இன்றைய அறிவியலுக்கு அன்றைய செய்தி ஒன்று!
இன்றைய அறிவியலுக்கு அன்றைய செய்தி ஒன்று!
சமய உலகிலே மிகவும் அறியப்பட்ட ஒரு கதை பிரகலாதான் கதையாகும். இரணிய மன்னனுக்கு மகனாகப் பிறந்து நாராயண நம என்று எப்போதும் திருமாலின் நாமத்தைச் சொன்னவன் பிரகலாதான்! தனது எதிரியான திருமால் பெயரை மகன் உச்சரிப்பதைப் பொறுக்க முடியாமல் அவனைக் கொலை செய்யத் துணிந்தான் இரணியன்.
உன் கடவுள் எங்கே இருக்கிறான் என்று கேட்டான் இரணியன். என் கடவுள் இந்தத் தூணிலும் இருப்பான்! துரும்பிலும் இருப்பான் என்றான் பிரகலாதான். மகன் காட்டிய தூணைக் கதாயுதத்தால் அடித்துத் தகர்த்தான் இரணியன்.
இது தான் சமயம் என்று திருமால் நரசிங்க கோலத்தில் கூட்டணியாக வந்தார். இரணியனைப் பிடித்து தன் மடியிலே வைத்து நகத்தால் பிளந்து கொன்றார்! இது தசா அவதாரத்தில் வரும் நரசிங்க அவதாரக் கதையாகும்.
எமக்கு இந்தப் புராணக் கதை முக்கியமல்ல. இந்தப் புராணக் கதையில் வருகின்ற ஒரு மருத்துவச் செய்தி தான் முக்கியமானது.
இரணிய மன்னன் இறைவனைக் குறித்துத் தவம் செய்ய எண்ணிய போது நிறைமாதக் கர்ப்பிணியாக பிரகலாதனை வயிற்றில் சுமந்து கொண்டிருந்தாள் அவன் பட்டத்துத் தேவி லீலாவதி! தந்தை கொடியன் ஆகையால் குழந்தையும் கொடியவனாக இருப்பான் எனவே குழந்தையை அழித்துவிட வேண்டும் என்று தேவர்களின் அரசன் இந்திரன் எண்ணுகிறான். தான் தவம் முடித்து வரும்வரை தன் மனைவிக்கு தக்க பாதுகாப்புக்கு ஆள் தேடினான் இரணியன்.
நாரத முனிவர் தான் அதற்குச் சிறந்தவர் என்று எண்ணி அவரின் ஆச்சிரமத்துக்கு மனைவியை அழைத்து வந்து அவர் பாதுகாப்பில் விட்டுச் சென்றான். இரணியன் சென்றதும் அவன் மனைவி கவலையாக இருந்தாள்.
ஏன் கவலையாக இருக்கிறாய் என்றார் நாரதர். முனிவரே! கணவர் இல்லாத காலத்தில் இந்தக் குழந்தையை நான் பெற்றுக் கொள்ள விரும்பவில்லை என்றாள் தேவி.
பெண்ணே! நீ கவலையை விடு. உன் கணவன் தவம் முடித்துத் திரும்பி வரும்வரை உன் வயிற்றிலுள்ள குழந்தை வளராமலும் பிறக்காமலும் அழியாமலும் இருக்க ஆவன செய்வேன். வயிற்றில் இருந்து கொண்டு இந்த ஆச்சிரமத்தில் ஒலிக்கும் வேத மந்திரங்களைக் கேட்டு உன் குழந்தை இறை உணர்வோடு பிறக்கும் என்றார் நாரதர்.
அவர் சொன்னது போல இரணியன் தவம் முடித்து வரும் வரை தாயின் வயிற்றிலே உறை நிலையில் வைக்கப்பட்டான் குழந்தையாகிய பிரகலாதான்! அது மட்டுமல்ல. நாராயண நாமத்தைச் சொல்லும் நாரதர் ஆச்சிரமத்தில் கருவாக இருந்ததால் கருவிலேயே நாராயண நாமம் அவன் மனதில் படிந்து போனது.
இரணியன் தவம் செய்த ஆண்டுகள் ஆயிரம் என்று புராணம் கூறுகின்றது. அது பொய் என்றாலும் இன்னும் பத்து மாதங்கள் என்று கொள்வோம்.. பத்து வாரங்கள் என்போம்! பத்து நாட்கள் என்று குறைத்துக் கொள்வோம். அதுவல்லப் பிரச்சனை.
ஒரு குழந்தையை அது பிறக்க வேண்டிய காலம் வந்து விட்ட போதும் சில காரணங்களுக்காக அதன் பிறப்பைத் தள்ளிப் போட்டு அதுவும் மேற்கொண்டு வளராத உறை நிலைக்கு அதை ஆளாக்கி வைத்து குழந்தைக்கும் தாய்க்கும் எந்தவித ஆபத்தும் இன்றி விரும்பிய போது பெற்றெடுத்துக் கொள்கின்ற ஒரு வழி முறை அன்று ஒரு மனிதனுக்குத் தெரிந்திருக்கின்றது.
இன்றைய மருத்துவ விஞ்ஞானம் இப்போது தான் ஆண் பெண் கருக்களை குளிரூட்டிப் பாதுகாக்க அறிந்திருக்கிறது. வயிற்றுக்கு வெளியே கருவை இணைத்து வளர்க்கின்றது.. ஆனால் எவ்வளவோ காலத்துக்கு முன்பு ஏதோ ஒரு மூலிகையை கொடுத்து அல்லது ஏதோ உடற்பயிற்சி மூலம் பிறப்பைத் தள்ளிப் போட்டிருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல ஒரு கருவை வயிற்றிலேயே வளர்ச்சி அடைய விடாமல் உறங்கு நிலையில் வைத்திருந்திருக்கிறார்கள். இன்றைய விஞ்ஞானம் சிந்திக்க வேண்டிய செய்தி தானே இது!
இன்றைய மருத்துவ மனை எதிலுமே குழந்தை பிறக்க வேண்டிய காலம் ஒரு நாள் பிந்தினாலும் தாய் வயிற்றை வெட்டி எடுக்கும் கலாச்சாரமே காணப்படுகின்றது. தாயின் உயிருக்கு ஆபத்து என்கிறது இன்றைய மருத்துவம். ஆனால் காட்டிலே ஆச்சிரமக் குடிலில் கரு உறங்க வைக்கப் படுகின்றது பிறக்க அனுமதிக்காமல்! தாய்க்க்கு ஆபத்து இல்லாமல்!
இதில் பிறக்க விடாமல் தடுக்கும் நடபடிக்கை மட்டும் முக்கியமல்ல மேற்கொண்டு வளர விடாமல் தடுத்ததாக சொல்கிறார்களே எதைக் கொண்டு தடுத்தாhகள்? மூலிகைச் சாற்றைத் தாய் குடித்தாளா? இல்லைக் குழந்தைக்கு கொடுத்தார்களா? குழந்தைக்கு என்றால் எப்படிச் செலுத்தினார்கள்? எதைக் கொண்டு செலுத்தினார்கள்?
இதெல்லாம் என்ன? நாம் இப்போது தேவையான நேரத்தில் பயன்படுத்துவதற்காக கருவை உறங்கு நிலையில் வைத்து பாது காப்பது போல இனி வரும் காலத்தில் தாயின் வயிற்றிலும் குழந்தையை உறங்கு நிலையில் வைத்திருக்கும் மருத்துவக் கண்டுபிடிப்பைச் செய்வோமா? அப்படி செய்யலாம் என்ற நம்பிக்கையை ஆவது இக் கதை மூலம் வளர்த்துக் கொள்வோமா? அல்லது வழக்கம் போல புராணங்கள் கட்டுக்கதை என்று கூறி எம் இயலாமையை மறைத்து விடுவோமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!