பெய்யெனப் பெய்யும் மழையும் பொய்யெனச் செய்த உரையும்

தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை

 

தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை

 

மனைவியைப் பற்றிப் பேசும் அழகான குறள். ஆனால் அவசரப்பட்டுப் பொருள் எழுதி அதன் அழகைக் கெடுத்து விட்டார்கள் எல்லா உரை ஆசிரியர்களும்!

 

பிற தெய்வம் தொழாது தன் கணவனாகிய தெய்வத்தைத் தொழுது துயில் எழுபவள் பெய்யென்று சொல்ல மழை பெய்யுமாம்! இது பரிமேலழகர் உரை.

 

இதற்குத் திராவிடப் பகுத்தறிவு வாதிகள் என்ன சொல்கின்றார்கள் என்று பார்த்தால் வான் புகழ் கொண்ட மேலான ஒருவர் என்ற காரணத்துக்காக ஒருவரைப் பின்பற்றி நடக்காமல் தன் கணவனை மட்டும் எண்ணி அவனுக்கு ஏற்றபடி அவனைப் பின்பற்றி நடப்பவள் பெய்யவேண்டும் என்று விரும்பும் காலத்தே பெய்யும் மழையைப் போன்றவள் ஆவாள் என்று பொருள் சொன்னார் நாவலர் நெடுஞ்செழியன்.

 

தெய்வத்தை நேசிக்கும் பரிமேலழகரும் கடவுளை மறுக்கும் நெடுஞ்செழியனும் பெண் மழை போன்றவள் என்பதில் மாறுபடவில்லை.
இந்த உரைகள் எல்லாம் தவறானவை அல்ல. வாழ்ந்த காலம் சார்ந்திருந்த கொள்கைகள் என்பவற்றை ஒட்டிப் பிறந்த உரைகள் அவை. ஆனால் வள்ளுவர் இவர்கள் எல்லாம் சொல்லும் கருத்தில் இந்தக் குறளை எழுதியிருப்பாரா என்ற சந்தேகமும் எழத்தான் செய்கிறது.

 

முன்னைய அதிகாரங்களில் தன்னால் தொழும்படி வலியுறுத்தப்பட்ட தெய்வம் இந்தக் குறளிலே தொழப்படவில்லை என்கிறார் அவர். அது மடடுமல்ல. வேறொன்று தொழவும் படுகின்றது. அந்த வேறொன்று கொழுநன் எனப்படும் கணவன் என்கின்றார்கள் வாழையடி வாழையாக உரை ஆசிரியர்கள். பண்டிதர்கள் தொடங்கி பல்கலைக் கழகங்கள் வரை ஆம்! என்று தலையை ஆட்டுகிறார்கள்.

 

மிகப்பெரிய அறிவாளியான வள்ளுவர் கடவுளைக் கும்பிடாமல் கணவனைக் கும்பிடுபவள் பெய்யென்று சொல்ல மழை பெய்யும் என்றோ அந்தப் பெண் பெய்யவேண்டிய காலத்து பெய்யும் மழை என்றோ எழுதியிருப்பாரா?

கணவனைக் கும்பிடு என்றாலே வள்ளுவனின் வாழ்வியல் கோட்பாடுகள் எல்லாம் தோற்றுப் போய்விடுகின்றன.

 

தற்காத்து தற்கொண்டான் பேணி என்றுதானே அவன் குறள் எழுதினான்.
கணவனை ஒரு பெண் பேணிக் கொள்ள வெண்டும். கும்பிட்டுக் கொள்ள வேண்டும் அல்ல. இது திருக்குறள்.

 

தற்காத்துத் தற்கொண்டான் பேணி தகைசார்ந்த
சொற்காத்துச் சோர்விலாள் பெண்

 

இந்தக் குறளை வாழ்க்கைத் துணை நலம் என்ற அதிகாரத்திலே  தெய்வம் தொழாஅள் என்ற ஐந்தாவது குறளுக்கு அடுத்ததாகக் கொண்டு போய் வைத்தார் வள்ளுவர். கணவனைக் கும்பிடுங்கள் என்று தான் சொன்னதாக எவரும் நினைத்து விடக் கூடாது என்பதற்காக!

 

பெண்களே! முதலில் உங்களைத் தற்காத்துக் கொள்ளுங்கள்! பின்பு உங்களைத் தற்கொண்ட கணவனைப் பேணிக் கொள்ளுங்கள்! இதற்காக தகை சார்ந்த நல்ல வார்த்தைகளைப் பேசிக் கொள்ளுங்கள்! இந்த செயல்களிலே என்றும் சோர்ந்து விடாமல் விழிப்போடு என்றும் இருங்கள்! இவையே வள்ளுவ நீதி!

 

பத்துப் பாட்டில் ஒன்றாகிய பொருநராற்றுப் படையில் முடத்தாமக் கண்ணியார் என்று புலவர் ஒரு செய்தி சொல்லுவார். பகலிலும் இரவிலும் இறைச்சியை உண்ட காரணத்தால் வயலை உழுத கலப்பையைப் போலப் பற்கள் முனை மழுங்கிப் போய்விட்டனவாம்!

 

கொல்லை உழுகொழு ஏய்ப்பப் பல்லே
எல்லையும் இரவும் ஊன்தின்று மழுங்கி!

 

இது அவர் செய்யுள் அடிகள்!

 

எனவே நாமும் வள்ளுவனின் கொழுநன் தொழுது எழுவாள் என்பதற்கு கலப்பையை நன்கு கும்பிட்டுக் கொண்டு துயில் எழுவாள் என்று பொருள் கண்டால் என்ன? கொழு என்றால் கலப்பை தானே!

 

இப்படிச் சொன்னதும் அது சந்தி விதிக்குப் பிழை புணர்ச்சி விதிக்குப் பிழை யாப்பத் தவறு  என்றெல்லாம் வரிந்து கட்டுவார்கள் தமிழ்ப் பெரியார்கள். அது உண்மையல்ல. திருக்குறள் மனித வாழ்க்கைக்கு ஆனது. இலக்கணத்துக்காக எழுதப்பட்டது அல்ல.

 

அப்படி இலக்கணம் பூசினாலும் இல்முன் என்பதை முன்றில் என்று இவர்கள் புணர்த்துகிறார்களே அது போல நற்கொழு கொழுநன் ஆயிற்று என்று எடுத்துக் கொள்வோம்! எப்படிப் பார்த்தாலும் இந்தக் குறளிலே வரும் கொழுநன் கணவன் அல்ல

 

எனவே அதிகாலையில் கணவன் வயலுக்குக் கொண்டு சென்ற கலப்பையின் நினைவோடு துயில் எழுந்து அதை வணங்கி வாழ்வின் வளத்துக்குப் பொருள் ஈட்டித்தரும் ஆரம்ப நாளான இன்றைய உழவு நன்றாக அமைய வேண்டும். என் கணவனும் எருதுகளும் துன்பமுறா வண்ணம் நிலம் மென்மையாக இருக்க வேண்டும்! நீ பெய்ய மாட்டாயா என்று தினமும் வணங்கும் தெய்வத்தையே இன்று வணங்க மறந்தவளாக வானத்தைப் பார்த்து ஏங்கும் ஒரு மனைவி பெய்யென்று சொல்ல அவளின் கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்து தன்னை வணங்கா விட்டாலும் தெய்வம் அவளுக்காக மழை பெய்விக்கும்!

 

இவ்வாறு பொருள் கண்டால் எவ்வளவு அழகும் ஆழமும் யதார்த்தமும் இருக்கும்! இதை விடுத்து ஏதோ தெய்வத்தை வணங்க விரும்பாதவள் போலவும் கணவனைக் கும்பிடும் பாமரப் பெண் போலவும் அப்படிக் கும்பிட்டால் மழை பெய்யும் என்பது போலவும் இந்தக் குறளின் பொருளைக் குறுக்கி வைத்திருக்கின்றோம்!

 

தொழில் சார்ந்த எண்ணங்களும் கணவன் மனைவியரிடையே உருவாக வேண்டும். உணவு அன்பு அறம் விருந்து காதல் கற்பு  என்பவற்றோடு மட்டும் இல்வாழ்வு நின்று விடுவதில்லை. அதையெல்லாம் கடந்து தொழில் வழியாலும் மனைவியின் எண்ணம் கணவனைப் பேணுவதாக அமைய வேண்டும் என வள்ளுவன் விரும்பி இருக்கலாம்.

 

பொருள் ஈட்டும் வழியில் உள்ள இடர்களையும் உணர்ந்த இலட்சியப் பெண் ஒருத்தியை இக் குறள் மூலம் படைக்க வள்ளுவன் முயன்றிருக்கக் கூடும்! அதை முறியடித்த பெருமை அன்றைய பரிமேலழகருக்கு மட்டுமல்ல இன்றைய படித்தவர்கள் கூட்டத்துக்கும் உரியதாகும்!

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.