கம்பனின் சேதுபந்தனப் படலமும் இன்றைய அணுக்குண்டும்!
தமிழர் தகவல் ஆண்டுமலரில் வெளியான எனது கட்டுரை 22.2.2015
ஒரு யுத்தத்தின் வெற்றியை அங்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்களின் திறனே எப்போதும் தீர்மானிக்கின்றன! சிறந்த படை வீரர்கள் அனுபவம் மிக்க படைத்தலைவர்கள் என்பவர்களையெல்லாம் கடந்து ஆயுதங்களே முடிவுகளை எழுதுவதை அன்று இரண்டாம் உலக யுத்தத்திலும் அண்மையில் இரணைமடுக் கரையிலும் நாம் கண்டிருக்கின்றோம்!
அணு ஆயுதம் ஒன்று ஹிரோசிமாவில் வீழ்ந்து வெடிக்கும் வரை அதன் வல்லமையும் அதன் கொடுந் தன்மையும் யாருக்கும் தெரிந்து இருக்கவில்லை! பின்புதான் இவ்வளவு அனர்த்தங்கள் நடந்தேறிவிட்டன என்று உலகம் நடுங்கிப் போனது!
மக்கள் மடிந்தார்கள்! வானம் கரிய மழை பொழிந்தது! இரும்புகள் உருகின! நீர் ஆவியாகியது! எங்கும் அளவு கடந்த தீச்சுவாலை! இதையெல்லாம் உலகம் ஜப்பானில் கண்டு ஏங்கியது போல இதிகாசமான கம்பராமாயணத்திலும் ஒரு தாக்குதல் நிகழ்ச்சி கம்பனால் காட்டப்படுகின்றது!
அந்த நிகழ்வின் விழைவுகள் ஜப்பானை ஒத்திருப்பதால் அங்கு நிகழ்த்தப்பட்டதும் ஒரு அணு ஆயுதத் தாக்குதல் தான் என்று நாம் இனங்கண்டு கொள்ளலாம்! ஆனால் சொன்னவன் தமிழன் ஆயிற்றே! சொல்லப்பட்ட இடம் இதிகாசம் ஆயிற்றே! உலகம் ஏற்குமா?
நடைமுறைக்கு ஒத்துவராத பத்துத் தலையோடு கூடிய ஒரு பாத்திரத்தைப் படைத்ததன் மூலம் எத்தனையோ விஞ்ஞான உண்மைகளைத் தெரிந்து வைத்திருந்த காப்பியத்தில் இராமனை மட்டும் போற்றிக் கொண்டு ஏனையவற்றை தவறவிடும் சூழ்நிலையை கம்பனே ஏற்படுத்தித் தந்திருக்கின்றான்!
இராவணனால் சிறைப்பிடிக்கப்பட்ட தன் மனைவியை மீட்க வந்த இராமன் தன் படை இலங்கையை அடைவதற்குக் கடல் தடையாக இருப்பதை உணர்கிறான்! கடலுக்குப் பொறுப்பான தெய்வமான வருணனிடம் கடலிலே வழி ஏற்படுத்தித் தருமாறு ஏழு நாட்களாக மன்றாடி நின்ற இராமன் வருணனின் உதவி கிடைக்காததால் கடல் நீரை வற்றச் செய்து வழி ஏற்படுத்திக் கொள்ள கடலுக்குள் ஆயுதப் பிரயோகம் செய்கின்றான்!
எடுத்த எடுப்பிலேயே கம்பன் அந்த ஆயுதத்தைப் பற்றி ஒரு செய்தியை சொல்லி விடுகிறான்! அந்த ஆயுதம் நெருப்பை விட மூன்று மடங்கு வெப்பத்தை வெளிப்படுத்த வல்லது என்பது தான் அந்தச் செய்தி!
பெரிய மால்வரை ஏழினும் பெருவலி பெற்ற
வரிகொள் வெஞ்சிலை வளர்பிறையாம் எனவாங்கித்,
திரிவ நிற்பன யாவையும் முடிவினில் தீக்கும்
எரியின் மும்மடி கொடியன சுடு சரம் எய்தான்.
(கம்பராமாயணம் – வழி வேண்டு படலம்)
எரியின் மும்மடி கொடியன சுடு சரம் என்று சொல்கிறானே கம்பன். நெருப்பை விட மூன்று மடங்கு வெப்ப வலிமையை வெளிப்படுத்தக்கூடிய ஆயுதம் ஒன்று அவர்களிடம் இருந்திருக்கின்றது! அது என்னவாக இருக்கும்? என்ற கேள்வி இங்கே எழுகின்றது!
அந்த ஆயுதம் வீழ்ந்து வெடித்ததும் கடல் நெருப்புப் பிடித்துக் கொண்டது! அதாவது தாக்குதல் நடந்த மறு கணமே கடல் நீர் கொதி நிலை அடைந்து அதையும் தாங்க முடியாமல் தீப்பற்றிக் கொண்டது என்று அறிவிக்கின்றானே கம்பன் அணுவாயுத்தால் அன்றி வேறு எதைக் கொண்டு இதைச் செய்திருக்க முடியும் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்!
அணுக்குண்டு வீழ்ந்து ஜப்பானிலே கடல் ஆவியானதே ஒழிய எரியவில்லை! இங்கே கடல் எரிந்தது என்றால் ஹிரோசிமாவில் வீழ்ந்ததை விட எவ்வளவு சக்தி வாய்ந்த ஆயுதப் பிரயோகமாக அது இருந்திருக்க வேண்டும்!
இதிலே இன்னொரு வியப்பு என்னவென்றால் ஜப்பான் நாட்டின் மீது அணுக்கண்டை வீசிவிட்டு அதனால்ஏற்பட்ட பாதிப்பைக்; கண்டு கொண்டுதான் அமெரிக்க விமானம் தளம் திரும்பியது! ஆனால் தன் காவியத்தில் கம்பன் இராமன் செய்த அந்த ஆயுதப் பிரயோகத்தினால் வானில் சென்று கொண்டிருந்த விமானங்கள் கூட தொடர்ந்து பறக்க முடியாமல் உருகி வீழ்ந்தன என்று இன்னுமொரு செய்தியைத் தந்தான் என்றால் இன்றைய அணுவாயுதங்கள் எல்லாம் இதிகாச காலத்து ஆயுதங்களோடு அருகிலே வைத்து எண்ண முடியாத அளவுக்கு வலிமை குறைந்தவையாகத் தென்படுகின்றன.
தசும்பு இடை விரிந்தன என்னும் தாரைய
பசும் பொனின் விமானங்கள் உருகிப் பாய்ந்தன்
அசும்பு அற வறந்தன, வான ஆறு எலாம்;
விசும்பிடை விளங்கிய மீனும் வெந்தவே.
(கம்பராமாயணம் – வழி வேண்டு படலம்)
இனி அணுக்கதிர்கள் எப்போதும் நேர் கோட்டில் தான் செல்லும் என்று நிறுவியிருக்கின்றது இன்றைய விஞ்ஞானம்! அதைக் கம்பனும் எடுத்துச் சொல்கின்றான் தன் காவியத்தில்!
செறிவுறு செம்மைய தீயை ஓம்புவ
நெறியுறு செலவின தவத்தின் நீண்டன.
உறுசினம் உறப் பல உருவு கொண்டன
குறு முனி எனக் கடல் குடித்த கூர்ங்கணை.
(கம்பராமாயணம் – வழி வேண்டு படலம்)
அது செறிவாகவும் செம்மையாகவும் செய்யப்பட்ட வடிவழுடையது! தீச்சுவாலையைக் கக்கக் கூடியது! நேரிய கோட்டிலே செல்லவல்லது! வீழ்ந்து வெடித்ததும் துண்டுகளாகி அவையும் மீண்டும் பல துண்டுகளாகி வெடித்துத் தாக்கும் திறன் கொண்ட ஆயுதத்தால் தான் கடல் தாக்கப்பட்டது என்ற கம்பராமாயணச் செய்யுளுக்கு இன்றைய விஞ்ஞானம் விளக்கம் சொல்லும்?
அடுத்து இன்றைய விஞ்ஞானம் எட்ட முடியாத செய்திக்கு வருகின்றோம்! ஹிரோசிமாவில் போட்ட குண்டு அந்த நகரத்தை அழித்ததோடு தானும் அழிந்து போனது. பின்பு நாகசாஹியில் இன்னொரு குண்டு வீசப்பட்டது இல்லையா? மொத்தமாக தாக்கப்பட்ட இடங்கள் இரண்டு! பாவிக்ப்பட்ட குண்டுகளும் இரண்டு! ஆனால் இந்தப் பாடலைப் பாருங்கள்!
கரும்புறக் கடல்கேளாடு உலகம் காய்ச்சிய
இரும்பு உறச் செல்வன இழிவ கீழ் உற
அரும் புறத்து அண்டமும் உருவி அப்புறம்
பெரும்புறக் கடலையும் தொடர்ந்து பின்செல்வ
(கம்பராமாயணம் – வழி வேண்டு படலம்)
கடலையும் உலகத்தையும் காச்சிய இரும்புபோல உருக்கி அழித்துவிட்டு அந்த ஏவுகணை அந்த இடத்தை விட்டு எழுந்து அடுத்த கடலையும் தாக்கி அழிப்பதற்காகப் புறப்பட்டது! இங்கேதான் இன்றைய விஞ்ஞானம் கம்பனிடம் தோற்றுப் போகின்றது!
இன்றைய விஞ்ஞான உலகால் ஒரு ஏவுகணையைக் கொண்டு ஒன்றுக்கு மேற்பட்ட இலக்குகளைத் தாக்கி அழிக்கும் செயல் திறனைக் காட்ட முடியாது! ஆனால் கம்பராமாயணம் காட்டுகின்றது இந்தத் தொழில் நுட்பத்தை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்!
இதையெல்லாம் நம்ப முடியாமல் அல்ல நம்ப விரும்பாமல் எம்மிடையே பலர் உலவுகின்றார்கள்! அவர்களுக்கு ஒரு சிறிய செய்தி! இராமனால் ஏவப்பட்ட கணை தன் மார்பில் துளைத்ததும் அதை இழுத்து வெளியே எடுத்து அது என்ன பொருள் யாருடையது என்று பார்த்து அதில் இராமன் என்ற பெயரைக் கண்டு கோபப்பட்டான் வாலி என்று படிக்கிறோம் அல்லவா?
அந்தக் கணை வாலி கை விட்டதும் திரும்பவும் வாலியின் மார்பைத் துளைத்துக் கொண்டு போனது என்றால் திரும்பத் துளைப்பதற்கான வேகம் அந்தக் கணைக்கு எங்கிருந்து வந்தது? தானியங்கி ஏவகணை இரகத்தைச் சேர்ந்ததாகத் தானே அது இருந்திருக்க வேண்டும்! அதனால் தான் வாலி அந்த ஆயுதத்தைப் பார்த்துவிட்டு இது வில்லிலே வைத்து செலுத்தக் கூடிய ஆயுதம் அல்ல என்று அடித்துக் கூறினான்!
வில்லினால் துரப்ப அரிது, இவ் வெம் சரம்! என வியக்கும்;
சொல்லினால் நெடு முனிவரோ தூண்டினார்? என்னும்;
பல்லினால் கடிப்புறும் பல காலும்; தன் உரத்தைக்
கல்லி, ஆர்ப்பொடும் பறிக்கும் அப்பகழியைக் கண்டான்.
(கம்பராமாயணம் – வாலி வதைப் படலம்)
எனவே இதிகாச நெறியோடு இன்று மட்டுமல்ல என்றுமே இன்றைய விஞ்ஞானம் போட்டியிட்டு வென்றுவிட முடியாது! இன்றைய உலகம் கண்டுபிடித்துப் பயன்படுத்தும் சாதனங்கள் எல்லாம் எம் முன்னோரால் இன்னும் திறமையான முறையில் பாவிக்கப்பட்டவை! ஆனால் உண்மைகளை மிகைப்படுத்திச் சொன்னதால் அவை பொய்யாகிப் போய்விட்டன போலும்!
பிரமாஸ்திரம்; பாசுபதாஸ்திரம் என்பன எல்லாம் ஏதோ கற்பனைப் பெயர்கள் என்று நாம் எண்ணிக்கொண்டு இருக்கின்றோம்! ஆனால் அவையெல்லாம் கொடிய அணு ஆயுதங்கள் என்ற உண்மையை பாரத யுத்தம் நடந்த குருஷேத்திர அகழ்வாராச்சியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகளின் எச்சங்கள் சொல்லிக்கொண்டு இருக்கின்றன!