|

வாரியார் பேசிய அரசியல்!

போர்களத்திலே இராமனுடைய படைகளும் இராவணனுடைய படைகளும் அணிவகுத்து நிற்கின்றன.
போர் தொடங்க இருந்த நேரத்திலே அநுமான் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது.

இந்த இராவணனை இராமச்சந்திர மூர்த்தி போர் செய்து தான் அழிக்க வேண்டுமா? நானே என் கைகளால் இவனைக் கொலை செய்து சீதையை மீட்டு வருவேன் என நினைத்து தன் எண்ணத்தை இராமரிடம் தெரிவித்தார். இராமனும் சிரித்து முயற்சி செய் என்று விடை கொடுத்தார்.

நேராக இராவணன் முன்பு சென்ற அநுமான் இராவணா! நீ இராமரோடு போர் செய்வது இருக்கட்டும். நீ உனது பலத்தையெல்லாம் பாவித்து உன் கைகளால் எனது மார்பிலே குத்து. நான் வீழ்ந்து விடமாட்டேன். அது போல நானும் உன்னைக் குத்துவேன். நீ அழிந்து போய் விடுவாய்! அப்படி நீ இறக்கவில்லை என்றால் இராமனுக்கும் உனக்கும் இடையிலே நடக்கும் போரில் உனக்கு எதிராக நான் ஆயுதம் எடுத்து சண்டை செய்ய மாட்டேன். இது சத்தியம். உனக்குச் சம்மதமா? என்று கேட்டான்.

தனது வீரத்துக்கு விடப்பட்ட சவாலாக அதை ஏற்று இராவணன் ஆயுதங்களைப் போட்டுவிட்டு தேரிலிருந்து நிலத்தில் குதித்தான். ஆயுதம் அற்றவனையும் வாகனம் அற்றவனையும் ஆயுதம் கொண்டு தாக்கும் மரபு அந்தக் காலப் போர் முறையில் குற்றம். யுத்த தருமம் இல்லாத செயல்.

எனவே அநுமானைப் போல வெறும் கையோடு குதித்த இராவணன் தனது இருபது கைகளாலும் ஓங்கி அநுமானின் மார்பிலே குத்தினான். அநுமான் அசையவில்லை. பின்பு அநுமானும் தன் இரண்டு கைகளையும் ஒன்று சேர்த்து அதைப் பின்பும் தன் வாலினால் சுற்றி நிலத்திலிருந்து துள்ளி இன்றோடு நீ அழிந்தாய் என்று இராவணன் நடு மார்பிலே குத்தினான். இராவணனின் இருபது மூக்குகளில் இருந்தும் இரத்தம் வடிந்தது. துடைத்துவிட்டு நிமிர்ந்து நின்றான். சாகவில்லை.

இராவணா! என்னுடைய இந்தத் தாக்குதலுக்கு வேறு யாராக இருந்தாலும் இயமலோகம் சென்றிருப்பார்கள். நீ வீரன். இனி உனக்கு எதிராக நான் ஆயுதம் ஏந்திப் போர் செய்ய மாட்டேன் என்று சொல்லிவிட்டு அநுமான் போய்விட்டான்.

இராமாயணம் படித்தவர்களுக்குத் தெரியும். இதற்குப் பிறகு இராம இராவண யுத்தத்திலே அநுமான் ஆபுதம் ஏந்தி இராவணனோடு சண்டை செய்ததாக வரலாறு கிடையாது.

அநுமான் குரங்கு! ஒரு குரங்கு தான் போட்ட ஒப்பந்தத்தைக் கடைசிவரைக்கும் காப்பாற்றி விட்டது. ஆனால் மனிதன் தான் போட்ட ஒப்பந்தத்தை தானே கிழித்து எறிந்து போட்டான். இந்த இரண்டு நிகழ்ச்சிகளும்; நடந்தது இந்த இலங்கை மண்ணில் தான் அதனாலே இதைச் சொன்னேன்!

( கொக்குவில் மஞ்சவனப்பதிப் பேருரை )

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.