|

கனடாவில் பேராசிரியர் நாகேஸ்வரன் அவர்கள்.

ஈழத்தில் வாழ்ந்து வருபவரும் இலக்கிய- ஆன்மீகப் பேச்சாளரும் கல்விமானுமாகிய பேராசிரியர் கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன் அவர்களை வரவேற்று ஈழநாடு பத்திரிகையில் நான் 14.7.2017 அன்று எழுதிய கவிதை.

அடியவர்கள் பக்தியினை முந்திக் கொண்டு
ஆழ்கடலின் அலைகளெலாம் தொட்டு வாழ்த்த
குடிபுகுந்து கல்லிடுக்கில் வாழும் நண்டு
குளிர்நீரில் உடல்நனைத்துக் கைகள் கூப்பும்
முடியிலங்கைத் தலைவேந்தன் தொழுத அன்னை
முகந்நோக்கும் நயினைமணல் பரப்பில் தோன்றி
விடிபொழுதாய்த் தமிழ்வளர்க்கும் நாகேஸ் ஐயன்
வாழியவே தமிழ்மொழிபோல் வாழி வாழி!

கற்றதெலாம் காசாக்க அலையும் கூட்டம்
கலந்துவிட்ட இந்துமத வாழ்வில் இல்லை
மற்றதெல்லாம் தேவையில்லை மனித வர்க்கம்
மாட்சிபெற உழைத்திடுவேன் என்று வாழும்
குற்றமிலா நெஞ்சுடைய கொள்கை மாந்தர்
குவலயத்தில் மிகச்சிலரே அவர்கள் உள்ளும்
உற்றகுறை தீர்த்துவைத்து உதவும் ஐயா
உங்களைநாம் போற்றுகின்றோம் வாழி வாழி!

இருதோளும் தமிழ்சுமக்க இதய ஆற்றில்
இதிகாச மீன்களெல்லாம் இருந்து துள்ள
தெருதோறும் கால்வலிக்க மேடை ஏறித்
திருப்பாடல் சமயநெறி விளக்கிப் பேசும்
குருவேயெம் குருநாதா! ஐயா நீங்கள்
குற்றுயிராய்ப் போய்விட்ட நாட்டுக் காக
வருவாயைப் பார்க்காமல் வாழ்ந்து என்றும்
வல்லமைத் தருவீர்கள் தெரியும்! ஆமாம்!!

இரா.சம்பந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.