|

சிலப்பதிகாரமும் சில ஆயுதங்களும்!

சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்த பாண்டியர்கள் வெறும் தமிழ்ப் பணியோடும் சமயத் தொண்டோடும் நின்றுவிடவில்லை. தங்கள் நாட்டை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ள பலம் பொருந்திய காவல் அரண்களையும் கோட்டைகளையும் ஏற்படுத்தி வைத்திருந்தார்கள். அந்தக் கோட்டைகளை எதிரிகள் நெருங்கினால் அவர்களைத் தாக்கி விரட்டியடிப்பதற்கும் தம் கால வசதிகளைக் கொண்டு மிகவும் உயரிய பாதுகாப்பு சாதனங்களைக் தம் அரண்களிலே பொருத்தி இருந்தார்கள்.
பாண்டியர் காலத்து கோட்டை வாயிலைப் பற்றிச் சிலப்பதிகாரத்திலே அடைக்கலக் காதை என்ற பகுதியில் இளங்கோவடிகள் சில குறிப்புகளைச் சொல்லியிருக்கின்றார்.
அக்காலத்து அரன்களைச் சுற்றி போர் வீரர்கள் மறைந்து நின்று எதிரியைத் தாக்க ஏதுவான மரங்கள் நிறைந்த காடுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. அவற்றிடைபே பதுங்கு குழிகளும் ஏற்படுத்தப்பட்டன. சந்தேகத்துக்கு இடமானவர்களைக் கண்டால் தானே வழைந்து அம்புகளை எய்யும் விற்களும் நிறுவப்பட்ன. இது இக்கால தானியங்கி ஏவகணைகனின் அமைப்பை ஒத்திருப்பதைக் காணலாம்.
கருங்குரங்கின் கைபோல விரல்கள் விரிந்திருந்து எதிரி வந்ததும் தப்பமுடியாதவாறு பற்றிக் கொள்ளும் கருவிரல் ஊகம் என்ற பொறி எங்கும் நிறுவப்பட்டிருந்தது. கற்களைத் தூர வீசி எதிரிகளைத் தாக்கும் இயந்திரங்களும் அந்தக் கோட்டைக்குள் இருந்தன. எப்போதும் எதிரிகள் மீது கொட்டித் துன்புறுத்தக் கூடிய நெய்கள் பானைகளில் கொதித்த வண்ணம் இருந்தன. ஒரு புறத்தே செம்பை உருக்கிக் கொதித்தன்மையுடை செம்பு நீரும் அந்தக் கோட்டைக் குள்ளேயே இருந்தன. உலர்ந்த இரும்பு உலக்கைகளும் கற்கள் நிரப்பப் பட்ட கூடைகளும் தயாராக இருந்தன.
கோட்டைக்குள்ளே பாதுகாப்பாக இருந்து கொண்டு புறத்தே எதியைப் பற்றியிழுக்கும் தூண்டில்களும் அந்தக் கோடடைக்குள் இருந்தன. கழுத்தை இறுக்கி எதிரிகளைக் கொல்லும் தொடக்கு என்ற ஆயதமும் எதியைக் காணும் போது தானாகப் பற்றிக் கொள்ளும் அடுப்புகளும் அங்கே இருந்தன. கோட்டையைச் சுற்றி ஓடும் அகழியில் இறங்கி மதிலைத் தொடுவாரைத் தள்ளி வீழ்த்தும் பொறிகளும் மதிலைத் தொட்டு ஏற நினைப்போரின் கைகளைப் பதம் பார்க்கும் ஊசிகளும் அம்புகளும் அங்கு இருந்தன.
பகைவர் வரும் போது அவர்களைத் தேடிச் சென்று இனங்கண்டு தாக்கும் சிரல் என்ற ஆயதமும் அவர்களிடம் இருந்தது. கோட்டையை முற்றுகையிட்டு மதில் மேல் ஏறுவோரைக் கொம்புடைய காட்டுப் பன்றி போன்ற பொறிகள் ஓடிவந்து இடித்து வீழ்த்தின. இவற்றை விட வேல்கள் பல இடங்களில் வெகுவாகக் குவிக்கப்பட்டிருந்தன.
மிளையும், கிடங்கும், வளை வில் பொறியும்,
கரு விரல் ஊகமும், கல் உமிழ் கவணும்,
பரிவுறு வெந் நெயும், பாகு அடு குழிசியும்,
காய் பொன் உலையும், கல் இடு கூடையும்,
தூண்டிலும், தொடக்கும், ஆண்டலை அடுப்பும்,
கவையும், கழுவும், புதையும், புழையும்,
ஐயவித் துலாமும், கை பெயர் ஊசியும்,
சென்று எறி சிரலும், பன்றியும், பணையும்,
எழுவும், சீப்பும், முழு விறல் கணையமும்,
கோலும், குந்தமும், வேலும், பிறவும்,
ஞாயிலும், சிறந்து, நாள் கொடி நுடங்கும்
வாயில் கழிந்து
(சிலப்பதிகாரம் – மதுரைக் காண்டம் – அடைக்கலக் காதை )
இந்தச் செய்திகளை எல்லாம் பாண்டிய நாட்டு இடையர் குடியிலே அடைக்கலம் பெற்ற கண்ணகி மாதரி என்ற இடைப் பெண்ணுடன் அவளின் வீட்டுக்குச் செல்லும் ஒரு இடத்தில் சந்தர்ப்பத்துக்குப் பொருத்தமில்லாமல் இளங்கோவடிகள் பாடிவிட்டுப் போனார்.
அதற்குக் காரணம் உண்டு. கண்ணகி கோவலன் பிரச்சனையை மட்டும் எங்களுக்கு தெரிய வைக்க வேண்டும் என்று அவர் நினக்கவில்லை. அக்கதையின் ஊடாக தமிழர் தம் வாழ்வியலை அவர்களின் பண்பாட்டை அவர்களின் போரியல் நாகரிகத்தை எல்லாம் தொட்டுக் காட்ட வேண்டும் என்று நினைத்தார் அவர்.
தான் வகுத்த இலக்கியம் வெறும் நாவல் போல இல்லாது வரலாற்று நூலாகவும் இருக்கும் வண்ணம் இளங்கோவடிகள் பார்த்துக் கொண்டார். அதனால் தான் பொருத்தமில்லா இடங்களில் எல்லாம் சிலம்பு சலிக்காமல் சில செய்திகளைச் சொன்னது.
இரா.சம்பந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.