இந்த மருந்துகள் உடலுக்கு அல்ல!

தொலைக்காட்சிச் செய்தியைப் பார்த்த நளின் அங்கமன ஒருகணம் அதிர்ந்துதான் போனார். தற்கொலைப் போராளியின் படத்தை ரூபவாகினி அடிக்கடி போட்டுக் காண்பித்துக் கொண்டிருந்தது. பழம்பெரும் சிங்களவரான அவருக்கு தன் இனத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் கொல்லப்பட்டு விட்டார் என்ற கவலை வரவில்லை. மாறாக கொலையை நிகழ்த்தியவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் அர்ப்பணிப்புகள் ஏன்? தன் கண் முன்னாலே கண்ட நாடகங்கள் போன்றவை தான் அவர் மனக்கண் முன் நிழலாடின.

இப்படியெல்லாம் கூட நடக்குமா? என்ற வியப்பு மேலிட ஜன்னல் ஊடாக அந்தக் குடும்பம் இருந்த வீட்டை ஒரு கணம் உற்றுப்பார்த்தார் அங்கமன. எங்கும் பொலீஸ் தலைகளாகவே தெரிந்தது அவருக்கு. அயல் வீடு என்ற வகையில் விசாரிக்க வருவார்கள். ஆழமாக எதுவும் சொல்வதில்லை இது சிங்களவர் தமிழர் பிரச்சனை அல்ல. அதற்கும் மேலே ஒரு செய்தியை எனக்கு அந்தக் குடும்பம் உணர்த்தி விட்டுப் போயிருக்கிறது என்ற முடிபோடு மனைவி கேமாவைப் பார்த்தார் அவர். அவள் அழுது  கொண்டிருந்தாள்.

அவள் கவலைக்குக் காரணமிருந்தது. ஒரு கிழமைக்கு முன்பு அந்தக் குடும்பம் வந்து அவளைக் கட்டியணைத்துக் கண்ணீர் விட்டுப் பிரிந்து சென்ற போது இப்படியொரு விபரீதத்தை ஒழுங்கு செய்துவிட்டுத்தான் அவர்கள் கலைந்து செல்கிறார்கள் என்று இராணுவத்தில் இரு ந்த அவராலேயே ஊகிக்க முடியாத போது அவளால் எப்படி உணாந்து கொள்ள முடியும்.

அந்தக் குடும்பம் அங்கே குடிவந்து ஆறு வருடங்கள் இருக்கும். இந்த வீட்டிலே எப்படி மனிதர்கள் குடியிருக்க முடியும்? பாவங்கள். குண்டுக்கும் செல்லுக்கும் பயந்து இந்தப் பாழடைந்த வீட்டிலே வந்திருக்குதுகள். என்ற அனுதாப நினைவுக்கு அவர்களைப் பற்றிக் கேமா சொல்லும் சோகக் கதைகள் மேலும் உரம் ஊட்டிவிடும் அவருக்கு.

அப்பா இல்லை. சின்ன வயசிலே செத்துப் போனார். இரண்டு கைக் குழந்தைகளோடை யாழ்ப்பாணத்திலே இருந்து ப+மணி பட்ட துன்பங்களைக் கேட்டால் சரியான கவலை. பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து அந்தக் காசிலே தானாம் மோகனையும் சொரூபியையும் இந்த வயசு வரைக்கும் வளத்திருக்குது. வேளி நாட்டிலே ஒரு தம்பியாம். அதுக்கு அக்காவுக்கு உதவி செய்ய விருப்பமாம். ஆனால் மனைவி விடாதாம். பார்த்தீங்களா? நன்றாகப் படிச்ச பொண்ணு பெற்ற பிள்ளையைப் படிப்பிக்க காசில்லாமல் கடையிலே வேலைக்கு விட்டு வாழ வேண்டியதாகப் போய்விட்டது. என்ன அரசாங்கம் இது? எப்ப பார்த்தாலும் வன்னிக்கு குண்டு போடுறதிலே இருந்தால் பூமணி மாதிரி சனங்கள் பாவந்தானே.

பல சமயம் கேமா கேட்பது நியாயமாகத்தான் தெரியும் அவருக்கு. அதனால் பூமணி குடும்பம் மீது அவரும் அளவு கடந்த விருப்பத்தோடு உறவாடினார். யாழ்ப்பாணத்து உணவுகள் மதில் சுவரைத் தாண்டி வரும் போதெல்லாம் அவர் கருவாடும் கப்பல் வாழைப்பழமும் என்று திருப்பிச் செய்யத் தவறுவதில்லை.

ஒரு முறை மோகன் வேலையால் வரும் போது சிங்கள இராணுவம் விசாரணை என்ற பெயரில் அவனை பஸ்சை விட்டு இறக்கித் துவைத்து வீட்டுக்கு அனுப்பியிருந்தது. நடக்க முடியாமல் ஆட்டோவில் வந்து முற்றத்தில் விழுந்தவனை மடியில் வைத்துக் கொண்டு பூமணி அழுத போது தான் அங்கமன அந்த வீட்டுக்குப் போனார். போனது ஒருநாள் என்றாலும் மகனைத் தடவிக் கொண்டு இரண்டு கண்களில் இருந்தும் கண்ணீர் பெருக பூமணி இருந்த கோலம் அவரை என்னவோ செய்தது. மகனைப் பார்ப்பதும் என்ன ஐயா செய்யுது அவன் கையை எடுத்து தன் மார்போடு அணைத்து விம்மும் அந்தத் தாயைப் பார்க்கப் பொறுக்காமல் அவர் உடனேயே எழுந்து வீட்டுக்கு வந்துவிட்டார்.

எப்படியும் இந்தப் பிள்ளையை அவுஸ்ரேலியாவுக்குப் பிடித்து அனுப்பணும். எங்காவது போய் உயிர் தப்பி இருக்கட்டும். பிறகு பூமணியையும் தங்கையையும் அந்தப் பிள்ளை பார்த்துக் கொள்ளும். ஒரு முடிவுக்கு வந்தவராக திரும்பவும் அங்கு போனார் அங்கமன.

அவரைக் கண்டதும் எழுந்து இருக்கப் பார்த்தான் மோகன். அவனைப் படுக்கச் சொல்லி விட்டு அவன் அருகே அமர்ந்து அவன் முகத்தில் அரும்பி இருந்த மீசையையும் தாடியையும் வருடிக் கொண்டு ஆங்கிலத்தில் சொன்னார்

மோகன்! நீ இந்த நாட்டிலே இருக்க வேண்டாம். எனது மகள் அவுஸ்ரேலியாவில் இருக்கிறாள். எனக்குத் தெரிந்த அமைச்சரைப் பிடித்து உன்னை அங்கே அனுப்பி விடுகிறன். நீ போய் உழைத்து அம்மா தங்கச்சி ஆட்களையும் பிறகு கூப்பிட்டு நல்லாக இரு. இந்த நாட்டிலே உன்னுடைய உயிருக்கு மட்டுமல்ல யாருடைய உயிருக்கும் உத்தரவாதம் இல்லை. கெதியாக பாஸ்போட் எடு. சீக்கிரமாக ஓடித்தப்பு. காசைப் பற்றி யோசிக்காதே. நல்ல சனங்கள் அது யாராக இருந்தாலும் அழிந்து போகக் கூடாது.

யாரை அங்கமன அழிந்து போகவிடாமல் காக்க வேண்டும் என்று எண்ணினாரோ அவனையே அழிவுப் பொருளாகவும் அழிப்புப் பொருளாகவும் ரூபவாகினி காட்டிக் கொண்டிணரப்பதைப் பாhத்தார் அங்கமன. அவருக்கு கோபம் வரவில்லை. நிகழ்ச்சிகளைத் தொகுத்துப் பார்த்தார் அவர்.

நாங்கள் ஊரிலே இருந்ததற்கு அடையாளமாக அங்குள்ள பொலீஸ் பிரிவிலே பாதுகாப்பு சான்றிதழ் எடுக்க வேண்டும். அண்ணாவைத் தனிய விடப் பயம். அதனாலே அம்மாவும் நானும் அண்ணாவோடு ஊருக்குப் போட்டு வருகிறோம்.

சொரூபி சொன்னதிலே இருந்த நியாயத்தின் கனத்தால் அங்கமன தலையை ஆட்டியிருந்தார். அவர்களும் எங்கோ போய்விட்டார்கள். இனி அவர்கள் வரப்போவதில்லை என்றும் அவருக்குத் தெரியும்.

ஒரு நாள் இரண்டு நாள் அல்ல. ஒரு கொலைக்கு எடுத்துக் கொண்ட நாட்கள் இரண்டாயிரத்து நூற்றுத்தொண்ணூறு. ஆறு வருடங்கள். கொழும்பு வன்னியல்ல. வவுனியாவைத் தாண்டிவிட்டால் கொள்கைகளை மாற்றிக் கொள்ள முடியும். வசதிகளைத் தேடிக் கொள்ள முடியும். வெளிநாடுகளுக்கு ஓடி விட முடியும்.

ஆனால் அப்படித் தடம்புரண்டு விடாமல் குறிக்கோளோடு வாழ்ந்து எசமானும் இல்லை சங்கிலியும் இல்லை என்ற நிலையிலும் வசதியற்ற வீட்டிலே வாழ்ந்து கடையிலே வேலை செய்து மூட்டை தூக்கி இராணுவத்திடம் மிதிபட்டு ஒரு மந்திரியின் மரணத்துக்குத் துணையாக தனக்கும் மரணத்தைத் தேடிக் கொண்டிருக்கிறான் ஒரு தமிழன் என்றால் அந்த இலட்சிய உறுதிக்கு முன்னால் ஒரு இலட்சம் அல்ல ஒரு கோடி இராணுவம் கூடிப் போரிட்டு வென்றாலும் அது முழுமையான வெற்றியாகி விடுமா?

இந்த இலட்சிய வீரர்களுக்கு ஏதாவது உரிமை கொடுத்து இவர்களை முழு இலங்கைக்குமான பாதுகாப்பு அணியாக வைத்துக் கொண்டால் நமது நாட்டுக்கு எவ்வளவு பாதுகாப்பாக இருக்கும்? இதை சிங்கள இனமும் அரசும் என்றுதான் உணர்ந்து கொள்வார்களோ?

அங்கமன சாய்வு நாற்காலியில் சாய்ந்தார்.

நேற்று ஒரு கடிதம் வந்தது என்றாள் கேமா. கவலையோடு. அங்கமன கடித உறையைப் பார்;த்தார். அது அரசாங்க முத்திரையோடு இருந்தது.  கேமாவும் அதை வாசித்திருக்கிறாள் என்பதற்கு அடையாளமாக அந்த உறை கிழிக்கப்பட்டு இருந்தது.

அன்புமிக்க பெரியவருக்கு

இந்தக் கடிதம் உங்கள் கைக்கு கிடைக்கும் போது நான் உயிரோடு இருக்க மாட்டேன். நீங்கள் எனது அம்மா தங்கச்சி என்று நினைத்த பூமணியும் சொரூபியும் கூட என் போன்றவர்கள் தான் எனது வேலை முடிந்து விட்டது. அவர்கள் வந்த வேலை முடியவில்லை.

ஐயா எங்களிடம் எவ்வளவு பாசம் வைத்து நடந்தீர்கள். என்னை வெளிநாடு அனுப்ப நினைத்தீர்கள் இதற்கெல்லாம் நன்றி. நாம் இவற்றுக் கெல்லாம் அப்பாற் பட்டவர்கள். எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் மட்டுமல்ல எந்த வடிவத்திலும் சாவைச் சந்திக்கத் தயாரானவர்கள். எங்களை நீர் நனைக்காது. நெருப்பு எரிக்காது. எனவே எங்களைப் பற்றி நினைப்பதற்கு உங்களுக்கு எதுவுமே இல்லை. எனவே கோபமோ அனுதாபமோ உங்களுக்கு வேண்டாம்.

குடும்பமாக நாம் வாழ்ந்தது ஒரு நாடகம். அதிலே பேசப்பட்ட வசனங்கள் பொய்யானவை. சூழ்நிலைக்கு ஏற்றவை. அதைத் தவிர வேறு வழி எமக்கு இருக்கவில்லை. பூமணி தாயாக நடந்தார்கள். சொரூபி ம களாக நடித்தாள். இலட்சியத்துக்காக.

எங்களுடன் நீங்கள் ஆங்கித்தில் பேசுவீர்கள். ஆனால் எங்களுக்கு சிங்களத்திலும் நன்றாகப் பேசத் தெரியும். எழுதத் தெரியும்.

நான் இப்போது அழித்திருப்பது ஒரு தனி மனிதனை அல்ல. ஒரு தனிமனிதன் சுமந்த அமைச்சுப் பதவியையும் அதற்குரிய அதிகாரத்தையும் அதன் மூலம் இழைக்கப்பட்ட அநீதியையும் தான். அவர் அதிகாரத்தில் இருந்து எங்கள் இனத்தின் தலை விதியோடு முட்டி மோதாதவராக இருந்திருந்தால் உங்களைப் போல அவரும் எங்கள் அன்புக்கு உரியவர் தான். அவருக்குப் பிள்ளைகள் உண்டு. எனக்குப் பெற்றார்கள் உண்டு. நாம் இருவருமே இப்போது இல்லை.

இரண்டு இடத்திலும் துயரம் கப்பியிருக்கிறது. ஒரு வீடு சிங்களத்தில். இன்னொன்று தமிழ் ஈழத்தில். ஆனால் இரண்டு இடங்களிலும் கவலை ஒன்றுக்கொன்று குறைந்தது அல்ல. கண்ணீர் ஒன்றுக்கொன்று குறைந்தது அல்ல. எங்களை நினைத்து பரிதவிக்கும் உணர்வும் ஒன்றுக்கொன்று குறைந்தது அல்ல. குடும்பத்துக்கு ஆற்றவேண்டி இருந்த கடமைகளும் ஒருவருக்கொருவர் குறைந்தத அல்ல. அப்படியிருந்தும் வெளியறுகிறோம்.

ஆனால் தொடர்ந்தும் அழிக்கப்பட வேண்டியவர்கள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள். அதனால் அழிய வேண்டியவர்களுக்கும் தேவை இருந்து கொண்டுதான் வருகிறது. எனவே அழிக்கப்பட வேண்டியவர்கள் உருவாகாமல் சிங்கள தேசம் பாhத்துக் கொள்ளுமாயின் அதற்காக அழிய வேண்டியவர்களை உருவாக்கும் தேவையும் இருக்காது.

ஐயா! எப்பவும் மருந்துகள் போராடுவது  நோய்களோடு மட்டும் தான். அந்த நோய்க்கு உரியவனோடு அல்ல. போல எனது செயலும் தனிப்பட்ட முறையில் உங்களுக்கு எதிரானது அல்ல!

இப்படிக்கு
மோகன்

அங்கமன கடிதத்தைக் துண்டுகளாகக் கிழித்தார். அதைக் கேமா வாங்கி எரியும் அடுப்பில் திணித்து விட்டு வர பொலீஸ் படையும் இராணுத்தினரும் வீட்டை நெருங்கும் காலடி ஓசை தெளிவாகக் கேட்டது. அமைதியாக சாய்ந்திருந்தார் அங்கமன!

(ஈழநாடு பத்திரிகையில் 7.4.2008 பிரசுரிக்கப்பட்டது)

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.