முல்லைக்கு வந்த தொல்லை!
பறம்புமலை என்னுமொரு நாட்டை ஆண்ட
பாரியெனும் மன்னவன் ஒருநாள் காட்டில்
உறங்குபுலி மான்மரைகள் மயில்கள் மற்றும்
உயர்ந்தமரம் பூவிங்கள் அழகைப் பார்த்துக்
கிறங்குகின்ற மனத்தோடு தேரில் சென்றான்
கிளையுதவி தேடுமொரு முல்லை கண்டான்!
புறம்பெயர்ந்து போகமனம் முடியா வள்ளல்
போனவழி தேர்திரும்பி மீண்டும் வந்தான்!
பெற்றாரும் கொண்டவனும் கைவிட்டு ஏகப்
பெருந்துயரில் வாடுமொரு பெண்ணைப் போல
முற்றாத இளம்பருவ முல்லை காட்டில்
முழுவிதழும்; வாடிவிட வெய்யில் வாட்ட
பற்றோடு அரவணைக்கும் தென்றல் கூடப்
பகையாகிப் பெருங்காற்றாய் அலைவு செய்ய
இற்றோடு முடிந்துவிடும் வாழ்வு என்றே
இன்னுயிரை இழக்கமொரு நிலையைக் கண்டான்!
தேரைவிட்டுப் பூமியிலே குதித்த மன்னன்
திரண்டதுளி விழியோரம் உருள மெல்ல
மோரைவைக்கும் சட்டியெனக் கைகள் கூட்டி
முல்லையதன் முன்னாலே குனிந்து மெல்ல
ஆரைவிட்டுக் காத்திடுவேன் மகளே உன்னை
அதுவரையும் தேரைவிட்டுத் தாரேன் என்று
கூரையுற்ற தேர்மீது படர்ந்து முல்லைக்
கொடிவாழச் செய்துவிட்டு நடந்து போனான்!
முல்லைக்குத் தேர்கொடுத்தான் பாரி என்று
முழுவுலகும் பாரியினைப் புகழ்ந்த வேளை
பல்லக்குப் போலந்தத் தேரைப் பார்த்துப்
பதறியது முல்லைக்கொடி காட்டில் மன்னன்
செல்லத்தேர் இதுசெய்ய முன்பு இரத்தம்
சிந்திவிட்ட மரங்களையே எண்ணிப் பார்க்கும்!
சொல்லத்தான் யாருமிலை இதனை எல்லாம்
சொக்கத்தான் மனிதருண்டு புகழ்ந்து இங்கே!
இரா.சம்பந்தன்