பண்டிதர் சா.வே. பஞ்சாடசரம் அவர்கள்
கவிஞருக்கு ஒரு கவிதை!
இலைகறுத்த பன்னைமரம் இடைகறுத்த நெடும்பனைகள்
இளங்குருத்து வாழையெனும் – அவற்றோடு
தலைகறுத்த மாமரமும் தடல்கறுத்த பலாமரமும்
தளிர்கறுத்த கிழுவைகளும் – நிறைசோலை
முலைகறுத்த ஆடுகளும் முகங்கறுத்த மாடுகளும்
முகில்கறுத்த வானநிழல் – விளையாட
உலைகறுத்த பானையுறை உடல்கறுத்த மிளகெடுத்து
உரலிடித்த ஒடியலெனும் – இரைதேடி
சிலைகறுத்த தெய்வமுடன் சிறைகறுத்த காக்கையினம்
சிறுகதைகள் பேசுகின்ற – திருவூராம்
குலைகறுத்த நொங்கிருந்து குயிலினங்கள் குரல்கொடுக்கக்
குடியிருக்கும் இணுவைநகர் – அதில்தோன்றி
நிலைமறுத்த புறச்சமய நிழலொழித்து தமிழ்வளர்த்து
நின்றதமிழ்ப் பண்டிதராம் – சா.வேயின்
மலையுயர்த்த நூல்வரிகள் மனமிருத்திப் போற்றாமல்
மறையுமொரு வாழ்வுதனை – நினைவேனோ
தொலைநிலத்தில் வந்தபின்பும் தொன்மைநெறி மறவாமல்
துயர்துடைக்கும் கருத்துக்களை – அறியேனோ
வலைவித்துத் தமிழ்க்கவிஞர் வரலாற்றைப் பற்றிவந்து
வருங்காலம் தெரிந்துணரப் – பதியேனோ!
கலைசிறக்க வந்துதித்துக் கவிதைமழை தான்பொழிந்த
கவிஞர்பிரான் தாளிரண்டும் – பணியேனோ!