|

பின்னை இட்ட தீ தென்னிலங்கையில்!

பட்டினத்தார் முன்னை இட்ட தீ முப்புரத்திலே! என்று பாடினாரல்லவா? இதிலே பின்னை இட்ட தீ என்பதற்கு பின்பு இட்ட தீ என்று பலரும் பொருள் சொல்லி வருகின்றார்கள். அது தவறு!
பாற்கடல் கடையப்பட்ட போது முதலில் தோன்றியவள் மூதேவி! பின்பு தோன்றியவள் இலட்சுமி! திருமாலின் மனைவி! இராவணனால் தாம் அடைந்த துன்பத்தை தேவர்கள் திருமாலிடம் சொன்னபோது தேவர்களே! நான் தசரதனுக்கு மகனாக இராமனாகப் போய்ப் பிறக்கிறேன். இலட்சுமி மிதிலையிலே சீதையாக பிறப்பாள். ஆதிசேடன் இலக்குவனாகவும் சங்கு பரதனாகவும் சக்கரம் சத்துருக்கனாகவும் பிறப்பார்கள்! இந்திரனே நீ வாலியாக பிற! சூரியனே நீ சுக்கிரீவனாகப் போ. வாயுவே நீ அநுமனாகப் பிறந்து என்னுடனே இருந்து கொள்! தேவர்களே நீங்கள் கிட்கிந்தையிலே குரங்குகளாகப் பிறந்து நான் வரும்வரை காத்திருங்கள்! இராவணனை வதம் செய்வோம் என்று திருமால் கூறி அப்படியே இராம அவதாரம் எடுத்தார்.
அப்போது சீதையாகப் பிறந்த இலட்சுமியைத் தான் இராவணன் இலங்கையிலே கொண்டுவந்து சிறை வைத்தான். இந்த இலக்குமிதான் அநுமான் மூலமாக இலங்கைக்கு தீ வைத்தாள்! இதை இராவணனின் மந்திராலோசனைக் கூட்டத்தில் அவன் தம்பி விபீடனன் அழகாக சொல்லுவான்!
அண்ணா! ஒரு குரங்கு தீவைத்தது என்று நினைக்காதே! குரங்கால் இலங்கைக்கு தீவைக்க முடியுமா? வைத்தாலும் தீ பிடிக்குமா! பிடித்தாலும் இவ்வளவு அழிவு ஏற்பட்டிருக்குமா? இது நீ கொண்டுவந்து சிறை வைத்திருக்கிறாயே சீதை! அவள் வைத்த நெருப்பு! இது!
கோநகர் முழுவதும் நினது கொற்றமும்
சானகி எனும் பெயர் உலகின் தம்மனை
யானவள் கற்பினால் வெந்தது அல்லது ஓர்
வானரம் சுட்டது என்று உணர்தல் மாட்சியோ?

கம்பராமாயணம் – மந்திரப்படலம்

இந்தக் கருத்தையே பட்டினத்தார் பின்னை இட்ட தீ தென் இலங்கையில் என்று குறிப்பிட்டார்!

இரா.சம்பந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.