மணி மேகலைக் கவிதையும் மருதகாசிக் கவிஞரும்!
1956ம் ஆண்டு வெளிவந்தது ரம்பையின் காதல் என்று ஒரு படம். அதிலே மருதகாசி எழுதி ரி.ஆர். பாப்பா இசையமைத்து சீர்காழி கோவிந்தராஜன் பாடிய சமரசம் உலாவும் இடமே என்ற பாடல் இத்தனை ஆண்டுகள் கடந்தும் இன்றும் கேட்போர் மனத்தில் அருமையான பாட்டு என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விடுகின்றது.
சேவை செய்யம் தியாகி சிங்கார போகி
ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி
எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே
வாழ்க்கையிலே இதுதான் நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே
என்று சுடலையின் சமரசத் தன்மை பற்றிக் குறிப்பிடுவார் மருதகாசி. உண்மையில் இது அவரது கருத்து அல்ல. சங்கம் மருவிய அறநெறிக்காலத்திலே எழுந்த மணிமேகலை என்ற காப்பியத்தை எழுதிய புத்த துறவியாகிய சீழ்த்தலைச் சாத்தனார் என்பவராலேயே இந்தக் கருத்து முதலில் சொல்லப்பட்டது. அதையே மருதகாசி இந்தப் பாடலில் எடுத்துச் சேர்த்துக் கொண்டார்.
தவத்துறை மாக்கள் மிகப்பெரும் செல்வர்
ஈற்றிளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர்
முதியோர் என்னான் இளையோர் என்னான்
கொடுந்தொழிலாளன் கொன்றனன் குவிப்ப இவ்
அழல்வாய்ச் சுடலை தின்னக் கண்டும்
கழிபெரும் செல்வக் கள்ளாட்டு அயர்ந்து
மிக்க நல்லறம் விரும்பாது வாழும்
மக்களில் சிறந்த மடவோர் உண்டோ(மணிமேகலை – சக்கரவாளக் கோட்டம் உரைத்த காதை)
கொடிய தொழில் புரிபவனாகிய இயமன் இவர்கள் தவம் செய்யும் துறவிகள் இவர்கள் பணக்காரர்கள் குழந்தையைப் பெற்ற இளம் பெண்கள் சிறுவர்கள் வயது முதிந்தவர்கள் இளையவர்கள் என்று வெறுபாடு பார்க்காமல் எல்லோருடைய உயிரையும் எடுத்துவிடுவான். அவ்வாறு உயிர் போன பிணங்களை எல்லாம் எந்தவித உயர்வு தாழ்வும் பார்க்காமல் சுடலையிலே நெருப்பு உண்டுவிடும். இதைக் கண்ட பின்பு கூட செல்வத்தைச் சேர்த்துக் கொண்டு கள்ளுண்டு மகிழ்ந்து வாழ்ந்து நல்ல அறநெறியிலே வாழ்வைச் செலுத்தாத இந்த மனிதர்களைப் போல மடையர்கள் வேறுயாராவது இருக்கிறார்களா? என்பதே இந்தச் செய்யுளின் பொருள்.
இந்தச் செய்யுளை மனதில் நிறுத்திக் கொண்டு சமரசம் உலாவும் இடமே என்ற பாடலை முழுவதும் கேளுங்கள். முன்னோர்கள் காட்டிய வழியைப் பின்பற்றி மருதகாசி கண்ணதாசன் பார்வநாத சிவன் போன்றோர் எவ்வளவு கவனமாக திரைத்துறையில் பயனித்திருக்கின்றார்கள் என்பது தெரியவரும்.