நினைவுகளின் மரணங்கள்!
கட்டிவைத்த வீட்டினொடு காணிகளும் ஊரிலங்கு
விட்டுவந்த பொருட்களென நினைக்காதே என்மனமே
நட்டுவைத்த மரந்தடியும் நாலுசன உறவுகளும்
பட்டுவிட்ட காலமிது பாவியெந்தன் மனவெளியில்
பப்பாவின் குழலெடுத்து பூவரசு இலைசெருகி
எப்போதும் ஊதியதை ஏன்மறந்தாய் என்மனமே
கொப்போடு வளர்முருங்கை மரமேறும் கோழிகளை
எப்போதும் மாலையிலே பார்த்தகதை ஏன்மறந்தாய்?
கோடிக் கிடுகிருந்து குத்திவிட்ட குளவிகண்டு
தேடிப் புளிதடவி அழுததெல்லாம் ஒருகாலம்
ஓடிப் பறந்துவந்து கைவிளக்கில் வீழ்வதினால்
வாடிச் சிறகெரிந்த ஈசல்களை கண்டவன்நீ
ஊசிலியும் அல்கனென்றும் ஊர்முழுதும் நீரிறைக்க
ஓடிவரும் வாய்கால்நீர் உடல்கழுவும் காக்கையினம்
மூசிப்பெரு மூச்சுவிடும் முகங்கறுத்த மாடுகளும்
நாசில் நுரைபிறக்க நம்நாட்டில் ஓய்வெடுக்கும்
மான்மாக்கு குடையினொடு குரங்குமார்க் மம்பட்டி
கூன்சொண்டு கொக்குவைத்த சைக்கிள் றலியதனில்
வீநைன்ரி சீற்றென்றும் வைத்திருந்த காலமதில்
வான்விழுந்த சினோதள்ளும் வாழ்க்கையிதை நினைத்தாயோ
பொங்கும் பூம்புனலும் நேயர் விருப்பங்களும்
தங்கு தடையின்றிக் கேட்டுவந்த தேன்கிண்ணம்
எங்கும் போகாமல் தணியாத தாகமதை
என்றும் கேட்டிருந்த வாழ்வொன்றை மறந்தாயோ
கோம்பயன் மணலுமில்லை செம்மணியும் இல்லை இல்லை
தாவடியோ காரைக்கல் சுடலையெது கேள்வியில்லை
தாம்புக் கயிறுகட்டி காடாத்தும் சடங்குமில்லை
காம்புக் கரண்டுவயர் சுட்டெரிக்கும் பிறநாட்டில்!