குறை சொல்ல முடியாத குற்றங்கள்!
இயக்க ஆட்கள் காசுக்கு வந்திருக்கினம் போல கிடக்குது. நீங்கள் கீழே வராதையுங்கோ நான் ஏதாவது சொல்லி அனுப்புறேன்.
அன்று ஞாயிற்றுக்கிழமை, வீட்டு அழைப்பு மணி ஒலித்தவுடன் பக்கத்தில் படுத்திருந்த கோமதி சாத்திரம் பார்த்தது போல சரியாகச் சொல்லிவிட்டு கீழே இறங்கிப் போனாள்.
இங்கே வாருமப்பா! அவர்களை நிக்கச் சொல்லும், உடுப்பு மாத்திக் கொண்டு வாறன்.
அவங்கள் மனுசிமாரையும் வேலைக்கு விடாமல் ஐந்தாறு அறைகளிலே வீடும் வாங்கிக் கொண்டு புதுப் புதுக் கார்களிலே திரியட்டும். நீங்கள் வீட்டிலே நிற்க நேரமில்லாமல் ஒன்றுக்கு மூன்று வேலை செய்து அவையளுக்கு அறுத்துக் கொண்டு இருங்கோ. போங்கோ என்னவாச்சும் செய்யுங்கோ.
கோமதி திரும்பி வந்து முகத்தை மூடிக்கொண்டு படுக்கையில் விழுந்தாள். தில்லைநாதன் பெருமூச்சு விட்டார். எந்த வீட்டிலும் இயக்கத்துக்குக் கொடுக்கக் கூடாது என்று யாரும் சொன்னது கிடையாது. ஆனால் இவர்களுக்கு கொடுக்கப் படாது. இதுதான் பிரச்சினை ஏன்?
தில்லையார் கீழே வந்து கதவைத் திறந்தார். மூன்று பேர் குளிரில் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் கையில் இயக்கம் தொடர்பான ஆவணங்கள் நிறைய இருந்தன. தெருவோரத்தில் அவர்கள் வந்த வீ. எம். டபுள்யூ வாகனம் தில்லையாரின் காரிலிருந்து இரவு முழுவதும் ஒழுகி ஓடிய கறுத்த எஞ்சின் ஒயிலின் மேல் ஏறி நின்றது.
உள்ளே வாங்கோ தம்பி என்றார் அவர். உள்ளே வந்தவர்கள் இருக்கத் தயங்கினார்கள். நின்று கொண்டே பேசினார்கள். நாட்டு நிலைமைகள் தெரியும்தானே. இறுதிப் போருக்கு வெளிநாட்டிலே இருப்பவர்கள் பெரிய அளவில் உதவி செய்ய வேண்டும் என்று ஊரிலே எதிர்பார்க்கினம். அதுதான் நாங்கள் எல்லாத் தமிழ்க் குடும்பங்களையும் சந்திச்சுக் கொண்டு வாறம் என்றார் ஒருவர்.
இது இறுதி யுத்தம் என்றபடியால் நூறு, இருநூறு குடுத்துப் பிரயோசனம் இல்லை. பெரிசாக நீங்கள் ஏதாவது செய்தால் தான் நல்லது என்றபடியே பத்திரிகையும் சில துண்டுப் பிரசுரங்களும் என்று நீட்டினார் இன்னொருவர். தில்லையார் பேசாமல் வாங்கிக் கொண்டு அவர்களைப் பார்த்தார்.
அவர்களின் கைகளில் பல மோதிரங்கள் தெரிந்தன. புத்தம் புதுச் சட்டைக்குள் இருந்து கையில் விலை உயர்ந்த மணிக்கூடு அடிக்கடி வெளியே தெரிந்தது. தலையைத் திருப்பும் போது கழுத்திலே தாலிக்கொடி போன்ற தங்கச் சங்கிலியும் கண்டார் தில்லைநாதன்.
அவருக்குத் தன் மகள் பெரிய பிள்ளை ஆன போது ஒரு சங்கிலி போடுவதற்குப் பட்ட துன்பம் ஞாபகத்துக்கு வந்தது. பழைய எழுத்து மோதிரம், உடைந்த தோடு என்று பொறுக்கி எடுத்து செய்து பெரிதாகப் போட்ட சங்கிலி இப்போது பிள்ளை வளர்ந்து விட்டதால் அட்டியல் போல சிறுத்து விட்டது. பிள்ளை ஞாபகம் வரும்போது கேட்கும். பொறம்மா, அப்ப்பாவுக்கு வருமான வரிக்காசு வரட்டுக்கும் வாங்கித்தாறன் என்று மூன்று வருடங்களாக அவர் சொல்லிக் கொண்டு வருகிறார்.
என்ன யோசிக்கிறியள் என்றார் வந்தவர்களில் ஒருவர்.
ஒன்றுமில்லைத் தம்பி, நீங்கள் தேசியக் குற்றம் ஒன்று செய்யுறியள். இயக்க எதிர்ப்பாளர்களுக்கு அது பிடிக்கும். நீங்கள் அப்படித்தான் நடப்பது நல்லது என்று அவர்கள் நினைப்பார்கள். ஆனால் நாட்டையும் விடுதலை இயக்கத்தையும் நேசிக்கிற என் போன்றவர்களுக்கு அது சங்கடமாக இருக்கிறது. உங்களுக்கு ஒரு கதை சொல்லுறன்.
தியாகராசா சாமியார் என்று எங்கள் ஊர் பெரியவர் ஒருவர் ஊரிலே இருக்கிற கோயில் ஒன்றுக்கு திருப்பணி செய்ய இங்கே என்னிடம் காசுக்கு வருவார். ஆளைப் பார்த்தால் சைவப் பழமாக இருப்பார். தேவார திருவாசகம் பற்றித்தான் வந்தால் கதைப்பார். திருநீறு தருவார். சிறு சிறு சமயப் புத்தகங்கள் தருவார். என்னுடைய மனைவி கோயில் காரியம் என்று நிறையப் பணம் கொடுத்தா. போன வருடம் எனது தகப்பனார் இறந்த போது நான் ஊருக்குப் போன சமயம் தான் கோவில் திருப்பணிக்கும் சாமியாருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று தெரிந்தது.
அதே நேரத்தில் உங்களுக்கு நான் தந்த பணம் இரண்டாயிரம் மட்டிலே அங்கே கிடைத்ததாக சொன்னார்கள். ஒரு சதமும் பிழைக்கவில்லை. அப்படி இருந்தும் உங்களுக்கு நான் பணம் தருவதில் என் மனைவிக்கு உடன்பாடில்லை என்ன காரணம்? தயவு செய்து அதுக்கு அரசியல் அறிவு இல்லை என்று மட்டும் சொல்லிப் போடாதையுங்கோ.
ஒரு கேள்வியோடு அவர்களைப் பார்த்தார் தில்லையார். அவர்கள் சிரித்தார்கள்.
காசு ஊரிலே கிடைச்சிட்டுது என்றும் சொல்லுறியள். தரமாட்டோம் என்ற மாதிரியும் கதைக்கிறியள். எங்களுக்கு ஒன்றுமாய் விளங்கேல்லை என்றார்கள்.
தம்பிமார்! இந்த நாட்டிலே பெரிய ஆட்கள் எல்லாரும் தமிழன் என்ற சுவடு தெரியாமல் இருக்கிறார்கள். நடுத்தர வர்க்கமும், கீழ்மட்டத்தில் உள்ளவர்களும் தான் குருவி தானியம் சேர்ப்பது போல தேடிய காசிலே உங்களுக்குத் தந்து கொண்டு இருக்கிறம். இதிலே பெரும்பாலானவர்கள் சராசரி இதயமுள்ளவர்கள். அவர்களுக்கு முன்னாலே இப்படியான வாகனங்களிலே நீங்கள் வரலாமா? அப்படி வந்தால் சந்தேகம் வராதா?
ஐயா! ஐயா! பொறுங்கோ என்று இடைமறித்தார் ஒருவர். எங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை ஆராயாதையுங்கோ. நாங்கள் என்ன தொழில் செய்யுறோம். வருமானம் என்ன? எவ்வளவு காசுக்கு வாகனம் வைத்திருக்கிறோம் அதெல்லாம் உங்களுக்குத் தேவையில்லாத விசயம். நீங்கள் தருகிற பணம் ஊருக்குப் போய்ச் சேர்ந்ததா இல்லையா? என்று மட்டும் பாருங்கோ என்றார் அவசரமாக.
இப்போது காசு சேர்ப்பதிலே உள்ள சட்டரீதியான ஆபத்துக்கள் எல்லாம் உங்களுக்குத் தெரியும். வாழ்க்கையைப் பணயம் வைத்து இயங்குகிற எங்களை இப்படிக் கொச்சைப் படுத்திக் கதைக்காதையுங்கோ. ஒன்றுமே செய்யாமல் இருக்கிறவர்களை விட நாங்கள் நாட்டுக்காக ஏதோ செய்யுறோம் என்றார் இன்னுமொருவர்.
இல்லைத் தம்பி நீங்கள் செய்யுறது பிழை. குறை சொல்ல முடியாத குற்றம். பனைக்குக் கீழே இருந்து பாலைக் குடித்தாலும் அது கள்ளு என்றுதான் ஆட்கள் நினைப்பினம். இந்த வாகனத்திலே நீங்கள் கல்யாண வீட்டுக்கு போங்கோ, கோவிலுக்குப் போங்கோ, படத்துக்குப் போங்கோ. அது உங்களுடைய தனிப்பட்ட விசயம். ஆனால் காசு கேட்டு வராதையுங்கோ. காசு கேட்டு வாறதுக்கு ஒரு முறை இருக்கு.
தம்பி! ஐந்து டொலருக்கு வாங்கிய மீனையே நல்லதோ என்று பத்துத்தரம் காதுப் பூவை திறந்து பார்க்கிற எங்கள் சனங்கள் ஐந்நூறு டொலரைத் தந்துவிட்டு உங்களை எப்படியெல்லாம் கவனிப்பார்கள் என்று நினைத்துப் பாருங்கோ.
அதனாலேதான் சொல்லுறன் கவனமாக நடவுங்கோ. இன விடுதலைக்குப் பாடுபடுகிறது என்பது ஒரு தெய்வீகத் தொண்டு மக்காள். இன விடுதலைக்குப் பாடுபடுகிறோம் என்று சொல்லிக் கொண்டு இங்குள்ள மக்களுக்கு முன்னால் பவிசு காட்டி மக்களையும் விடுதலையையும் அந்நியப்படுத்தி விடாதையுங்கோ தம்பி!
உங்களுக்கு நான் தந்த காசை விட தியாகராசா சாமியாருக்கு என் மனைவி கொடுத்த பணம் அதிகம். அது ஊர் போய்ச் சேரவில்லை என்பது வேறு விடயம். ஆனால் கேட்டால் மறுக்காமல் கொடுக்கக் கூடிய எண்ணத்தை ஏற்படுத்தும் தோற்றத்தில் அவர் இருந்தார்.
அதுக்காக கையில் நீங்கள் ஆயுதம் வைத்திருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. ஊரிலே அல்லல் படும் எங்கள் உறவுகளின் அவலத்தை எடுத்துக் காட்டுவதாக உங்கள் தோற்றங்கள் அமையட்டும். உங்கள் கண்களிலே ஈழத்தின் ஏக்கம் தெரியட்டும்! உங்கள் வாழ்க்கை முறையிலே ஒரு எளிமை தெரியட்டும். கையிலே உள்ள பத்திரிகைகள் மட்டும் உங்களை இயக்க வாதிகள் என்று காட்டிக் கொண்டால் போதாது.
பணம் கேட்டு நீங்கள் செல்லுகின்ற வீடுகளில் ஐயோ! ஊருக்கு அனுப்புவது இருக்கட்டும் முதலில் நீங்கள் இந்த உடுப்பை மாற்றுங்கோ, சாப்பிடுங்கோ என்று உங்களைக் கண்டு வேதனையில் நெஞ்சு பதறுகின்ற இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கோ தம்பி. உங்களைக் கண்டு ஒளிக்கிற நிலையை இனிமேல் வைக்காதையுங்கோ.
ஐயா! இப்ப ஊர் இருக்கிற நிலையிலே உண்மையான இன உணர்வு உள்ளவன் உங்களைப் போல இவ்வளவு நேரம் கதைச்சுக் கொண்டு இருக்க மாட்டான். ஏதாவது உதவி செய்யத்தான் பார்ப்பான் என்றார் இதுவரை கதைக்காத மூன்றாவது மனிதர். அவரின் பேச்சுத் தொனியிலே நீ யார் எங்களுக்கு உபதேசம் பண்ண? என்ற கேள்வியும் கலந்து கிடந்ததை தில்லையார் உணராமல் இல்லை.
தில்லையார் சிரித்தார். அம்மா, அப்பா, படிப்பு, காதல் கல்யாணம் என்று எல்லாத்தையும் துறந்து அந்தப் பிள்ளைகள் களத்திலே நின்று போராடுதுகள். கேவலம் நீங்கள் சொகுசு வாழ்க்கையைத் துறக்க முடியாமல் கஸ்டப்படுகிறியள் இல்லே. இப்படித்தான் வருவோம். நீங்கள் மறு பேச்சு பேசாமல் காசு தர வேணும் என்று நினைக்கிறதும் கூட தமிழ்த் தேசியத்துக்கு நல்லதில்
லே.
இந்தாங்கோ தம்பி இதிலே இருநூறு டொலர் இருக்கு. ஆயிரம் டொலர் தருகிற பத்து வீட்டுக்குப் போக ஆசைப்படாதையுங்கோ. பத்து டொலர் தாற ஆயிரம் வீட்டுக்கு போங்கோ. அதுதான் தமிழ்த் தேசியத்துக்கு நல்லது. இன்னும் இரண்டொரு மாதத்திலே வாங்கோ. கனக்க இல்லை இருநூறு தான் தருவேன். இந்தக் காசு எவ்வளவோ சிரமத்துக்கு மத்தியிலே தான் தாறன். உங்களைக் கன நேரம் மினக்கெடுத்திப் போட்டேன். ஏதோ சொல்ல வேண்டும் போல இருந்தது. உங்களுக்குச் சொல்லாமல் நாலு நாலு பேராய்க் கூடி எங்களுக்குள்ளே கதைக்கிறதிலே ஆகப்போறது ஒன்றுமில்லை. சரி தம்பியவை போட்டு வாங்கோ.
தில்லையார் வாசல் கதவைத் திறந்து அவர்களை வழியனுப்பி விட்டு அவர்களின் வாகனம் செல்வதையே பார்த்துக் கொண்டு நின்றார். அதன் சக்கரங்களில் ஒன்று ஒழுகிய ஒயிலைத் தொட்டு வீதியில் சிறிது தூரத்துக்குத் தடவிக் கொண்டு சென்றது.
ஐயா! உங்களுடைய காரா ஒயில் ஒழுகுது? எங்களுடைய கராச்சுக்கு கொண்டு வாங்கோ. கூலிக்காசு இல்லாமல் செய்து தாறம். இப்படி அவர்கள் சொல்லிவிட்டுப் போயிருந்தால்!
அவர்கள் சொல்லவே இல்லை. அதற்கான வசதிகளும் அவர்களிடம் இல்லை. சொல்லப் போனால் இப்படியான சின்னச் சின்ன அணுகு முறைகளினால் தமிழ் மக்களை ஒன்றிணைக்க வேண்டும் என்ற சிந்தனை கூட அவர்களிடம் இல்லை.
ஈழ விடுதலை இலட்சியத்தை அடைய போடப்பட்ட நெடுஞ்சாலைக்கு கூட நாம் இன்னும் செல்லவில்லை. நெடுஞ்சாலையை அடையும் குறுக்கு றோட்டில் நின்று கொண்டுதான் கும்மாளம் அடிக்கிறோம். நெடுஞ்சாலையை அடைவது எப்போது? இலட்சியத்தை அடைவது எப்போது?
தில்லையார் கண்கள் பனிக்க படியில் ஏறி மாடிக்குச் சென்றார். பெரிய வள்ளல் காசு கொடுத்து வழி அனுப்பிப் போட்டு வாறார். வாற கிழமை வீட்டுக் காசு திரும்பட்டும் பிறகு கதைக்கிறன் என்றாள் கோமதி.