புலிகளும் புள்ளிகளும்
– இரா. சம்பந்தன்.
எதிரியின் துல்லியமான தாக்குதல் திறனோ இல்லைப் புலிகளின் கவனயீனமோ அல்லது இவை இரண்டும் சேர்ந்தோ நாம் அரசியல் துறைப் பொறுப்பாளரை இழந்துவிட்டு நிற்கிறோம். இழந்து நிற்கிறோமே ஒழியக் கை பிசைந்து நிற்கவில்லை. அதற்குக் கடந்த திங்கள் முகமாலையில் புலிகள் இராணுவத்தினரைக் கொன்றழித்த நிகழ்வே சிறந்த உதாரணமாகும்.
அதே வேளை தமிழ்ச்செல்லனையும் அவரைச் சார்ந்தவர்களையும் கோழைத்தனமாகக் கொலை செய்து விட்டார்கள் என்று நாம் பேசக் கூடாது. எதிரிக்குச் நல்ல இலக்கு வாய்த்தது. சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்ற எண்ணம் எம்மனதில் தோன்றினால் மட்டுமே நாம் ஈழ விடுதலைப் போராட்டத்தைப் புரிந்து கொண்டு நேசிப்பவர்கள் ஆவோம். அதை விடுத்து தமிழ்ச்செல்வன் கொலைக்கு வேறு என்ன சப்பைக்கட்டுக் கட்டினாலும் அது எம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் வழிமுறையாகும்.
தழிழ்ச்செல்வனை இழந்தது ஈழத் தமிழ் மக்களைப் பொறுத்த மட்டில் ஒரு துன்பம். சங்கிலித் தொடராக அனுபவித்து வரும் இழப்புக் கலந்த துன்பங்களில் அண்மைக் காலத் தலையாய துன்பம் இது என்பதில் சந்தேகம் இல்லை.
எத்தனையோ புலிகளின் மறைவுக் காலத்தை விடத் தமிழ்ச்செல்வனின் மறைவு உலகத் தமிழினத்தை உலுக்கி எடுத்திருப்பதற்குக் காரணம் அவரின் புன்னகையும் மென்மைப் போக்கும் மட்டுமல்ல அவலத்தில் சிக்கித் தவிக்கும் ஈழத் தமிழர்களும் அவர்களின் பந்துக்களாக உலகு எங்கும் பரந்து வாழும் புலம் பெயர்ந்த தமிழர்களும் எந்த வாயினால் தமிழ் இனத்துக்கு ஒரு விடிவுச் செய்தி வரும் என்று நம்பி இருந்தார்களோ அந்த வாய்க்கு உரியவனே அழிக்கப்பட்டு விட்டதைக் கேள்விப்பட்ட போது வீழ்ந்த குண்டு தமிழ்ச்செல்வனை மட்டுமல்ல தங்கள் கனவுகளையும் தகர்த்து விட்டதையும் உணர்ந்துதான் வெலவெலத்துப் போனார்கள்.
அநுராதபுரத் தாக்குதல் சிங்களத் தலைமையின் இதயத்தில் வீழ்ந்த அடி என்ற இன்ப அதிர்ச்சியில் இருந்த உலகத் தமிழ் இனத்துக்கு திருவையாற்றுத் தாக்குதல் ஈழத் தலைமையின் இதயத்துக்குப் பக்கத்தில் விழுந்த அடி என்பதை நினைக்கவே உடல் நடுங்கியது. புலிகளிடத்திலே விசுவாசமும் பற்றும் வைத்திருக்கும் பலருக்கு கவலையை விட வெட்க உணர்வே மேலோங்கி மனது உண்ண மறுத்தது. இவ்வளவு தூரம் வந்து முக்கியமான ஒருவரைப் பாதுகாப்பு உறுப்பினரோடு சேர்த்துத் தாக்கிவிட்டுப் போய்விட்டார்களே.என்ற அவமானத்தால் குறுகிப்போன தமிழர்களும் உண்டு. ‘என்னை வென்று உளரெனில் இலங்கைக் காவல! உன்னை வென்று உயருதல் திண்ணம் ஆதலால்’ என்று இராவணனுக்குக் கும்பகர்ணன் சொன்னது போல ஏதாவது எதிர்காலத்தில் நடந்து விடுமோ என்ற கவலையைத் தமிழ்ச்செல்வன் சாவு ஏற்படுத்தி விட்டது என்றால் அது மிகையாகாது.
இன்று தமிழ் ஈழத்திலும் தமிழ் நாட்டிலும் தமிழர்கள் செறிந்து வாழும் பிற நாடுகளிலும் நாம் இரங்கல் கூட்டங்களையும் அனுதாப நிகழ்ச்சிகளையும் நடத்திக்கொண்டிருக்கிறோம். ஆனால் ஈழத் தமிழர்கள் நடத்தும் நிகழ்வுகள் தேசியப் பற்றும் இனவுணர்வும் துன்பமும் அதனால் ஏற்பட்ட உறுதியும் ஒற்றுமையும் என்று ஒரு சீரிய வழியிலே வெளிப்பட்டு உலகத்தை வியப்பில் ஆழ்த்த தமிழ் நாட்டிலோ அதற்கு எதிர்மாறாக ஆதரவும் எதிர்ப்பும் ஊர்வலமும் கைதும் என்று உலகம் சிரிக்கும் வகையில் நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
தமிழ்ச்செல்வன் மறைவுக்கு கலைஞர் ஒரு இரங்கல் கவிதை வடித்தார். அவர் யாரையும் கண்டிக்கவும் இல்லை. ஆற்றாமையின் விழிம்பில் நின்று கொண்டு செல்வா நீ எங்கு சென்றாய்? என்று மட்டும் கேட்டார். நீ புலிக்கு ஆதரவாளன் என்று ஜெயலலிதா அவர் மீது பாய்ந்தார். சிறியோர் செய்த சிறுபிழை எல்லாம் பெரியோராகில் பொறுப்பது கடனே என்ற வெற்றி வேற்கை இலக்கியத்தை நன்குணர்ந்த கலைஞரே தான் தமிழரென்றும் தன் உடம்பில் ஓடுவது தமிழ் இரத்தம் என்றும் ஜெயலலிதா மாற்று இனம் என்றும் அதனால் எதிர்க்கிறார் என்றும் பொருட்பட மறுப்பு வெளியிட்டார்.
துன்பத்தில் துவண்டு போயிருக்கும் என்னை மேலும் துன்புறுத்த வேண்டாம் என்;று ஒரு வாக்கியத்தோடு ஜெயலலிதாவுக்கான பதிலைக் கலைஞர் நிறுத்திக் கொண்டிருப்பாரேயானால் அது தான் அவரின் இனப்பற்றைப் பறைசாற்றி இருக்கும் என்பது மட்டுமல்ல எதிகளை நடுக்கம் அடையவும் செய்திருக்கும். கலைஞரின் இரங்கல் கவிதையானது உண்மையான இனப்பற்றா அல்லது அரசியல் தந்திரமா? உண்மையான இனப்பற்றாக இருந்தால் அது மிகக் கொடிய விடம் ஆயிற்றே என்று ஜெயலலிதாவுக்கு அப்பால் பயந்து கொண்டிருந்த சிலருக்கு கலைஞரின் மறுப்பு நிம்மதியை ஏற்படுத்தி விட்டது. அந்த வகையில் ஈழத்தமிழர் துயரத்தை கலைஞரும் விரும்பியோ விரும்பாமலோ அரசியல் ஆக்கிவிட்டு நிற்கின்றார்.
இனி நெடுமாறனை எடுத்துக் கொண்டால் புலிகளிடத்திலே மிகுந்த பற்றுடையவர். ஈழத்தமிழரின் துன்பியல் வாழ்வை நேராகக் கண்டவர். அந்தத்
துயர வாழ்வுக்குப் பரிகாரம் தனித் தமிழ் ஈழம் ஒன்றே என்ற எண்ணப் பாட்டை தனது பேச்சிலும் எழுத்திலும் செயலிலும் காட்டுபவர். ஈழ விடுதலைக்காக சிறை சென்றவர். ஆனால் இவையெல்லாம் ஈழ விடுதலையைப் பெற்றுத் தந்துவிடாது என்பதனை உணரத் தவறியவர் அவர். உணர்ந்திருந்தால் தடையை மீறி ஊர்வலம் நடத்தி தமிழ்ச்செல்வனின் துயர முடிவை அரசியலாக்கி இருக்க மாட்டார்.
தமிழ்ச்செல்வனைக் குண்டு வீசிக் கொன்றுவிட்டு புலிகள் என்ன செய்வார்களோ என்ற அச்சத்தில் பாதுகாப்பைப் பலப்படுத்திக் கொண்டு நடுங்கிய சிங்கள தேசத்துக்கே எந்தவித தீங்கும் செய்யாமல் அமைதியான வழியில் புலிகளும் ஈழத்து மக்களும் புலம் பெயர்ந்த ஈழத்து உறவுகளும் மறைந்த அரசியல் துறைப் பொறுப்பாளருக்கு வணக்கமும் மரியாதையும் செலுத்தி அதை உலக சமுதாயமே வியப்போடும் அனுதாபத்தோடும் பார்;த்துக் கொண்டிருக்கும் வேளையில் தமிழ்நாட்டில் குடுமிப்பிடிச் சண்டை போடுகிறீர்களே! உங்களை யார் கூப்பிட்டார்கள்? அறிக்கை போராட்டம் கைது பரபரப்பு இவைகளின்றி உங்களுக்குத் தூக்கமே வராதா?
வள்ளத்தில் உணவு கொண்டு ஈழத்துக்குப் புறப்படுவது நடக்காது என்று தெரிந்து கொண்டும் முயன்று கைதாகிறார்கள். கைது நிச்சயம் என்று தெரிந்து கொண்டும் தடையை மீறுகிறார்கள். இதனால் தமிழ் ஈழ விடுதலைக்கு என்ன பயன்? தனையனை இழந்த தந்தையும் மகளை இழந்த தாயும் கணவனை இழந்த மனைவியும் அண்ணனை இழந்த தங்கையும் என்று உதிரத்தில் தியாக வேள்வியில் வேதனையில் கிடக்கும் எங்களை வைத்து அரசியல் பண்ணுகிறார்களே எங்கள் விடுதலை நெருப்பில் குளிர் காய்கிறார்களே இவர்களுக்கு ஒரு கதி வராதா? கடவுளே! இவர்களுக்கு ஒரு கதி வராதா?
முந்தைய ஆட்சியில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதற்கே ஆண்டுக் கணக்கில் சிறைவைத்தார்களே ஆனால் இந்த ஆட்சியில் ஆட்சியாளர்களே இரங்கல் தெரிவிக்கிறார்களே அப்படியாவது போகட்டும் என்று அமைதியாக இருந்தாரா வை.கோ. எங்கள் துன்பத்துக்கு முதல்வர் கலைஞர் அவர்களின் இரங்கல் ஆறுதலாக இருந்தது என்று புதிய அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசன் அவர்கள் ஒரு வாக்கியம் மட்டும் சொன்னாரே ஏன் கூடுதலாகப் பேச அவருக்குத் தெரியாதா? நீண்ட அறிக்கை மூலம் கலைஞரைப் பாராட்டத் தெரியாதா? தெரியும். ஆனால் அதிகம் வார்த்தைகளை விட்டு ஆறுதல் சொன்னவருக்கே அவலத்தை ஏற்படுத்த அந்த அரசியற்புலி விரும்பவில்லை. இது ஈழத்து நாகரீகம். இவையனைத்தும் கலிங்கப்பட்டிச் சிங்கத்துக்குத் தெரியாதா? சுபவீரபாண்டியனுக்குத் தெரியாதா? தெரியும். தெரிந்து கொண்டும் கொக்கரித்தார்கள். தமிழ்ச்செல்வன் மறைவை வைத்து கலைஞருக்குச் சங்கடம் கொடுத்து அதன் மூலம் அரசியல் இலாபம் தேடப் பார்த்தார் வை.கோ. இதுவே அவரின் புலியாதரவுக் கோட்பாடு என்றால் இப்படிப்பட்டவர்களை வைத்துக் கொண்டு எப்படி விடுதலைப் பயணம் மேற்கொள்வது என்று நம்மவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.
இவர்கள் எல்லோரும் தனிஈழ அபிமானிகள் என்ற போர்வையை போர்த்து உலவும் வெற்று மனிதர்கள். இவர்களின் பேச்சோ எழுத்தோ செயலோ ஈழ விடுதலைக்கு கடுகளவும் உதவாது. இவர்களின் அன்புத் தொல்லையால் விடுதலைப் புலிகள் இயக்கம் வருங்காலத்தில் சங்கடங்களைச் சந்திக்கவே சாத்தியங்கள் உண்டு. ஏனெனில் இவர்கள் கழுத்து நரம்பு புடைக்கப் பேசி இன்பம் காண்பவர்கள். பழம்பெருமை பேசிப் பாழாய்ப் போனவர்கள். எதிரிகளுக்குச் சங்கடங்களை ஏற்படுத்த தமது புலியாதரவுக் குரலை உயர்த்;தியும் தாழ்த்தியும் ஒலிப்பவர்கள். குறிப்பாக மக்கள் செல்வாக்கு அற்றவர்கள். மாநில மத்திய அரசுகளில் ஒரு சிறு துரும்பைக்கூட அசைக்க முடியாதவர்கள். சிறு குழுக்களாக இயங்கி அறிக்கைகளில் போர் செய்து காலம் கடத்துபவர்கள். ஏதாவது போராட்டம் நடத்தாமல் இவர்களுக்கு உறக்கம் வருவதில்லை. குண்டு செல் போன்றவற்றின் அகோரம் தெரியாத இவர்கள் பங்கர் வாழ்வைக் கனவிலும் காணாதவர்கள். எங்கள் துயரங்களைத் திரைப்படமாக்கிப் பணம் சம்பாதிப்பவர்கள். ஆனால் நாங்களோ விடுதலையை வென்றெடுக்க ஆயுதம் தரித்தவர்கள். போராட்டப் பாதையிலே நெடும் தூரத்தைக் கடந்தவர்கள். வெந்த சோற்றுக்கும் விதிவந்த சாவுக்கும் பிறக்காதவர்கள். எங்கள் விடுதலையை நாங்களே வென்றெடுத்தால் ஒழிய வேறு யாரும் உதவப் போவதில்லை என்ற உண்மையை உணர்ந்தவர்கள்.
நாங்கள் பயணப்பட வேண்டிய பாதையோ கரடு முரடனானது. நாங்கள் பயணப்பட வேண்டிய தூரமோ மிகவும் தொலைவானது. நாம் சென்றடைய வேண்டிய இலக்கோ வெகு தூரத்தில் உள்ளது. எனவே எங்கள் நடையை நாம் விரைவு படுத்த வேண்டுமென்றால் தேனிசை உட்பட இந்தத் தமிழ்நாட்டுத் தனிமனிதச் சுமைகளை இறக்கி வைக்க வெண்டும். தமிழக மக்களுக்கும் எங்களுக்கும் இடையே இருக்கக் கூடிய ஆத்மாத்த உறவை அலைக்கழிக்கும் செயலை இனியும் இவர்கள் தொடர்ந்தால் நாம் மலையாளம் தெலுங்கு கன்னடம் போல ஈழமொழி ஒன்றை உருவாக்கி இவர்களுடனான மொழித்தொடர்பை நாம் அறுத்துக் கொள்ள வேண்டும். இவர்களை விட்டுத் தூர விலக வேண்டும். அப்போதுதான் இவர்களின் இன்றைய சீர் கெட்ட கலாச்சாரங்கள் ஈழ மண்ணில் பரவாமல் எங்கள் எதிர்காலச் சந்ததிகளைக் காத்துக் கொள்ள முடியும். எப்பவும் புலிகளுக்கு வரிகளே அழகு. திராவிட மான்களின் புள்ளிகள் அல்ல. இந்த வார்த்தையில் அடங்கியிருக்கும் பொருளை உணர்ந்து கொள்ள வேண்டியது ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல. ஈழத்துப் புலிகளும் தான். இன்று இதை நாம் உணரத் தவறுவோமாகில் நாம் உணருகின்ற காலம் வரும்போது எல்லாம் முடிந்து போயிருக்கும்!
ஈழநாடு கனடா November2007