ஒளவையார் என்றொரு பெண் வாத்தியார்!
ஒளவையார் என்றொரு பெண் வாத்தியார்!
கவிஞர் என்று பட்டம் போட்டுக் கொண்டதில்லை! இலக்கணம் தவறி ஒரு பாட்டுக் கூட எழுதியதில்லை! தன் அறிவுத் திறமையைக் காட்ட புரியாமல் எழுதிப் படிப்போரைக் குழப்பியதும் இல்லை! புகழுக்கு அலையாமல் வயிற்றுப் பசிக்காக கூழுக்கு அலைந்த வாழ்க்கை! மன்னர் சபையிலும் மர நிழலிலும் மனத்தை ஒரே மாதிரி வைத்திருந்த பெண் துறவி! படிக்காதவனுக்கும் புரியும்படி மக்கள் இலக்கியம் படைத்துவிட்டுப் போன மூதாட்டி! சொல்ல வந்த விடயத்தையும் அதற்குக் காட்டிய உவமையையும் பாருங்கள்!
தாழம்பூவை விட இதழ்கள் சிறியதாக இருந்தாலும் நறு மணத்தில் மகிழம்பூ தாழம்பூவிலும் இனியதாக இருக்கின்றது. அது போல கடல் பெரியதாகத் தான் இருக்கின்றது. அதனுடைய தண்ணீர் பயிர்களுக்காக மண்ணிலே பயன்படுத்த முடியாத நிலையில் தான் உள்ளது. ஆனால் அந்தக் கடலுக்கு அருகே காணப்படும் சிறிய ஊற்றுத் தண்ணீர் மண்ணுக்கு மட்டும் அன்றி உயிர்கள் குடிப்பதற்கும் ஏற்றதாக இருக்கின்றது. எனவே யாரையும் தோற்றத்தை வைத்து இவர் பெரியவர்! இவர் சிறியவர்! என்று முடிவு கட்டி விடாதீர்கள்! அவர்களின் பண்பினை வைத்து உயர்வு தாழ்வை முடிவு செய்து கொள்ளுங்கள்!
மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம்
உடல்சிறியர் என்றிருக்க வேண்டாம்! – கடல்பெரிது
மண்ணீரும் ஆகாது அதனருகே சிற்றூறல்
உண்ணீரும் ஆகி விடும்!
(வாக்குண்டாம் – 12 வது பாடல்)