சில கேள்விக்குப் பதிலேது?
சற்குணத்திற்கு இப்போது உயிர் இல்லை. முப்பத்தேழு வருடங்களாகத் தன் கூடவிருந்த உயிரை மாடியிலிருந்து குதித்து வலுக் கட்டாயமாக அனுப்பி விட்டுக் கண்மூடிக் கிடந்தான் பிணமாக!
இன்று மாலையே ஈமக்கிரியைகள் என்று இருபத்தியொரு உறவினர்கள் பெயருடன் பத்திரிகைகள் அறிவித்து விட்டன. அதை அப்படியே செய்திக்குப் பின்பு வானொலியிலும் சொல்லி விட்டார்கள்!
அவனின் பிணத்துக்கு மட்டும் பார்க்கிற சக்தி இருந்தால் தகவல் கொடுத்தவர்களையும் தொலைபேசி இலக்கத்தையும் பார்த்து இன்னுமொரு தரம் மாடி ஏறிக் குதித்திருக்கும்! நல்ல காலம். அதுக்கு எதுவும் தெரியவில்லை.
நிறை தெரியாச் சுமைகளாக பழங்காலக் கல்வெட்டுகளாக கேள்வியும் குழப்பமும் நிறைந்த எத்தனையோ கனடியத் தமிழ் மரணங்களில் ஒன்றாகி விட்டது அவன் சாவும்! கண் நிறைந்த மனைவி கைநிறைந்த குழந்தைகள் என்று நல்லதொரு வாழ்க்கை வட்டம் இருந்தும் உயிருக்கும் உடலுக்கும் வேதனை மிக்க ஒரு சாவையும் தேடித்தான் ஆக வேண்டிய கட்டாயம் இருந்தது அவனுக்கு!
கனடாவைப் பொறுத்தவரை அவன் மனைவிக்கும் அன்றாடத் தேவைகளில் இருந்து தாலி சற்குணம் என்ற இரு பொருட்கள் குறையப் போகின்றன அவ்வளவுதான்! எல்லாவற்றுக்கும் விதி என்று தலைப்புக் கொடுத்துவிட்டு வாழ்வுக் கட்டுரையை ஆரம்பிக்கத்தான் போகின்றாள் குழந்தைகள் என்ற புத்தகத்திற்காக!
மனைவி தேவியும் பிள்ளைகளும் அழுது கொண்டிருந்தார்கள். உறவினர்களைக் காணும் போது கத்தி அழுவதை விட இடையிடையே அவள் வெம்பி அழுவது தான் பார்ப்பதற்கு ஒருவராலும் சகிக்க முடியாமல் இருந்தது.
ஆனால் சற்குணம் முகம் மலர்ந்து கிடந்தான். அவன் நினைத்தது போல எதுவித சிரமமுமின்றி தற்கொலை என்று முடிவாகி ஆஸ்பத்திரியில் இருந்து இன்று காலையே உறவினர் பார்வைக்காக பெட்டியோடு மண்டபத்துக்கு வந்து விட்டான்.
ஏதாவது பிரச்சினை வந்திருந்தாலும் கூட தேவியினுடைய ஆட்கள் ஊரிலே முன்பு மனநல பிரச்சனைக்காக மருந்து எடுத்தது என்று துண்டு வாங்கிக் கொடுத்துப் பிரச்சினையை முடிக்கப் பின்னிற்க மாட்டார்கள் என்பது அவனுக்கும் தெரியும்.
காசு பணத்துக்கு அலையும் போது முகம் காட்ட மாட்டார்களே ஒழிய மற்றப்படி இப்படிப்பட்ட அண்ணாவி வேலைகளுக்கு அவர்களை மிஞ்ச ஆட்களில்லை என்பது சற்குணத்துக்குத் தெரியும். அதனால் அவன் எதற்கும் கவலைப்படாது அசைவற்றுக் கிடந்தான்.
இன்னும் கொஞ்ச நாளில் நான்கு தேவாரத்துடன் பொய்யெல்லாம் எழுதப்பட்ட புத்தகமாகக் கிடந்து வீடு வீடாக காலில் மிதிபடப் போகும் தான் இனிக் கவலைப்பட்டுத்தான் என்ன என்று கூட அவன் மனம் நினைத்திருக்கலாம்.
எது எப்படியானாலும் இதுவரை காலமும் போலில்லாது இனி யாருடைய கரைச்சலும் இன்றி நிம்மதியாக ஒரு கடதாசி மாலையோடு சுவரிலே படமாகத் தொங்க வேண்டும் என்ற அவனின் இலட்சியம் நிறைவேறி விட்டது.
முந்த நாள் தமிழ்க் கடையிலை கண்டு கதைச்சவனடாப்பா. இன்றைக்கு இல்லை. என்ன மனிசற்றை வாழ்க்கை? கதிரேசு மாமா கவலைப்பட்டுச் சொன்னார். சற்குணம் கூட நாளைக்குத் தனக்குச் சாவு என்று அப்போது எண்ணியிருக்கவில்லை. ஆனாலும் சாப்பிட்டுக் கொண்டிருந்த சோற்றைப் பாதியிலே தள்ளி விட்டு;ப் போட்டு வாழ்க்கையை முடித்துக் கொள்ள வேண்டியதாய்ப் போய் விட்டது. அதற்கும் காரணம் இருந்தது.
வழமைக்கு மாறாக அன்று வேலையை பிற்பகல் இரண்டு மணியோடு முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்த நேரந் தொடங்கி மனைவி வேலையால் வந்து சாப்பாடு பரிமாறியது வரை அணிவகுத்து வந்த பிரச்சினைகள் அவனைச் சாவுக்குத் தள்ளிச் சென்று விட்டன. ஒரு வேளை வேலை முடிந்து பிள்ளைகளைக் கூப்பிட அவன் பள்ளிக்கூடம் போகாமல் வீட்டுக்கு நேரே வந்திருந்தால் சாவு தவிர்க்கப்பட்டிருக்குமோ என்னவோ. ஆனால் அது நிகழ்ந்து விட்டது!
அன்று மிகவும் குளிரான நாள். தெருவிலே பனியுறைந்து கண்ணாடிப் படையாகத் தெரிந்தது மட்டுமன்றி காருடன் சேர்த்து அவனை இரண்டு இடத்தில் வழுக்கவும் செய்து விட்டது.
ஐயோ இரண்டு பிள்ளைகளும் குளிரிலே நடந்து சாகப் போகுதுகளே என்ற இயல்பான இரக்கம் மேலோங்க பாடசாலைக்குச் சென்றவன் அப்பாவைக் கண்ட மகிழ்ச்சியில் துள்ளி வந்த குழந்தைகளை விரைவாக ஏற்றிக் கொண்டான். பத்து வயது மகள் பேசாமல் தான் இருந்தாள். ஆறு வயது மகன் கைகளை உதறித் துடித்துக் கொண்டிருந்தான்.
என்ன ஜெனா தம்பியை இந்தக் குளிரிலே வெறுங்கையோடை கூட்டிக் கொண்டு வாறாய். உனக்கு அறிவி;ல்லையா?
அம்மா மூன்று தரம் கிளவுஸ் வாங்கிக் குடுத்தும் அவர் தொலைச்சுப் போட்டார் அப்பா!
அவன் குழந்தை. நீ தான் கவனமாகப் பார்த்து அம்மாட்டைச் சொல்லி வாங்கிக் குடுக்க வேணும். பாவமெல்லோ?
நான் சொல்ல அம்மா பேசுறா. அப்பா உழைச்சு உழைச்சு தன்ரை ஆக்களுக்கு அனுப்பட்டும். நீங்கள் குளிருக்கை போய்ச் சாவுங்கோ என்று சொல்லுறா. அப்ப நான் என்ன செய்யுறது இங்கே பாருங்கோ என்ரை கிளவுஸ்சும் ஓட்டை அப்பா.
வார்த்தையின் கனம் தெரியாமல் அம்மா சொன்னதை அப்படியே ஒப்புவித்தாள் மூத்த மகள்!
சற்குணம் மௌனமாக இருந்தான். உண்மையில் வீட்டுக்குப் போக முன்பு இரண்டு பிள்ளைகளையும் கடைக்குக் கூட்டிக் கொண்டு போய் நல்ல கிளவுஸ் வாங்கிக் கொடுக்க வேண்டியது தான் முறை. ஆனால் என்ன செய்வது? காசில்லை. கிளவுஸ் பெரிய காசில்லைத் தான். ஆனால் அதுக்குக் கூட வழியில்லாத நிலை.
கனடாவிலே இப்படியும் வறுமைப்பட்ட சனங்கள் இருக்கிறார்களா? என்று பலரும் நினைக்கலாம். ஆனால் இதையும் விடக் கீழே போய் வாழும் தமிழ்க் குடும்பங்களும் இருக்கத்தான் செய்கின்றன என்பது தான் உண்மை.
அவர்கள் எண்பதாம் ஆண்டுக்கும் தொண்ணூறுக்கும் இடைப்பட்ட காலத்தில் இன்றுள்ள எல்லோருக்கும் முன்பு கனடாவுக்கு வந்து இன்றும் கடனாளிகளாக வாழ்க்கை நடத்துபவர்கள். ஊரிலே தாங்கள் பிறந்த குடும்பத்தை உழைத்துக் காப்பாற்றிய குற்றத்தைத் தவிர வேறு எந்தத் தப்பும் செய்யாதவர்கள்!
நேற்று விடிய சுவாமிப் படத் தட்டிலே இருந்து பொறுக்கிய காசு ஆறு டொலருக்கு அடித்த பெற்றோல் புதன் கிழமை வரைக்கும் தான் காணும். வியாழக்கிழமை ஒரு மாதிரி வேலைக்குப் போகலாம். வரக் காணாது.
ஆயிரம் டொலருக்குக் கார் வாங்கிய இந்த நாலு வருசத்திலும்; பெற்றோல் மீற்றர் முழுமையாக மேலே போன நாட்களை விரல் விட்டு எண்ணி விடலாம். மற்றப்படி எப்பவும் அது அரைவாசிக்கும் கீழே தான் காட்டும்.
நாய்க்கு நடுக் கடலிலே போனாலும் நக்குத் தண்ணி தான் என்ற மாதிரி கனடாவுக்கு வந்தும் ஒன்றுக்கும் உதவாத வாழ்க்கையாயப் போட்டுது.
சற்குணம் உலையைக் கழுவி அரிசி போட்டான். பிள்ளைகள் ஆளுக்கு ஒவ்வொரு பாண் துண்டுகளோடு ரீ.விக்கு முன்னாலே போய் இருந்து விட்டார்கள். மனைவி ஐந்து மணிக்கு வேலையால் வரமுதல் ஏதாவது சமைத்து வைத்தால் சந்தோசப்படும். வாய்க்கு ருசியாக அது ஆசைப்பட்டதில்லை. வயித்துப் பசிக்கு ஏதாவது செய்து வைத்தாலே அதுக்குப் போதும்.
அப்படிச் சொல்லும் போது ஆசா பாசங்கள் அதுக்கு இல்லை என்று பொருள் அல்ல. மற்றவர்கள் போல அதுக்கும் உண்டு உடுத்து நடக்க விருப்பம்தான். ஆனால் சற்குணத்திடம் காசில்லை என்று அதுக்குத் தெரியும். எப்போதாவது அது இருபது டொலர் வாங்கிக் கொண்டு கடைக்குப் போகும். ஒரு டொலர் கடையிலே இரண்டு பி;ள்ளைகளுககும் ஏதாவது வாங்கிக் கொடுத்து விட்டு மிச்சக் காசுக்கு மரக்கறி மீன் என்று ஏதாவது வாங்கிக் கொண்டு வரும். அதனுடைய சந்தோசம் அத்துடன் முடிந்து விடும்.
சற்குணம் பிறிச்சைத் திறந்தான். வல்லை வெளி போல வெறுமையாய்க் கிடந்த அதிலே ஒற்றைப் பனை போல ஒரு கெச்சப் போத்திலும் கல்லறை போன்று ஒரு முட்டைப் பெட்டியும் கிடந்தன. அதிலிருந்த மூன்று முட்டைகளையும் அவியப் போட்டான்.
எப்பவோ எடுக்கும் போது தவறி விழுந்து உருண்டு போய் மூலையில் கிடந்த பெரிய உருளைக் கிழங்கொன்றை நேற்று கூட்டும் போது சற்குணம் கண்டவன். அதையும் போட்டு முட்டைக் குழம்பு வைக்கலாம். ஆனால் உறைத்தால் சின்னப் பையன் சாப்பிட மாட்டான் என்பதை விட பால் முடிஞ்சுது. அது தான் பெரிய பிரச்சினை. சற்குணம் உருளைக் கிழங்கைப் பொரித்தான்.
பிள்ளைகள் சாப்பாட்டைத் திறந்து பார்த்து விட்டு பக்கத்து வீட்டுக்கு விளையாடப் போறம் என்று தான் சொல்லுவார்கள். விளையாட்டை விட அந்த வீட்டு;ச் சாப்பாடு ருசி. இன்றைக்கு விளையாட விடக் கூடாது.
அப்பா! அம்மா வந்திட்டா என்ற மகளின் வாரத்தைகளை முந்திக் கொண்டு ஏனப்பா வேலைக்குப் போகேல்லையா என்ற தேவியின் வார்த்தைகள் தான் சற்குணத்தை முதலில் வந்தடைந்தன.
இரண்டு மணியோடை வந்திட்டன். கனக்க வேலையும் இல்லைத்தான். சும்மா நின்றால் கூட்டு துடை என்பான்கள். அதுதான் வந்தனான்.
நின்றால் காசுதானேயப்பா. இரண்டு மணித்தியாலக் காசென்றாலும் யார் தாறது? இந்த முறை டெலிபோன்; பில் அந்த மாதிரி வந்திருக்குது தெரியுமே!
எனக்குத் தெரியும். நீர் எங்கை சுத்தியும் அங்கே தான் வருவீர் என்று. என்ரை ஐயா அம்மாவோடை டெலிபோன் கதைச்சால் உமக்குப் பிடிக்காது. அது தானே!
உப்பிடிக் குதர்க்க நியாயம் கதைக்காதேங்கோ அப்பா. ஐநூற்றி நாற்பது டொலருக்கு றெட்பில் அனு;பபியிருக்கிறான். இந்தக் கிழமை எங்கன்ரை இரண்டு பேரின்ரை சம்பளத்தையும் சேர்த்தாலும் காணாது. நீங்கள் விளையாடிக் கொண்டு நிக்கிறியள் என்ன?
அதுகள் சேத்திலும் செல்லிலும் தவழ்ந்து வந்து டெலிபோன் எடுத்தால் என்னாலே கதைக்காமல் இருக்கேலாது. பாவங்கள்.
உப்பிடிச் சொல்லிக் கொண்டு இருங்கோ. எங்கன்ரை பாவத்தைப் பார்த்துப் போடாதையுங்கோ. எத்தனை பேரிட்டை எத்தனை ஆயிரம் வட்டிக்கு வாங்கி அனுப்பியாச்சு. எவ்வளவு காசை டெலிபோனுக்கு கட்டியாச்சு. ஏன் நீங்கள் மட்டுந்தான் பிள்ளையோ? மற்ற இரண்டு பேரும் அனுப்பலாம் தானே.
அவையள் காசைச் சேர்த்து வட்டிக்கு குடுத்துப் போட்டு இருக்கட்டும். நீங்கள் கொடை வள்ளல். அனுப்புங்கோ. இனி ஒன்று சொல்லிப் போட்டன். இனிமேல் ஆரிட்டையும் காசு மாறித் தருவேன் என்று கனவிலும் நினைச்சுப் போடாதையுங்கோ
தேவி உள்ளே போய் விட்டாள். சற்குணம் மனதில் ஆயிரம் எண்ணங்கள். தேவி சொல்லதிலும் நியாயம் இருக்கு. கல்யாணம் கட்டிய காலத்தில் மூன்று இலட்சம் காசும் கல்வீடு நகை என்று காணக்கூடிய அளவு கொண்டு வந்தவள். இன்று கடன்காரருக்கு தவணை சொல்வதும் வட்டிக் காரரை மன்றாடுவதும் தான் வாழ்க்கை என்றால் அவள்தான் என்ன செய்வாள்.
கல்யாணத்துக்கு முன்னால் மனைவியை அப்படிப் பழக்க வேண்டும் இப்படிப் பழக்க வேண்டும் என்று எண்ணியிருந்த சற்குணத்தால் இன்று அழகாகப் பொய் பேச மட்டும்தான் பழக்க முடிந்தது.
அம்மா வவுனியாவிலே வந்து போன் எடுக்கிறா அக்கா என்று கனடாவில் இருக்கும் அக்காவுக்குச் சொன்னதுக்கு அம்மா எப்படியாவது என்னையும் மனிசனையும் பிரிச்சுப் போடுறது என்று தான் நிக்கிறா போல கிடக்கு குணம் என்று சொல்லிச் சலித்துக் கொண்டு ஒரு ஐம்பது டொலர் அக்கா தந்ததுக்குப் பின்பு அங்கும் சற்குணம் தொடர்பு வைப்பதில்லை.
ஐயாவும் அம்மாவும் சாகிற அன்றைக்குத் தான் உந்தக் காசு அனுப்புற பிரச்சினை தீரும் அண்ணி! என்று தேவியிட்டை சொல்லி தம்பி எப்ப சிரிச்சானோ அதுக்குப் பிறகு அவனையும் சற்குணம் ஏதும் கேட்பதில்லை.
வெளிநாடு சற்குணத்தை மட்டுந்தான் பெற்றாருக்குப் பிள்ளை என்று ஆக்கி விட்டது. ஒவ்வொரு சகோதரமும் மாதம் பதினைந்து டொலர் தந்தாலே சற்குணமும் ஏதாவது போட்டு ஊருக்கு அனுப்பிப் போடுவான். அந்தக் கருணை மனப்பான்மை தான் கூடப் பிறந்ததுகளுக்கு இல்லாமல் போட்டுதே. என்ன செய்யிறது?
அம்மா கூப்பனுக்குத் தாற சீனியை ஊர்ச் சனத்துக்கு வித்து எங்களுக்கு சோறு தந்தது. ஐயா பால் மாட்டையும் கன்றையும் வித்து தம்பியை படிப்பிச்சவர். எல்லாத்தையும் கனடா வந்து மறந்து போனான்கள். ஆனால் சற்குணத்தாலே மறக்க முடியவில்லை.
யார் அருளானந்தம்? அந்தப் பெரியவராய்த் தான் இருக்க வேணும். மகன் சற்குணம் போன் என்று சொல்லுங்கோ. நடக்க மாட்டார். ஒருக்கால் கையைப் பிடிச்சு கூப்பிடுங்கோ. வை.எம்.சி.ஏ காரன் வவுனியாவிலே கூப்பிடும் விதத்திலேயே தந்தையின் முதுமை சற்குணத்தின் மனக்கண் முன் நிழலாடும்.
ஊர் இல்லை. உழைப்பு இல்லை. பிள்ளைகள் பக்கத்திலே இல்லை. முதுமையை விட இந்தத் தனிமைதான் அங்குள்ள சனத்துக்கு பெரிய கொடுமையப்பா. காசைப் பார்த்து வெளிநாட்டிலே இருக்கிறவன் டெலிபோன் எடுக்காமல் இருக்கிறானே எவ்வளவு பாவம். நொந்து நைந்து கிடக்கிற அதுகளுக்கு ஒருக்கால் போன் எடுத்து அப்பா அம்மா என்று ஒரு வார்த்தை பேசினாலே புது இரத்தம் ஏறுமே. இங்குள்ள பாவிகள் நினைக்கிறான்கள் இல்லையே!
ஐயா வந்து தம்பி எப்படி இருக்கிறாய்? தேவி பிள்ளைகள் எப்படி இருக்கினம்? என்று கேட்கும் போதும் அக்கா ஆட்கள் உதவி செய்யாவிட்டால் போகட்டும். காரியமில்லை. நான் உன்னோடை தான் கதைக்க வந்தனான் என்று சொல்லும் போதும் மனதின் கனமெல்லாம் போய் அது சற்று நேரம் இலேசாகிவிடும;;
இங்கே நாங்கள் பிச்சை எடுக்கிற நிலமையைச் சொல்லுங்கோ என்று டெலிபோன் கதைக்கும் போது தேவி பின்னால் இருந்து கிசுகிசுத்தாலும் சற்குணம் தனது நிலையைச் சொல்லாததற்கு அதுவும் ஒரு காரணம்.
தேவி தோய்ந்து விட்டு வந்தாள். பிள்ளையள் வாங்கோ சாப்பிட! அப்பா உங்களுக்கும் சாப்பாடு போடுறன்.
போடும்.
பிள்ளைகள் சாப்பாடு பிடிக்காமல் பினைந்து கொண்டிருக்க தேவி தலை குனிந்து சாப்பிட்டாள். சற்குணம் தள்ளியிருந்து சாப்பிட்டான்.
தேவி! ஏனப்பா பேசாமல் இருக்கறீர்;? அழுகிறீரா ஏன்?
ஒண்டுமில்லை!
இல்லைச் சொல்லப்பா!
இன்றைக்கு எனக்குச் சுகமில்லையப்பா! பக்கத்து வீட்டுக் காந்தி அக்காட்டைத் தான் விடிய இரண்டு கோட்டெக்ஸ் வாங்கிக் கொண்டு வேலைக்குப் போனனான். இதைக் கூட பக்கத்து வீட்டிலே இரவல் வாங்க வேண்டியதாய்ப் போச்சு!
அடுத்தடுத்த மாதங்களிலே ஜெனாவும் பெரிசாகி விடும் போல கிடக்குது. நாளைக்கு அதுவும் காந்தியக்கா வீட்டு வாசல்லே தான் போய் நிற்குதோ தெரியாது!
ஒன்றுமே இல்லை. நேற்றும் துரையண்ணை ரெலிபோன் எடுத்து வட்டிக் காசு மூன்று மாதம் தரவில்லை என்று ஏசுறார். டெலிபோன் சத்தம் கேட்டாலே பயமாய்க கிடக்குது. எந்தக் கடன்காரன் எப்ப ஏசப் போறானோ என்று செத்துப் பிழைக்க வேண்டியிருக்குது. நிம்மதியே இல்லாமல் போட்டுது.
பொறும் இப்ப என்னை என்ன செய்யச் சொல்லுறாய்? நான் சாகிறதா?
நீங்கள் ஏனப்பா சாக வேணும்? இரண்டு பிள்ளைகளும் நானும் செத்துத் தொலைந்தால் சரி!
இனிமேல் ஊருக்கு அனுப்புறதை விட்டுப் போட்டு இங்கே உள்ள கடன் கஸ்டத்தை பாருங்கோ. எனக்கும் ஊரிலே அம்மா தங்கச்சி ஆட்கள் இருக்கினம். உப்பிடி அடிக்கடி கொழும்புக்கு வந்து உயிரை எடுக்கேல்லை! உங்களின்ரை ஆட்கள் மட்டும் ஏன் இப்படிச் செய்யினம்?
தேவி என்ரை ஐயா வாழ்க்கையிலே பக்கத்து ஊருக்குப் போகாதவர். யாரையும் காசு என்று கேளாதவர். நாட்டுப் பிரச்சினையாலே தான் இவ்வளவு தூரம் அலைஞ்சு வந்து கை ஏந்துறார் .
பெரியக்கா அக்கராயன் ஆஸ்பத்திரியிலே இருக்குதாம்! மலேரியா காச்சலாம்! அத்தானும் உயிரோடு இல்லை!
அது உனக்கு விளங்கேல்லை. அதுகளிலும் பிழையில்லை. உன்னுடைய இடத்திலே இருந்து பார்த்தால் நீ சொல்லுவதிலும் பிழையில்லை. எப்பவும் ஒரு பிரச்சினையிலே ஒரு பக்கம் தான் சரியான நியாயம் இருக்கும். ஆனால் இங்கே இரண்டு பக்கமும்; சரியாய்த்தான் இருக்குது.
ஊரிலே இருந்து காசு கேட்டு வாறவனும் பிள்ளைகள் சகோதரங்கள் என்ன கெதிப்படுகுதுகள் என்று உணர மாட்டேன் என்கிறான். இங்கே உள்ளவனும்; பெற்றார் சகோதரங்கள் மாமன் மாமி என்ன கெதிப்படுகினம் ஊரிலே என்று உணர மாட்டேன் என்கிறான்.
ஐயோ! எனக்கு எல்லாம் தெரியுமப்பா! ஆனால் வாடகை காசு போடவில்லை என்று சிவப்பு துண்டு கொண்டபோய் கதவிலே ஒட்ட மாட்டான்கள் அங்கே! இங்கே எல்லாம் சட்டப்படி நடக்க வேணுமப்பா! கொஞ்சம் சிந்திச்சுப் பாருங்கோ.
சற்குணம் திருப்பிக் கதைக்கவில்லை. கதைத்து தேவியை வெல்ல முடியாது என்று அவனுக்குத் தெரியும்!. பழையபடி கை கால் நீட்ட வேணும். பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள்.
நான் பாசத்தை வளர்த்து அதுகளாலே கஸ்டப்படுகிறன். பந்தத்தை வளர்த்து உங்களாலே கஸ்டப்படுகிறன். எனக்கு என்ன செய்யிறது என்றே தெரியேல்லை. ஒரு வேலையல இரண்டு மூன்று என்று செய்து பார்த்தாகி விட்டது. முடியல்லே! நான் இல்லாத காலத்திலாவது எனது சகோதரங்கள் உணர்ந்து பெற்றாருக்கு ஏதாவது அனுப்பட்டும்!
என்னைக் கட்டிய ஒரு குற்றத்துக்காக அனுபவிக்கக் கூடாத துன்பங்களை அனுபவிக்கும் தேவி நான் இல்லாத காலத்திலாவது கனேடியச் சட்டங்கள் சலுகைகள் மூலம் ஏதாவது உதவி பெற்று நிம்மதியாக வாழட்டும்!
எனக்கு சாக விருப்பம் இல்லை! வாழத்தான் ஆசை! என்னசெய்வது? தேவி நல்லது! அம்மா அப்பாவும் நல்லவர்கள்! ஒரு பகுதியினர் சரியில்லை என்றாலும் மற்றப் பகுதியினர் சொல்வது தான் சரி என்று நிம்மதியாக சேர்ந்து வாழலாம்! ஆனால் எல்லாருமே நல்லவர்களாக இருக்கிறார்களே! எல்லோருடைய நியாயங்களும் சரியாகத் தான் இருக்கே! நான் என்ன செய்ய?
மனைவிக்கும் பெற்றோருக்கும் இடையில் கிடந்து தினமும் சாவதை விட ஒரேயடியாகச் செத்துப் போவதுதான் வழி! நான் செத்ததுக்குப் பின்பு சற்குணம் மடையன் என்று சொல்லுவான்கள்! கனடாவிலே வாழ எத்தனை வழிகள் இருக்கு என்று நியாயம் கதைப்பான்கள்! இதற்கு இது தீர்வு அல்ல என்று சத்தம் போடுவான்கள்! இதெல்லாம் செய்தியாக மட்டுமே பேசக் கூடிய விசயங்கள்!
சற்குணம் சாப்பாட்டுக் கோப்பையைத் தள்ளி விட்டு பலகணியால் வெளியே குதித்து விட்டான்.
சற்குணத்திற்கு இப்போது உயிர் இல்லை. முப்பத்தேழு வருடங்களாகத் தன் கூடவிருந்த உயிரை மாடியிலிருந்து குதித்து வலுக் கட்டாயமாக அனுப்பி விட்டுக் கண்மூடிக் கிடந்தான் பிணமாக!
(ஈழநாடு பத்திரிகையில் பிரசுரமான கதை)