|

மனிதனும் தெய்வமும்!

தெருமுனையில் போகிறவன் இறைவன் என்று
தெரிந்துகொண்டும் கதைக்காமல் விலகிப் போனேன்
இருகரமும் தட்டியென்னை அழைத்தான் அந்த
ஈசுவரன் என்னவென்று கேட்டேன் நானும்
பெருமளவு மனக்கவலை அதனால் தானோ
பேசாமல் போகின்றாய் மனிதா என்றான்
ஒருகவலை இருகவலை என்றால் சரிதான்
ஒட்டுமொத்த வாழ்க்கையுமே கவலை என்றேன்


துளியளவும் கவலையிலா வாழ்வு வாழத்
தொல்லையிலா வழியொன்று மனிதா உண்டு
வெளியிருந்து கற்பதற்கும் ஒன்றும் இல்லை
வேண்டுதலும் தேவையில்லைத் தெய்வம் முன்னால்
ஓளிபிறக்கும் வாழ்க்கையிலே மகிழ்வு தங்கும்
ஓயாத கவலையெலாம் ஓடிப் போகும்
உளிகொண்டு உள்ளத்தைச் செதுக்கிக் கொள்ளும்
உபதேசம் இதுவென்று இறைவன் சொன்னான்


துன்பமொன்று வருகிறது ஒன்றால் என்றால்
தூக்கியெறி அதுகொடுக்கும் சுகத்தை அங்கே
இன்பமொன்று கிடையாமல் போகும் ஆனால்
இத்தனைநாள் அனுபவித்த துன்பம் இல்லை
துன்பத்தைக் கடப்பதற்கு மனிதா வாழ்வில்
இன்பத்தைக் கைவிடவே பழகிக் கொள்வாய்
தன்பத்துக் குறள்களிலே இதனைத் தானே
தந்துவிட்டு வள்ளுவனும் போனான் என்றான்!

ஒரு பொருளால் ஏற்படும் துன்பத்தைத் தவிர்ப்பதற்கு அந்தப் பொருளாலே கிடைக்கின்ற இன்பத்தை முதலில் கைவிடப் பழகுங்கள் என்று ஒரு குறள் எழுதினார் திருவள்ளுவர்!

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்

இதன் கருத்து என்னவென்றால் யாது யாது பொருட்களின் தொடர்பை ஒருவன் துறக்கின்றானோ அந்த அந்தப் பொருட்களினால் அவன் நொந்து துன்பம் அடைதலில் இருந்தும் தப்பித்துக் கொள்கின்றான் என்பதாகும்!

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.