|

அங்கம் குறைக்கப்பட்ட அழகான தமிழ்ச் செய்யுள்!

இன்று (8.7.2023) வெளியான கனடா தமிழர் தகவல் இதழின் ஆண்டு விழா மலரில் நான் எழுதிய கட்டுரை இது. சற்று நீண்ட கட்டுரை தான்.

தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்த்திடு

சூழ்கலை வாணரும் – இவள்

என்று பிறந்தவள் என்று ணராத

இயல்பின ளாம் எங்கள் தாய்

என்று தமிழ்த்தாய் பற்றிக் குறிப்பிட்டார் பாரதியார். ஆம் தமிழ் என்று பிறந்தது என்று யாருக்கும் தெரியாது. தமிழ் மட்டுமல்ல தமிழிலே சில செய்யுட்கள் கூட யாரால் எந்த நூலுக்காக எழுதப்பட்டது என்று தெரியாது.

அப்படிப்பட்ட செய்யுட்கள் பல பழம்பெரும் நூல்களுக்கு உரை செய்த முன்னோர்களால் தங்கள் உரைகளுக்கு மேற்கோள்களாக காட்டப்பட்டிருப்தையும் அந்தச் செய்யுடகளின் அழகும் ஆழமும் படிப்போர் நெஞ்சில் ஒருவித தவிப்பை ஏற்படுத்துகின்றன. பெற்றாரை இழந்த குழந்தைகள் போல அவை எழுதியவன் என்ற தந்தையையும் எந்த நூல் என்ற தாயையும் இழந்து அனாதைகளாகக் கிடக்கின்றன இலக்கிய உலகத்தில்.

அந்த அனாதைச் செய்யுட்களில் ஒன்றுதான் தண்டியலங்காரம் என்னும் அணி இலக்கணப் புத்தகத்துள் மேற்கோள் உதாரணமாகக் காட்டப்பட்டுள்ளது. அந்தப் பாடல் இதுதான்.

ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி

ஏங்கலிநீர் ஞாலத்து இருளகற்றும் ஆங்கவற்றுள்

மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது

தன்னே ரிலாத தமிழ்

உயர்ந்த மலைகளுக்கு இடையே தோன்றி, கடலால் சூழப்பட்ட உலகத்தின் புற இருளைஅகற்றுவது ஒற்றைச் சக்கரத்தை உடைய மின்னலைப் போல ஒளிவீசும் தேரிலே வலம் வருகின்ற வெம்மையான ஒளிக்கதிர்களை உடைய சூரியன் ஒன்று. இன்னொன்று பொதிகை மலையில்தோன்றி, சான்றோரால் தொழப்பட்டு,மக்களின் அறியாமை என்னும் அக இருளைப்போக்குவதோடு ஒப்புவமை இல்லாததுமாக இருப்பது இன்னொன்று. அது தான் தனக்கு எதுவும் ஒப்புவமை இல்லாத தமிழ் என்பது இதன் பொருளாகும்.

இந்த உலகத்திலே கதிரவனும் தமிழும் தான் இருளை அகற்ற வல்லன என்று இந்தப்பாடல் சொல்கிறதே அதிலென்ன பிரச்சனை என்று நினத்துவிடாதீர்கள். பாடலிலே குற்றம் இல்லை. அந்தப் பாடல் தத்தெடுத்து பாவிக்கப்படும் கூட்டத்தில் தான் தவறு இருக்கின்றது. தவறு என்று சொல்வதிலும் பார்க்கத் தமிழ்க் கொலை நடக்கின்றது என்று சொல்லிக் கொள்ளலாம்.

இங்கே என்ன குற்றம் செய்கிறார்கள் என்றால் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது என்ற பாடல் அடியில் மின்னேர் தனியாழி என்ற அடிக்கு உரை சொல்லாமல் தவிர்த்துவிட்டு மற்ற அடிகளுக்குப் பொருள் சொல்லிப் பாடப்புத்தகத்திலும் சேர்த்திருக்கின்றார்கள்.

ஒளிபொருந்திய ஒற்றைச் சக்கரத்தையுடைய தேரில் வலம் வரும் சூரியன் என்று பாடலின் உண்மையான பொருளைச் சொன்னால் புராணங்களிலே ஏழு குதிரைகளும் ஒற்றைச் சில்லும் உடைய தேரிலே சூரியன் வலம் வருகின்றான் என்று சொல்லப்படுகின்ற கருத்தை பகுத்தறிவு வாதிகளாக தங்களை அடையாளப்படுத்த நினைக்கும் தாமும் ஏற்றுக் கொண்டதாகப் போய்விடுமே என்ற பயத்தில் ஓசைப்படாமல் தவிர்த்து விட்டார்கள்.

உதய சூரியனும் தமிழும் சிறப்பிக்கப் படுவதால் இந்த பாடல் அவர்களுக்கத் தேவைப்படுகின்றது. ஆனால் அதில் வரும் மின்னேர் தனி ஆழி வெங்கதிரோன் என்ற அடைமொழி வேண்டாம். அது புராணம். என்ன உலகம் இது. பாலை நக்கிக் கொண்டு அப்பத்தை எறியும் குழந்தை போல இவர்களின் தமிழ்ப் பற்று இருந்து விடுகின்றது.

காலம் காலமாக நிலைபெற்று நிற்கும் கடவுள் கொள்கையை முறியடித்தால் தான் தங்கள் பகுத்தறிவுச் சிந்தனைகளை வளர்க்க முடியும் என்று இவர்கள் தப்பாக நினைக்கின்றார்கள். ஆனால் மிகுந்த சிவ பக்தராக இருந்து கொண்டு மூடப் பழக்க வழக்கங்களைக் கடுமையாக எதிர்த்தவர் சிவவாக்கியர். அவவரளவுக்கு தீவிரமாக சாதியை எதிர்த்தவர்கள் யாருமில்லை. அவர் சொல்லுவார்

பறைச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா

இறைச்சிதோல் எலும்பிலே இலக்கமிட்டு இருக்குதோ

பறைச்சி போகம் வேறதோ பணத்தி போகம் வேறதோ

பறைச்சியும் பணத்தியும் பகுத்துப்பார் உனக்குள்ளே

இதைவிடக் கடுமையாக உங்களால் பாட முடியுமா? ஒரு கடவுள் நம்பிக்கையாளனாக சிவவாக்கியார் இருந்ததால் சாதி எதிர்ப்புக்கு இவர்கள் இந்தப் பாடலை உதாரணம் காட்டுவதில்லை. கோவில் கோவிலாக ஏறி இறங்கிய திருநாவுக்கரசு நாயனார் ஒருபாட்டிலே சொல்லுவார்

அங்கமெலாம் குறைந்து அழுகும் தொழு நோயராய்

ஆவுரித்துத் தின்று உழலும் புலையர் ஏனும்

கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பர் ஆகில்

அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவு ளாரே

ஆடுமாடு உரித்துச் சாப்பிடும் புலையர் குடும்பத்தில் பிறந்தாலும் கடவுளிடம் அன்பாக ஒருவன் இருப்பானேல் அவனை நான் கும்பிடுவேன் என்று தன் கொள்கையைச் சொன்னார் திருநாவுக்கரசர். இது எல்லாம் சாதி ஒழிப்பு முயற்சி என்று இவர்களுக்குத் தெரியவில்லையா. ஏற்க மாட்டார்கள் நாவுக்கரசர் கடவுள் மறுப்பாளனாக இவர்களின் வட்டத்துக்குள் இல்லை.

அது போல பிராமண எதிர்ப்பை இந்தப் பகுத்தறிவு வாதிகள் தான் காட்டியிருக்கின்றார்கள் என்றில்லை. கடவுள் நம்பிக்கை மிக்க சிவவாக்கியாரும் காட்டியிலுக்கின்றார்.

மீனிறைச்சி தின்றதில்லை அன்றுமின்றும் வேதியர்

மீனிருக்கும் நீரலோ மூழ்வதுங் குடிப்பதும்

மானிறைச்சி தின்றதில்லை அன்றுமின்றும் வேதியர்

மானுரித்த தோலலோ மார்புநூல் அணிவதும்.

ஆட்டிறைச்சி தின்றதில்லை அன்றுமின்றும் வேதியர்

ஆட்டிறைச்சி அல்லவோ யாகம்நீங்கள் ஆற்றலே

மாட்டிறைச்சி தின்றதில்லை அன்றுமின்றும் வேதியர்

மாட்டிறைச்சி அல்லவோ மரக்கறிக் கிடுவது.

எங்கே மூடப் பழக்க வழக்கங்கள் மனித சாதியியின் முன்னேற்றத்துக்கு தடையாக இருக்குமோ அதையெல்லாம் கடவுள் நம்பிக்கை உள்ளவனும் எதிர்த்திருக்கின்றான். எனவே கடவுளை மறுத்தால் தால் தான் புராண இதிகாசங்களை ஒழித்தால் தான் சமூக மறுமலர்ச்சி ஏற்படும் என்ற வாதம் படிக்காதவன் காதில் சுற்றப்படும் பூ என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

கடவுள் நம்பிக்கையாளர்கள் ஏதோ பாமரத் தனமாகக் கடவுள் கால்கலைக் கட்டிக்கொண்டு மட்டும் கிடந்துவிடவில்லை. மிகச்சிறந்த விஞ்ஞான உண்மைகளையும் ஆராய்து சொல்லியிருக்கின்றார்கள்.

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்

அளப்பருந் தன்மை வளப் பெருங் காட்சி

ஒன்றனுக்கு ஒன்று நின்றெழில் பகரின்

நூற்று ஒரு கோடியின் மேற்பட விரிந்தன

இல்நுழை கதிரின் துன்அணுப் புரையச்

சிறிய ஆகப் பெரியோன் தெரியின்

19ம் நூற்றாண்டில் விண்ணியல் அறிஞர்கள் கண்டறிந்த விடயங்களைத்தான் மாணிக்கவாசகர் 8ம் நூற்றாணடில் தனது திருவண்டப் பகுதியில் சொல்லியிருக்கின்றார். பிரபஞ்சம் அளக்க முடியாதது. அதிலே உருண்டையான கோள்கள் நூறு கோடிக்கும் மேலே உள்ளன. அவை ஒன்றை ஒன்று தம் ஈர்ப்புச் சக்தியால் கவர்கின்றன. சூரியன் நுண்ணிய அணுத்திரள்களால் ஆனது. அந்த அணுத்துகள்கள் கீற்றாகி ஏனைய கிரகங்கள் மீது படுகின்றன என்று அவர் விபரித்துக்கொண்டே செல்வார்.

இனி எங்கள் தண்டியலங்காரப் பிரச்சனைக்கு வருவோம். தமிழ்ச் சமுதாயத்தை நம்பிப் பெயர் தெரியாப் புலவன் ஒருவன் ஒப்படைத்த இலக்கிச் செல்வம் அல்லவா இந்தப் பாடல். அதிலே நாம் கை வைக்கலாமா என்ற சிந்தனை கூடவா அரசியல் ஆதாயத்துக்காக பலியாகி விடும்.

இன்று இந்தச் செய்யுளின் ஒரு அடிக்குப் பொருளை மறைப்பவர்கள் நாளைக்கு இந்த அடியையே மறைத்து வேறொரு அடியைத் தங்கள் சித்தாந்தத்துக்கு அமைவாக இடைச்செருகல் செய்து கொண்டால் கலப்படப் பொருள் போல இந்தச் செய்யுளும் நாளைக்கு சுவையில் குன்றிவிடுமே என்று தமிழார்வலர்கள் சிந்திக்க மாட்டார்களா.

தண்டியலங்காரத்துக்கு தான் வகுத்த உரையிலே சுப்பிரமணிய தேசிகர் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது என்ற அடிகளுக்கு ஒளியும் அழகும் தனிக்காற்றேரும் விரும்பும் வெய்யிலுமுடைய ஆதித்தன் என்றுதான் பொருள் கூறினார்.

தனிக்காற்றேர் – தனி கால் தேர் – ஒற்றைச் சக்கரத்தை உடைய தேர்.

தர்க்க ரீதியாக நோக்கினாலும் மின்னேர் தனியாழி சூரியனுக்கு உரியதல்ல. அவன் தேருக்குத்தான் உரியது ஒற்றைச் சக்கரம்

இங்கே நடந்திருக்கின்ற மிகப்பெரிய விபரீதம் என்னவென்றால் தமிழை வளர்த்து வளப்படுத்திய பராணங்கள் இதிகாசங்கள் திருமுறைப்பாடல் போன்றவற்றை அப்புறப்படுத்தி விட்டு தங்கள் பகுத்தறிவு எண்ணங்களுக்குள் தான் தமிழ் தங்கியிருக்க வேண்டும் என்ற நரித்தனத்தில் ஒருகூட்டம் இயங்கி வருவதுதான். இது தமிழுக்கு மிகப்பெரிய ஆபத்தாக முடியும்.

தமிழ் இலக்கியங்களிலே தமது கொள்கையோடு முரண்படும் செய்திகளை எல்லாம் அழித்தொழிக்க முயலும் இந்தக் கூட்டத்தினர் பற்றி தமிழ் உணர்வாளர்கள் விழிப்போடு இருக்க வேண்டும் இவர்கள் எங்கெல்லாம் கைவைத்து இலக்கியங்களை திருத்தியிருக்கின்றார்கள் என்ற உண்மை வெளியுலகிற்குத் தெரிய வேண்டும்.

ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு நரராயணாய நம என்ற பாடத்தை இரணியாய நம என்று மாற்றிக் குழந்தைகளின் பாடத்திட்டத்திலேயே கைவைத்த இரணியன் ஆட்சியை மட்டுமல்ல உயிரையும் சேர்த்தே இழந்தான் என்பார் வாரியார். அந்த வாரியாரும் ஒளவையும் செய்த தமிழ்வளர்ச்சிக்கு ஈடாகுமா எங்கள் தில்லுமுல்லுகள் என்று இவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஒரு அம்மாவிடம் இருந்து குழந்தையைப் பறித்து எடுப்பது போலத்தான் புராணங்கள் இதிகாசங்கள் திருமுறைப் பாடல்களில் இருந்து தமிழைப் பிரித்தெடுப்பதும் என்று இவர்கள் உணர வேண்டும். இவர்களுக்கு உணர்த்த வேண்டும். யார். தமிழ் கற்றோர் அனைவரும் தான். நன்றி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.