வள்ளுவரின் பறையும் கம்பனின் கதையும்!
கம்பர் சித்திரம் 7
தமிழ் இலக்கியங்களிலே பல இடங்களில் பேசப்படும் தோல் கருவி பறை. எம் முன்னோர்கள் அதை இசை வாத்தியமாகவும் செய்திகளை அறிவிக்கும் சாதனமாகவும் பயன்படுத்தினார்கள். ஆனால் இன்று அதன் பாவனை மரண வீடுகளிலும் ஒருசில ஆலய நிகழ்வுகளிலும் மட்டுமே வழக்கொழிந்து கிடக்கின்றது.
அதைத் தொட்டவர்கள் கூட இழி பிறப்பாக ஒதுக்கப்படும் நிலையே வலுப்பெற்றும் இருக்கின்றது.
ஒரு விடயத்தை அக்கறையோடு கூர்ந்து கவனிக்கச் செய்வதற்கு பழைய தமிழர்கள் பறையின் உதவியை நாடினார்கள்.
வாய் பறையாகவும் நாக்கு அடிப்பான் ஆகவும் சாற்றுவது ஒன்றைப் போற்றிக் கேண்மின் என்று பேசும் வெற்றி வேற்கை. எனது வாய் பறை மேளமாகவும் அதை அடிக்கும் குறுந்தடியாக எனது நாக்கையும் கொண்டு நான் சொல்லப் போவதை உற்றுக் கவனியுங்கள் என்பது இதன் பொருளாகும்.
இத்தகைய பறையை திருவள்ளுவர் தனது கயமை என்ற அதிகாரத்திலே ஒன்றுக்கும் உதவாத கயவருக்கு உதாரணமாகப் பயன்படுத்திக் கொள்வார்.
இந்தக் கயவர்கள் இருக்கிறார்களே அவர்கள் வெளியே சொல்லக் கூடாத செய்தியொன்றைத் தெரிந்து கொண்டால் அதன் விளைவு கருதி அதைத் தம்மோடு மறைத்து வைத்திருக்க மாட்டார்கள். ஊர் முழுவதுமே சொல்லிவிட்டுத்தான் இருப்பார்கள்.
இந்தக் கயவரின் செயலும் தான் ஒலி எழுப்பி ஊர் முழுவதும் செய்திகளை அறிவிக்கும் பறையின் செயலும் ஒன்றாகத்தான் இருக்கின்றது என்பார் திருவள்ளுவர்.
அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறை பிறர்க்கு உய்த்து உரைக்கலான்.
(திருக்குறள் – கயமை)
திருவள்ளுவரின் இந்தக் கருத்தை தன் இலக்கியத்திலே கம்பன் மிகவும் அழகாகப் பயன்படுத்திக் கொள்வான். இந்தக் குறளை ஒரு கற்பாறை என்று நாம் எடுத்துக் கொண்டால் அதைச் செதுக்கி ஒரு அழகான சிலையாகத் தரும் சிற்பியாக கம்பனை நாம் பார்க்கப் போகின்றோம்.
இராமனின் திருமணத்திற்காக பல ஊர்களில் இருந்தும் அரசர்களும் படைத் தலைவர்களும் வீரர்களும் என்று வந்து கொண்டிருக்கின்றார்கள். அயோத்தி மக்களும் திரண்டு வருகின்றார்கள் மிதிலைக்கு. அவர்கள் தனித்து வரவில்லை. தங்களோடு பெண்களையும் அழைத்து வருகின்றார்கள் திருமணம் என்ற காரணத்தால்.
வழியிலே தேர்க் குதிரைகளுக்கும் அவர்களுக்கும் ஓய்வு தேவைப்படுகின்றது. காட்டு வழியிலே நீர் நிலைகளை அண்டிய சோலைகளிலே அவர்கள் கூட்டம் கூட்டமாகப் பிரிந்து தங்கிக் கொள்கின்றார்கள்.
பொழுது இருட்டிக் கொள்கின்றது. ஆண்களும் பெண்களும் வேறுபாடின்றி நன்றாக மது அருந்திக் கொள்கின்றார்கள். போதை தலைக்கேறுகின்றது. ஒரு பெண் கூட்டத்தில் வந்திருந்த தன் காதலனைத் தேடிச் செல்கின்றாள்.
இருவரும் சந்தடியே இல்லாத ஒரு இடத்தில் யாரும் காணாத மறைவில் அமர்ந்து பேசிக் கொள்கிறார்கள். காதலி தன் ஆடவனிடம் சொன்னாள்.
இதோ பார். எந்த விசயத்திலும் உனக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு இல்லாமல் ஒன்றாகத் தான் இருக்கின்றது. எங்கள் இருவருக்கும் இரண்டு உயிர்கள் இருந்தாலும் ஒரு உயிர் இருப்பது போலத்தான் உணர்ந்து நடந்து கொள்கின்றோம் .
அப்படி இருக்கும் போது இந்த உடல்கள் மட்டும் ஏன் இரண்டாக இருக்க வேண்டும். அவையும் ஒன்றாகவே இருக்கட்டும். அதனால் என்னை இறுக்கமாகக் கட்டியணைத்துக்கொள் என்றாள் மெதுவான குரலில்.
கருத்து ஒரு தன்மையது உயிரும் ஒன்று தம்
அருத்தியும் அத் துணை ஆய நீரினார்;
ஒருத்தியும் ஒருத்தனும் உடம்பும் ஒன்று எனப்
பொருத்துவர் ஆம் எனப் புல்லினார் அரோ.
(கம்பராமாயணம் – உண்டாட்டு படலம்)
காதலியே அனுமதி வழங்கும் போது காதலன் விடுவானா. அவளைக் கட்டியணைத்துக் கொள்கின்றான். மது போதையும் இரவும் தனிமையும் அவர்களை காமவசப்படுத்தி விடுகின்றது.
அவள் கையிலே இருந்த வளையல்களையும் காலிலே இருந்த சிலம்புகளையும் காதலன் அகற்றுகின்றான். அவள் ஏனென்று கேட்கவில்லை. ஆனால் இடையிலே கட்டியிருந்த ஒட்டியாணத்தை அவிழ்த்து விடாமல் அதை அவசரமாக காதலன் இழுத்து அறுத்து தூர வீசிய போது தான் அவளுக்குக் கோபம் வந்தது.
இது எவ்வளவு காசு என்று உனக்குத் தெரியுமா அதை ஏன் அறுத்து எறிகின்றாய் என்று சத்தம் போட்டாள் அவள். இந்த இடத்தில் தான் கம்பன் அந்தத் திருக்குறளைக் கொண்டு வருகின்றான்.
எடியே எங்கு பார்த்தாலும் ஆட்கள் தூங்கிக்கொண்டு இருக்கின்றார்கள். காப்பும் சிலம்பும் ஒட்டியாணமும் மறைவிடத்தில் நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை ஒலிக்கின்ற பறை மேளம் போலச் சத்தம் போட்டுக் காட்டிக் கொடுத்து விடும். பரவாயில்லையா.
எதையும் யோசித்து எச்சரிக்கையாக நடந்து கொள்ளாமல் பறை போன்ற இவற்றையெல்லாம் கூட வைத்துக் கொண்டு எங்களைக் காட்டிக் கொடுக்கப் போகின்றாயா என்று கேட்டான் அந்தக் காதலன் என்று பாடினான் கம்பன்.
நறை கமழ் அலங்கல் மாலை
நளிர் நறுங் குஞ்சி மைந்தர்
துறை அறி கலவிச் செவ்வித்
தோகையர் தூசு வீசி.
நிறை அகல் அல்குல் புல்கும்
கலன் கழித்து அகல நீத்தார்;
அறை பறை அனைய நீரார்
அரு மறைக்கு ஆவரோதான்?
(கம்பராமாயணம் – உண்டாட்டு படலம்)
திருக்குறளிலே கயவருக்கு உதாரணம் காட்டப்பட்ட பறை இராமாயணத்திலே பெண்களின் அணிகலன்களுக்கு உதாரணமாகி விடுகின்றது. ஆனால் கயவரைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு எதுவும் செய்யக் கூடாது காட்டிக் கொடுத்துவிடுவார்கள் என்ற கருத்து ஒற்றுமை வள்ளுவருக்கும் உண்டு. கம்பனுக்கும் உண்டு.
அதை வள்ளுவர் அற வடிவத்திலும் கம்பன் காதல் வடிவத்திலும் தந்துவிட்டுச் சென்றிருக்கின்றார்கள்.
தமிழர் தகவல் சஞ்சிகையில் இன்று (5.7.22) வெளியான எனது கட்டுரை இது.
இரா.சம்பந்தன்.