ரமணரிடம் வந்த சித்தர்!
ஒரு முறை ரமண மகானின் ஆச்சிரமத்துக்கு ஒரு நாய் வந்தது. உடல் முழுவதும் புண்ணாகி இரத்தமும் சிதழுமாக பார்ப்பதற்கே அருவருப்பாக இருந்த அதை மடத்து சிப்பந்திகள் கல்லெறிந்து துரத்தி விட்டார்கள்.
அவர்களுக்குப் பயந்து ஆச்சிரமத்துக்குப் பின்புறம் இருந்த காட்டுக்குள் அந்த நாய் ஓடி மறைந்து விட்டது.
அன்றிரவு ரமணரை அவரது படுக்கையில் கானாத சிப்பந்திகள் இலாம்பை எடுத்துக் கொண்டு அவரைத் தேடினார்கள். அடந்த காட்டுப் பகுதியில் சிலர் ஒரு காட்சியைக் கண்டார்கள்.
காலையிலே தாங்கள் கல்லெறிந்து துரத்திய அதே நாய் ரமணரின் பாதங்களை நக்கிக் கொண்டிருக்க ரமணரோ குனிந்து அதன் தலையைத் தடவியபடி என்னவோ சொல்லிக்கொண்டிருந்தார்.
சந்தடியே இல்லாமல் வந்தவழியே திரும்பிவிட்டார்கள் சிப்பந்திகள். காலையிலே அந்த நாய் இறந்து கிடப்பதைக் கண்ட சிலர் அது பற்றிப் பகவான் ரமணருக்குச் சொன்னார்கள்.
அதைக் கேட்ட ரமணரும் ஆமாம் அவரொரு சித்தர். மரணம் தன்னை நெருங்குவதை அறிந்து என்னை ஒரு முறை பார்த்துப் பேச வேண்டும் என்று மடத்துக்கு வந்தார்கள். நீங்கள் அனுமதிக்கவில்லை. காட்டுப் புறத்தில் எனக்காகக் காத்திருந்த அவரை கடந்த இரவு சந்தித்துப் பேசினேன். இப்போது அவர்கள் சமாதியாகி விட்டார்கள்.
தேகம் நாயுடையது என்று கருதாமல் சகல ஈமச் சடங்குகளையும் அவருக்குச் செய்து அடக்கம் செய்யுங்கள் என்றார் ரமண பகவான்.
(ரமண பகவான் வரலாற்றுப் பதிவிலிருந்து)