விருந்தும் பசியும்!
நாம் உறவினர்கள் வீட்டுக்கோ நண்பர்கள் வீட்டுக்கோ போனால் எங்களைக் கண்டவுடன் அவர்களின் முகம் முதலில் மகிழ்சியால் மலர வேண்டும். வாருங்கள் வாருங்கள் இருங்கள் என்று உதடுகள் உபசரிக்க வேண்டும். அவர்களிடம் வசதி வாய்புகள் இல்லாமல் இருக்கலாம். உப்பு போடுவதற்கு வசதி இல்லாத நிலையில் வெறும் கூழ் கூட அவர்கள் சமைத்துச் சாப்பிட்டு விட்டு மீதியை வைத்திருந்திருக்கலாம். ஆனால் தங்கள் நிலையை எங்களுக்கு மறைத்து நடிக்காமல் உண்மையைக் கூறி எங்களுக்கும் அந்தக் கூழில் பங்கு தந்து குடியுங்கள் குடியுங்கள் அன்போடு சொல்வார்களாக இருந்தால் அந்தக் கூழை உண்ணும் போது அது சுவையற்றதானாலும் தந்தவர்களின் அன்பால் அது அமுதம் போல ஆகி விடும்.
மாறாக எம்மைக் கண்டவுடன் இவர்கள் ஏன் வந்தார்கள் என்று மனதுக்குள் வெறுப்பு அடைந்து முகம் கறுத்துக் கொண்டு அதை மறைத்து முப்பழமும் பாலும் பாகாசமும் வேறு பல உணவுகளும் ஒப்புக்காக படைத்து பாசாங்கு செய்வார்களானால் அதை உண்ணும் எமக்கு இருக்கும் கொஞ்சப் பசியோடு ஏன் இவர்கள் வீட்டுக்குப் போனோம் என்ற அவமானப் பசியும் சேர்ந்து கொண்டு எம்மை முழுமையாக வாடிச் சோர வைத்துவிடும்.
ஒப்புடன் முகம லர்ந்தே உபசரித் துண்மை பேசி
உப்பிலாக் கூழிட்டாலு முண்பதே யமிர் தமாகும்
முப்பழ மொடுபா லன்னம் முகங்கடுத் திடுவராயின்
கப்பிய பசியினோடு கடும்பசி யாகுந்தானே.
(விவேக சிந்தாமணி என்ற நூலில் இருந்து – இரா.சம்பந்தன்)