கண்ணப்பர் செய்ததும் கடவுள் ஏற்றதும்!
கண்ணப்பர் செய்ததும் கடவுள் ஏற்றதும்!
பொன் முகலி ஆற்றங் கரையிலே வீற்றிருந்த காளாத்தி நாதர் என்ற இறை விக்கிரகத்துக்கு மேலே வேட்டுவனான கண்ணப்பர் வாயிலே கொண்டு சென்ற எச்சில் நீரைக் கொப்பளித்தார். பன்றி இறைச்சியைச் சுவை பார்த்துப் படைத்தார். இறைவன் அதைப் பொறுத்துக் கொண்டான் ஏற்றுக் கொண்டான் எனவே உண்மை அன்புக்கு முன்னால் ஆகம விதிமுறைகள் தேவையற்றன என்று ஒரு கருத்துப் படித்தவாகள் மத்தியிலும் நிலவுகின்றது. உண்மை அதுவல்ல.
மகா பாரதத்திலே காட்டில் வேட்டுவக் கோலத்தில் வந்த சிவனும் அருச்சுனனும் ஒரே நேரத்தில் ஒரு பன்றி மீது அம்பு எய்து விடுகின்றார்கள். இரண்டு அம்புகளால் அடிபட்டு வீழ்ந்த பன்றி யாருக்குச் சொந்தம் என்ற கேள்வி எழுந்து வாய்ச்சண்டை கைகலப்பாக மாறி விற்போர் ஆனது. தான் யாரென்பதை அறிவுறுத்த ஒரு போதும் அறுந்து போகாத அருச்சுனன் வில்லை இறைவன் அறச் செய்தான். கோபத்தால் நிலை மறந்த அருச்சுனன் அறுந்த வில்லால் இறைவனின் தலையில் அடித்து வேடனே வேடனே என்று நிந்தித்தான்.
பின்பு இறைவன் காட்சி கொடுத்து என்னை வேடனே வேடனே என்று குலம் குறித்து வைத படியால் அடுத்த பிறப்பிலே வேடனாகப் பிறந்து திருக்காளாத்தி மலையிலே ஆறு நாட்கள் என்னை வழிபட்டு முத்திபெறுவாய்! எந்தப் பன்றிக்காக என்னுடன் நீ யுத்தம் செய்தாயோ அந்தப் பன்றியே உன்னை என்னிடம் கொண்டு வந்து சேர்க்கும் என்று கூறி மறைந்தான். குலம் குறித்துப் பேசியதற்கு ஒரு பிறப்பு வந்தது. யாரையும் குலம் குறித்து இகழக் கூடாது.
அந்த அருச்சுனன் ஆத்மா அடுத்த பிறப்பிலே வேட்டுவர் குடியிலே திண்ணன் என்ற பெயரோடு வந்து பிறந்தது. அதனாலே தான் சிறு வயதிலே வில் வித்தையில் சமானம் இல்லாமல் திகழ்ந்தான் திண்ணன். முற்பிறவித் தொடர்பினால் இந்தப் பிறவியிலும் பன்றி குறுக்கிட்டது. அதைத் துரத்திச் சென்றுதான் காளாத்தி நாதரைக் கண்டான் திண்ணன்.
எனவே திடீரென்று ஏற்பட்ட மானுட உறவு அல்லக் கண்ணப்பர் பக்தி. வாயிலே கொண்டு வந்த நீரை இறைவன் மீது கொப்பளித்தார் என்றால் வாய் குடம் பற்கள் அற்சிதைகள் நாக்கு மாவிலை. மீசை தர்ப்பை. வெளி உலகுக்கு எச்சில் நீராகத் தெரிந்தது உண்மையிலே மிகப் பெரிய ஆகம அபிசேகம். அதனால் இறைவன் பொறுத்தக் கொண்டான்.
– கிருபானந்த வாரியார்.