்; அந்தக் கூடலில் நுழையும் போது அறுக்கப்படாத குலைகள் எல்லாம் கனியாக முற்றிக் கனிந்து வீழ அந்தப் பழங்களை அவர்கள் எடுத்துச் சுவைத்துக் கொண்டு போகின்றார்கள். படையின் இறுதியில் வருபவர்களோ தம் முன்னே செல்லும் படையினது உண்டபின் எறிந்த பனம்பழத்து வித்துக்களில் இருந்து முளைத்தெழுந்த கிழங்குகளை இழுத்தெடுத்துச் சுட்டுத் தின்றுகொண்டே போகின்றார்கள்.செல்லுகின்ற படையின் நீளத்தையும் தொகையையும் காலத்தையும் காட்ட சங்கப்புலவன் எடுத்தக் கொண்ட காட்சி இது. நுங்கோடு முற்றியிருந்த பனங்காய் கனியாகி வீழ்ந்து அவற்றின் விதைகளில் இருந்து கிழங்கு உருவாகும் வரை மிக நீளமாகப் பயணப்பட்ட அந்தப் படை தனது ஆயுத பலத்தாலும் எண்ணிக்கையாலும் பல அரசுகளை வீழ்த்திப் பல நாடுகளையும் போரிலே கைப்பற்றிக் கொண்டது.அப்படிப்பட்ட படையைக் கொண்டு நடத்திய தலைவன் இறந்த பின்பு அவனுடைய தேசம் கவனிப்பாரற்றுகக் கள்ளிச் செடிகளும் முட்புதர்களும் நிறைந்து காடுபோல மாறிவிட்டது. அவன் வெற்றியைப் புகழ்ந்தவர்கள் எல்லோரும் ஓடி ஒளித்துக் கொண்டார்கள்.அவன் காலத்தில் போரின் வெற்றியை குறிக்க முழங்கிய முரசம் இன்று எந்தவிதமான மதிப்பும் பெறாமல் தூக்கணம் குருவியின் கூடு போலத் தொங்கிக் கொண்டிருக்கின்றதே. போரின் போக்கினை அறிவிக்க ஊதப்பட்ட வலம்புரிச்சங்கு இன்று மாற்று அரசர்களின் திருப்பள்ளி எழுச்சிக்காக ஊதப்படுகின்றதே. அந்த ஓசையைக் கேட்டு இனப்பற்று மிகுந்த எனது நெஞ்சு வெடித்து நான் செத்துப் போகாமல் எங்கள் எழுச்சியையும் வீழ்ச்சியையும் நினைத்து நொந்து புலம்புகின்ற நிலையில் மட்டும் தானே வாழ்கிறேன் என்று பாடினான் அந்தச் சங்கப் புலவன்.அந்தப் புலவர் தான் ஆலந்தூர் கிழார். ஆவரால் குறிப்பிடப்பட்ட மன்னன் தான் சோழன் நலங்கிள்ளி.தலையோர் நுங்கின் தீஞ்சேறு மிசையஇடையோர் பழத்தின் பைங்கனி மாந்தக்கடையோர் விடுவாய்ப் பிசிரொடு சுடுகிழங்கு நுகரநிலமலர் வையத்து வலமுறை வளைஇவந்து பீடழித்த வேந்துவேல் தானையொடுஆற்றல் என்பதன் தோற்றம் கேள் இனிகள்ளி போகிய களரியம் பறந்தலைமுள்ளுடை வியன்காட்டு அதுவே நன்றும்சேட்சென்னி நலங்கிள்ளி கேட்குவன் கொல்லெனஇன்னிசைப் பறையொடு வென்றி நுவலத்தூக்கணங் குரீஇத் தூங்குகூடு ஏய்ப்பஒருசிறைக் கொளீஇய திரிவாய் வலம்புரிஞாலங் காவலர் கடைத்தலைக்காலைத் தோன்றினு நோகோ யானே.(புறநானூறு பாடல் 225)சங்கப் புலவன் காட்டிய அந்தத் துயர வாழ்வு அவனுக்கு மட்டுமா என்றால் இல்லை எங்களுக்கும் தான் என்கிறது நமது தேசம். எமது படைகளால் பிடிக்கப்பட்ட ஊர்கள் எத்தனை? எங்கள் படைகள் கைப்பற்றிக் கொண்ட அரண்கள் எத்தனை. சங்கப் புலவன் காட்டிய படையைப் போலத்தான் ஓயாத அலைகளாக எங்கள் சேனையும் நடந்தது.ஆனால் நாம் தேடிக் கொண்ட வெற்றிகள் எதுவுமே எம்மிடம் நிலையாகத் தங்கவில்லை. தலைவர்கள் மடிந்து போனார்கள். மாவீரர் இல்லங்கள் மணல் மேடுகளாகப் போயின. எங்கள் வீரர்களின் உதிரம் கலந்த இடங்கள் எல்லாம் சுற்றுலாத் தலங்கள் ஆக்கப்பட்டு விட்டன. சங்க காலம் போல எங்கள் தேசத்தின் வனப்புகள் தொலையத் தொடங்கிவிட்டன.சோழர் படையால் கம்போடியாவைக் கைப்பற்றத் தான் முடிந்ததே ஒழிய அந்த நிலத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை. பெரும் படையோடு சென்று கலிங்கத்தை வென்ற தமிழன் கண்ணகிக்குக் கல் எடுக்க மட்டும் தான் ஆசைப்பட்டான். அந்த நிலமும் பறிபோயிற்று. இமய மலையிலே புலிக்கொடி நாட்டினோம் ஆனால் இமயத்தை வசப்படுத்த முடியவில்லை.எங்களின் விவேமற்ற வீரம் சொந்த நாட்டையே தக்கவைத்துக் கொள்ள விடவில்லை அன்றும் இன்றும். கல்வித் துறையில் ஆகட்டும் அரசியலில் ஆகட்டும் போரியல் செயற்பாடுகளில் ஆகட்டும் கிடைக்கும் புகழினை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் பக்குவ மனப்பான்மையை நாம் வளர்த்துக் கொள்ளவில்லை. அதனால் வாழையடி வாழையாக எதையும் தொடரும் அருகதையை தமிழனம் சங்க காலத்திலேயே இழக்கத் தொடங்கிவிட்டது.எனவே புறநானூறு போல நாமும் வீழ்ந்து விட்ட எங்கள் தேசத்தை எண்ணிப் புலம்பல் இலக்கியம் படைக்க முடியுமே ஒழிய அதன் உயர்வுக்கு எதுவும் செய்துவிட முடியாது என்பதே சங்க இலக்கியம் கற்றுத்தரும் பாடமாகும்.

(தமிழர் தகவல் இதழில் 5.11.2020 வெளிவந்த எனது கட்டுரை இது)

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.