வன்னியிலே ஒரு காடு!
வன்னியிலே ஒருகாடு காட்டின் ஓரம்
வாழ்ந்தவொரு பாட்டியவள் ஒருநாள் மாலை
தின்னவென வடைசுட்டாள் தேடி வந்து
திருடிவிட எண்ணியதோர் அண்டங் காக்கை
தென்னைமர ஓலையிலே இருந்து நெஞ்சில்
திட்டியது பாட்டியினைப் பசியால் அப்போ
பின்னியதோர் செடிகொடிகள் மறைக்கும் பற்றைப்
பின்னிருந்தோர் நரிதன்னுள் எண்ணிக் கொள்ளும்
பாட்டிவடை எப்படியும் திருடும் காக்கை
பக்குவமாய் வாயினிலே வைத்துக் கொள்ளும்
காட்டுமரக் கிளையிருந்து உண்ணும் போது
கைகூப்பி முன்னாலே சென்று காக்கா
கேட்டுப்பல நாளாச்சுப் பாட்டுப் பாடு
கீதமதை உன்போல இந்தக் காட்டில்
மீட்டுதற்கு ஒருவருமே இல்லை என்பேன்
மெய்யென்று வாய்திறக்கும் காகம் நம்பி
வாய்தவறி விழுந்தவடை எடுத்துக் கொண்டு
வந்தவழி ஓடிவிட வேண்டும் என்றே
பேய்நரியும் திட்டமிட்டு இருந்த வேளைப்
பெட்டிவடைப் பாட்டியவள் முற்றம் வந்தாள்
மேய்வதற்குக் காத்திருந்த காக்கைக்கு ஒன்றும்
மேலுமங்கு மறைந்திருந்த நரிக்கும் தந்தாள்
தாயவளும் தந்துவிட்டுச் சொன்னாள் ஒன்று
தன்னினத்தார் மடிந்தொழிந்த திசையைப் பார்த்து!
பாடுபட்டுச் சுட்டவடை அதனால் என்ன?
பறிப்பதற்கு முன்னாலே பகுத்துத் தந்தால்
கேடுகெட்ட போட்டிமனப் பான்மை நீங்கும்!
கீதத்தைப் பாடவைக்கும் சூழ்ச்சி நீங்கும்!
காடுசுற்றும் காக்கையதன் கவலை நீங்கும்!
கள்ளநரித் கூட்டமெலாம் தோற்றும் போகும்!
நாடுபெற்று வாழ்வதற்கு நினைத்த எங்கள்
நாலுசனம் செத்திருக்க மாட்டாது என்றாள்!