சோதிடச் சிரிப்பு!
ஆடுகளுக்குப் புல் அறுத்துக் கொண்டிருந்த பூரணம் ஆச்சி தற்செயலாகத்தான் காதைத் தடவிப் பார்த்தாள். வலது காதில் தோடு இருந்த இடம் வெறுமையாக இருந்தது. ஆச்சிக்கு நெஞ்சு திக்கென்றது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை முழங்கால் அளவுக்குப் புற்களே வளர்ந்திருந்தன. எங்கே தோடு விழுந்ததோ தெரியாது.
நடேசுக் கிழவர் அவர்தான் பூரணம் ஆச்சியின் கணவர் இறந்தபின்பு எல்லா நகைகளையும் பிள்ளைகளுக்குப் பிரித்துக் கொடுத்துவிட்டு அந்தச் சிவப்புக் கல்லுத் தோடுகளை மட்டும் நடேசரின் ஞாபகத்துக்கு ஆச்சி வைத்திருந்தாள். அதில் ஒன்று தான் இப்போது விழுந்து விட்டது.
ஐயோ தியாகராசண்ணே! என்ரை தோடல்லோ விழுந்து போச்சு. இந்தப் பற்றைகளுக்குள்ளே நான் எங்கே தேட! எவ்வளவோ காலமாய்ப் பொத்தி வைச்சிருந்து இப்படியாகப் போட்டுதே என்று சற்றுத் தள்ளி புல் அறுத்துக் கொண்டிருந்த தியாகராசா கிழவரிடம் புலம்பினாள் ஆச்சி.
பூரணம்! பொழுது இருட்டிக் கொண்டு வருகுது. இனித் தேடி எடுக்க மாட்டாய்! ஓடிப்போய் சபாபதிச் சாத்திரியாரிட்டை ஒரு நினைத்த காரியம் சாத்திரம் கேள். மனுசன் சொன்னால் சொன்னது தான். வைச்ச இடத்திலே எடுக்கிற மாதிரி எடுக்கலாம் பூரணம்! முந்தி சும்மா சொல்லுற சாத்திரியார் இப்ப நொச்சியடி வைரவருக்கு எண்ணெய் வாங்க என்று இரண்டு ரூபாய் கேட்கிறவர். இரண்டு ரூபாய் போனாலும் தோடு வந்திடுமல்லோ. கெதியாகப் போ. இருட்டினால் சபாபதியர் சாத்திரம் சொல்லுறதில்லை. ஓடிப் போ. ஓடு!
தியாகராசர் தோட்டுக்கு வழி சொன்னார். ஓரு கையில் புல்லுக்கடகம் மறு கையில் கத்தியுமாக ஓடினாள் பூரணம் ஆச்சி. சாத்திரியார்! சாத்திரியார்! எனக்கு ஒரு நினத்த காரியம் சொல்லுங்கோ படபடத்தாள் ஆச்சி.
பூரணம்! என்னை நம்பி வந்திட்டாய் அல்லவா. ஒன்றுக்கும் பயப்படாதே. அமைதியாக இரு. நான் நொச்சியடி வைரவரைக் கேட்டுச் சொல்லுறன். பூரணத்தின் கையிலிருந்த கத்தியையும் அறுத்த புல்லையும் பார்த்துவிட்டுச் சற்று நேரம் கண்களை முடி வானத்தைப் பார்த்தார் சாத்திரியார். நொச்சியடியானுடன் ஏதோ கதைத்தார்.
பூரணம்! கவலைப்படாதே நீ புல்லறுத்த இடத்துக்கு பக்கத்திலே தென் மேற்குப் பக்கமாக ஒரு முழக் கயிற்றோடு சிக்குப்பட்டு நிக்குது. போய்ப் பிடி என்றார் சாத்திரியார்!