வாழ்வியல் இலக்கியமும் வரலாற்று இலக்கணமும்.
அவன் வருவானா என்று மெதுவாகக் கேட்டாள் அவள். தங்களை யாராவது கவனிக்கிறார்களா என்று நான்கு புறமும் பார்த்துவிட்டு ஆம் என்று தலையசைத்தாள் தோழி. எப்போ என்றாள் அவள் மீண்டும். இன்றிரவு என்றாள் தோழி.
இன்றிரவா இது நிலாக்காலம் அல்லவா யாரும் காணமாட்டார்களா. கேள்வி எழுப்பினாள் அவள். எல்லோரும் வலை எடுத்துக்கொண்டு மாலையே கடலுக்குப் போய்விட்டார்கள். உன் அண்ணன்களும் தான் ஓடம் எடுத்துச் செல்வதைப் பார்த்தேனே. எல்லா வீடுகளிலும் பெண்கள் தானே இருப்பார்கள். அப்புறம் என்ன பயம் இது தோழி.
இல்லை. வரும் வழியிலே யாராவது அவனைக் கண்டால் என் காதலுக்காக வீணாக அவன் உயிர் போய்விடும் என்ற பயந்தான்.
அதைக் காதலிக்க முன்னர் யோசித்திருக்க வேண்டும் நீ. அவன் வேண்டும் என்று என்னோடு அடம் பிடிப்பது. அவனைக் காண்பதற்கு நான் ஒழுங்கு செய்தால் அப்புறம் பயந்து நடுங்குவது என்ன பொண்ணு நீ
அப்படியில்லை. காலமெல்லாம் அவனோடு நான் வாழ வேண்டும். அவனுக்கு ஏதும் என்றால் நானும் உயிரோடு இருக்க மாட்டேன். நாமே அவனை வரவழைத்து ஊருக்கு காட்டிக்கொடுத்துவிடக் கூடாது. அதனாலே கேட்டேன்.
இதோ பார். அவன் தெரு வழியாக மாப்பிள்ளைக் கோலத்தில் வரவில்லைச் சரியோ. உனக்காக யாருக்கும் தெரியாமல் புரால் நாற்றம் வீசும் அலையிலே நீந்திக் கொண்டு வந்து எங்கள் குடிசைகள் இருக்கும் எல்லையை நெருங்கியதும் தண்ணீரை வேகமாகக் கலக்குவான். அந்தச் சத்தம் தோழி வார்த்தையை முடிப்பதற்குள் அவள் அவசரமாகக் குறுக்கிட்டாள்.
போச்சு. எல்லாமே போச்சு. வள்ளத்தை வலிக்கும் துடுப்புச் சத்தமே எங்கள் வீட்டுக்குக் கேட்காத போது அவன் கையால் தண்ணீரைக் கலக்குவானாவாம் அதைக் கேட்டு நான் எழுந்து போக வேண்டுமாம். இதெல்லாம் நடக்கக் கூடிய காரியமா ஏன் வரவர உன் புத்தி அறுந்த வலை மாதிரி ஒன்றுக்கும் உதவாமல் போய்விட்டது.
நான் சொல்வதை முழுவதும் கேட்டுவிட்டு பேசு அவசரக் குடுக்கை என்று கண்டித்துவிட்டுத் தோழி தொடர்ந்தாள். எங்கள் ஊரிலே மீன் கொள்கலன்கள் பின்னுவதற்காக ஓலைகள் வெட்டப்பட்ட உயர்ந்த பனை மரங்கள் நிறைய உண்டு. அந்த பனை மரங்களிலே வளைந்த அலகுகளை உடைய அன்றில் பறவைகள் குஞ்சுகளுடன் குடும்பங்களாக வாழும்.
இரவு நேரத்திலே பாம்புகள் பிணைவது போல தங்கள் கழுத்துக்களை ஒன்றுடன் ஒன்று பின்னிக் கொண்டு ஆணும் பெண்ணுமாய்த் தழுவிக் கிடக்கும் .
அப்பறவைகள் உன்னவன் எழுப்பும் அலையோசையைக் கேட்டு அஞ்சி பெருங்குரலெடுத்து ஒலி எழுப்பும். அந்தச் சத்தம் உனக்கும் எனக்கும் நிச்சயம் கேட்கும்.
நீர்ப் பறவைகள் ஒலியைத் தினமும் கேட்டுப் புளித்துப் போன எங்கள் சமூகம் அதைப் பொருட்படுத்தாது காலையில் வள்ளங்கள் மீளும் கடல் துறைக்குச் செல்ல வேண்டும் என்ற நினைப்போடு ஆழ்ந்த உறக்கத்தில் கிடக்கும்.
அந்த நேரம் பார்த்து நீ அவனிடம் செல்கின்றாய். நானும் வருகின்றேன் உனக்குப் பாதுகாப்பாக என்றாள் அந்தத் தோழி.
காடுவாய்ப் புணரன்றில் கொய்மடற் பெண்ணைத்
தடவுக் கிளைபயிருந் தண்கடற் சேர்ப்பன்
நிலவுக் கொடுங்கழி நீந்திநம் முன்றிற்
புலவுத் திரைபொருத போழ்து.
இதன் பொருள்
தண் கடல் சேர்ப்பன் – குளிர்ந்த கடற்கரைப் பரப்பில் வாழும் உன் காதலன் நிலவு கொடுங்கழி நீந்தி – மணல் மேடுகளையும் கழிகளையும் கடந்து நம்முன்றில் புலவு திரை பொருத போழ்து – நம் வீட்டு எல்லையில் புலால் நாற்றத்தையுடைய நீரில் அலையடிக்கும்படி நீந்தி வந்து தன் வரவைத் தெரிவிக்கும் போது கொய்மடல் பெண்ணை – மீன் பறிகள் பின்னுவதற்காக ஓலைகள் வெட்டப்பட்ட பனை மரத்தில் கொடுவாய் புணர் அன்றில் தடவு கிளை பயிரும் – வளைந்த வாயையுடைய சேவலும் பேடுமாக இணைந்திருக்கும் அன்றிற் பறவைகள் பெருகிய தம் குஞ்சுகள் நட்புகள் ஆகிய சுற்றத்தை பயத்தினால் எச்சரிக்கை செய்து பெருங்குரல் எழுப்பும்.
இந்தப் பாடல் சங்க இலக்கியங்களுக்கு அடுத்துத் தோன்றிய பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலே ஒன்றான கைந்நிலை என்ற இலக்கியத்துள் காணப்படுகின்றது. புல்லங்காடனார் என்ற புலவர் பாடியிருக்கின்றார்.
எங்கள் செந்தமிழ் நிலப்பரப்பில் ஒருகால கட்டத்தில் வாழ்ந்த ஒரு மக்கள் கூட்டம் தன் காதல் தொடர்புகளை பரிமாறிக் கொள்ள கையாண்ட வழிமுறைகளை இவ்வாறு செய்யுட்களாக குறித்து வைத்துவிட்டுப் போயிருக்கின்றது.
இந்த நிகழ்வுகள் ஏதோ விளையாட்டு வேடிக்கைச் சம்பவங்கள் அல்ல தங்கள் வாழ்வியல் எதிர்காலச் சந்ததிக்கு முக்கியமான செய்தியாகக் சென்றடைய வேண்டும் என்று நினைத்து தோழிக்கு தோழி காதலில் உதவி செய்து காதலன் இருக்கும் குறித்த இடத்தில் அழைத்துச் சென்று தனிமையில் விடும் பண்பாட்டை இரவுக்குறி என்று இலக்கணம் வகுத்தது தமிழ்.
அந்த இரவுக் குறியைக் கூட மிகவும் நுண்ணிய முறையில் ஆராய்ந்து காதலனும் காதலியும் சந்திக்க முடியாமல் இடையூறு ஏதும் ஏற்பட்டால் அதைக் கூட இரவுக்குறி இடையீடு என்று சொல்லி அதற்கொரு இலக்கணம் வகுத்தது எங்கள் தமிழ்.
அந்த இலக்கணம் பற்றி எழுதப் போனால் அது இன்னும் நீண்டு கொண்டு செல்லும். பல பக்கங்களுக்கு!
கனடா தமிழர் தகவல் சஞ்சிகையில் 5.9.2023 அன்று வெளியான எனது கட்டுரை இது.