காற்றுவெளி புரட்டாதி 2015 இதழில் என் கவிதை!

எங்களின் பிள்ளைகள்!

பிள்ளையைப் பள்ளியில் விட்டுமே திரும்பும்

பள்ளித் தோழனே நில்லொரு வார்த்தை

புழுதியில் கமுகு மடலினில் இருந்து

ஒருவரை ஒருவர் இழுத்துத் திரிந்ததும்

போட்டிக்குப் பனையின் மட்டையை வெட்டி

இரும்பு வளையம் உருட்டிய பொழுதும்

சயிக்கிள் ரயரினைக் குறுந்தடி கொண்டு

தட்டியே திரிந்த காலமும் நிலத்தில்

தொட்டால் சுருங்கி அருகினில் அமர்ந்து

ஒவ்வொரு இதழையும் தொட்டு மகிழ்ந்ததும்

நாக்கிலே தொட்டு நிலத்திலே வைத்து

வெடி பலூனின் வித்தை வெடித்ததும்

பூமரக் கிளையிளை வேகமாய் அசைத்து

மழைநீர் தலையினை நனைக்கவே செய்தும்

கிட்டியும் புல்லும் தாச்சியும் என்று

கெட்டித் தனங்கள் காட்டிய வாழ்வும்

கொக்கனும் சீனத் தானெனும் கொடியும்

தோட்ட வரம்பெலாம் ஏற்றிய தினங்களும்

பொன்வண்டு பிடித்து நெருப்புப் பெட்டியுள்

அடைத்துக் கொண்டு அலைந்து நடந்ததும்

கம்பளப் பூச்சியை இறைவன் துப்பிய

செய்தியைக் கேட்டுப் பயந்து நடந்ததும்

தண்ணீர் படங்களை எச்சிலில் தொட்டு

புத்தகம் ஓட்டியே பார்த்து இரசித்ததும்

டெல்ரா ரொபியும் குணசரி புல்டோவும்

பொரி விளாங்காயும் பங்கிட்ட பள்ளியும்

கல்லில் குத்திய மாவடுத் துண்டை

உப்பில் தொட்டு உறைக்கவே உண்டதும்

பேனை மையினைக் கோபத்தில் தெளித்து

வாங்கிக் கட்டிய அடிகளும் இன்னும்

அம்புலி மாமாவின் மந்திரத் தேரை

தொடர்ந்து படித்த வாசகர் ஆனதும்

இத்தனை மகிழ்ச்சியும் இழந்திங்கு காரில்

எங்கள் பிள்ளைகள் பள்ளிக்கு ஓடும்

மாட்டுத் தொழுவமாய் மிதிபடும் அறையில்

புத்தகம் உடுப்பு போன் என்று வாழ்க்கை

அத்தனை பிள்ளையும் புலம்பெயர் நாட்டில்

எத்தனை பாவந்தான் செய்தன அவையோ?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.