மனித உள்ளங்களும் மாவீர நெஞ்சங்களும்!
அந்தப்புரமும் அழகான மங்கையரும் யானைகளின் தந்தத் துண்டுகளே தாங்கிநின்ற கட்டில்களும் அதில் சிந்திப் பரவிய பூ சீரழிந்த காட்சிகளும் தொங்கும் திரைச்சீலை தோல்வியுற்ற அகல்விளக்கு என்று எங்கும் காமவெறி காட்டாமல் பிறவுலகப் போரும் கொடையும் போர்க்களத்துச் செய்திகளும் பாழும் தமிழ்க் குடிகள் பட்டதுயர் அவைகளுடன் வீழும் நிலத்துக்காய் அழிந்தொழிந்த தமிழர்களின் ஆளும் அரசுகளைப் பேசுகின்ற நானூறு புறப்பாடல். நமக்கு இதைச் சொல்கிறது.
மூன்று முடி வேந்தர்களும் மூளை கெட்டுத் தமக்குள்ளே ஊன்றுவித்த பகைமையினால் இழந்தது நாம் ஏராளம். ஆண்டு வந்த சிற்றரசை அலையவிட்ட காரணத்தால் தாண்டவொண்ணாக் கேடுவந்து தமிழ்க் குடியைச் சூழ்ந்த கதை கூண்டு புக்க கிளிபோல ஒளித்திருக்கும் ஏடுகளில்.
நின்று போராடி நிலம் தோற்றுப் போனாலும் அதன் பின்பு தின்று உயிர்வாழும் திசைநோக்கா மாவீரர் இன்றும் எம்மிடையே இருந்துவிட்டுப் போனது போல் அன்றும் ஓர் தமிழ் மறத்தி. அரசியவள் பாண்டியர்க்கு. உரசிப் பகை வேந்தர் உள்நுளைய அவர் சூடும் சிரசின் முடி அகற்றிச் சிறைசெய்ய நினைத்த தன் கணவன் முரசோய்ந்து முதுகளத்தில் முன்னாலே வீழ்ந்துவிட்ட செய்தி கிடைக்கிறது சிறுபறவை அவளுக்கு.
கணநேரம் துடித்திட்டாள். கண்ணாளா என்றழுதாள். கலங்கிய கண் துடைத்து விட்டு பிணமெங்கே எனக் கேட்டாள். நிணம் வெந்து நீறாகும் நெடுங்காட்டில் அவனுடலை கனங்கொண்ட விறகடுக்கிப் பற்றவைக்கும் காரியங்கள் மணங்கொண்ட மாதரசே நடக்கிறது எனச் சொன்னார் காவலர்கள்.
ஓடினாள் தமிழரசி ஓடிப் பிணமேடை கூடினாள் கொற்றவனின் கோலத்தைப் பார்த்தழுதாள். வாடினாள் கைகூப்பி வணங்கினாள் அவன் பாதம். எரிநெருப்பின் இடைப் புகுந்து இருவருமே ஒன்றாக போய்விடுவோம். சற்றுப் பொறுத்திருங்கள் எனச் சொன்னாள் கணவனிடம்.
கூடியிருந்த பல பெரியவர்கள் அதிர்ந்தார்கள். ஒட்டிநின்ற தோழியரோ ஒரு கையைப் பிடித்திழுத்தார். ஆவி விடும் செயலோ அரசியர்க்கு இனிவேண்டாம் காவி தரித்திருந்து கைய்ம்மை நோன்பியற்றி தேவி நீ எம்முடனே இருந்திடுக எனச் சொன்னார் சான்றோர்கள்.
மீன்விழிகள் சிவக்க செவ்விழ்கள் துடிதுடிக்க தனைத்தடுக்கும் கூன்விழுந்த பெரியோரைக் கூவி அழைத்திட்டாள். என்ன சொன்னீர் பெரியோரே என்ன சொன்னீர் பெரியோரே காலன் கொண்டேகும் கணவனுடன் செல்லென்று சாலச் சிறந்தவொரு காதல் மொழி கூறாமல் தடுத்தென்னை நிறுத்துகின்ற தமிழ்ப்புலவீர் இது கேளும்.
புறமுதுகில் கோடிழுத்த அணிற்பிள்ளை மேனியைப்போல் நிறமுடைய வெள்ளரிக்காய் பிளந்தவிதைக் கோலத்தில் கிடக்கின்ற வெண்சோற்றை நீர் வடித்து நானெடுத்து எள்ளுத்துத் துவையலுக்குள் புளிகலந்த புல்லுக் கீரையுடன் தின்னும் வாழ்வினை நான் வாழ்ந்திடனும் இனியெல்லாம்.
குறுணிக் கல் பரப்பி கூந்தலிலே தலை சாய்த்து இறுதிக் காலத்தில்இப்படித்தான் உறங்கிடனும்இனி வாழ்நாளில்
சாவுக்கு அஞ்சி கைம்மை விரதமென்னும் நோவுக்குள் வாழ்வதற்கு கோழையல்ல நான் இங்கே. ஆரியரின் வேதநெறி அது சொல்லும் பாடமெங்கள் வீரமுள்ள தமிழ்நெஞ்சில் விரதமெனக் கொள்வதற்குப் பிற பெண்கள் இருந்திடலாம் அவர் வழியைப் பின்பற்றி அன்புத் தமிழ்மரபைப் பிறர்பழிக்கச் செய்யேன் நான். பெரியவர்காள் கேளுங்கள்.
கட்டை விறகெரிந்து தளிர்நாவை நீட்டும் தீ சுட்டுவிடும் உம்முடலை பயமுமக்கு ஆன்றோரே ஆனால் எமக்கோ அந்நெருப்பு மொட்டழிந்து மலர்ந்திருக்கும் தாமரைப்பூ குளம் போல குளிரும் மகிழ்ச்சிதரும். செந்தீயின் நாவெந்தன் செவ்வுடலைத் தொடும் போது கமலத்தின் மெல்லிதழ்போல் சுகம் பிறக்கும் எந்தனுக்கு. சாவுக்கு அஞ்சாத சங்க நிலப்பெண் நான்.
என்கணவன் உடலெரியும் ஈமத்தீ நெருப்புள்ளே தென்னவள் நான் போகின்றேன். தீ என்னை ஏற்கட்டும். மாவீர மனம் படைத்த மங்கைநான் சொல்வதெல்லாம் மனிதமனம் உங்களுக்கு மாவீர நெஞ்செமக்கு.
சாவுக்கு பயந்து சடங்குளின் பின்னாலே மறைவதற்குக் காத்திருக்கும் மானுடரே வாழுங்கள். முடியா முடி பரப்பி முகமூடி போடுங்கள். உறையா உணவருந்தி உம்வாழ்வைப் பாருங்கள். பாயை புறக்கணித்து படுத்திருங்கள் கற்பரப்பில் பொட்டிழந்த நெற்றியிலே பொலியட்டும் உம்வாழ்க்கை.
எரிநெருப்பில் இடைப்புகுந்து சிரித்திட்டாள் தமிழரசி. கரியடுத்த சாம்பலெனக் கரைந்திட்டாள் தானெரிந்து. வரியடுத்த பாட்டொன்றால் தமிழ்வாழ்வு குறிப்பிட்ட தமிழ்மறத்தி அவள் பெயர்தான் பெருங்கோப் பெண்டு அதுவாகும். புறதானூற்றிலே புகழுடம்பில் வாழுமவள் வளர்த்தபயிர்க் கூட்டமன்றோ மாவீரர் பெருங்கூட்டம்.
பல்சான் றீரே! பல்சான் றீரே!
செல்கெனச் சொல்லாது, ஒழிகென விலக்கும்
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே!
அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட
காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது
அடை,டைக் கிடந்த கைபிழி பிண்டம்
வெள்எள் சாந்தொடு புளிப்பெய்து அட்ட
வேளை வெந்தை வல்சி ஆகப்
பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும்
உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதேர்
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்குஅரிது ஆகுக தில்ல் எமக்குஎம்
பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்புஅற
வள்இதழ் அவிழ்ந்த தாமரை
நள்இரும் பொய்கையும் தீயும்ஓர் அற்றே!
(புறநானூறு – பாடல் 246 – பாடியவர் பெருங்கோப்பெண்டு.)
கனடா தமிழர் தகவல் சஞ்சிகையில் 5.11.2022 வெளியான எனது கட்டுரை இது.