நான்பிறந்த சமூகமெது?
வண்டில் விறகெந்த வழியாலே போகுதென்று
வருவோர் போவோரென வழியெல்லாம் விசாரித்து
துண்டு விறகெல்லாம் தூளாக்கிக் கொத்திவிட்டு
தொண்டை காயுதென்றால் போத்தலிலே கிடைக்குமது
சீனி இனிக்காது தெயிலைவடி வடிக்காது
சீரான சூடும் சிலவேளை இருக்காது
கூனிக் கைநீட்டிக் கொடுக்குமதை வாங்கிநான்
பேணி அரைவாசி பின்னாலே குடிக்கவெனக்
காணி வளவடியில் வேப்பமர நிழல்வைத்தால்
எறும்பு மொய்த்துவிடும் அணில்தட்டி ஊற்றிவிடும்
அரும்பும் பசிக்கென்று பாண்துண்டும் பழங்கறியும்
குறும்புக் குழந்தையிடம் எனக்கென்று கொடுப்பதனைக்
காகம் பறித்துவிடும் நாய்நக்கும் சிலவேளை
எல்லாம் பொறுத்துநான் எரிவிறகைக் கொத்திவிட்டு
கல்லில் குந்தியெந்தன் கூலிக்காய் தவமிருந்து
புல்லின் நுனிபோன்ற கிழிதுண்டால் முகந்துடைத்து
ஏசியவர் கொத்தியது மொத்தமென குறைகேட்டு
பேசிவிட்ட காசினிலே ஐஞ்சைப் பறிகொடுத்து
தாறதைநீர் தாருமென்று தருவதையே மடிமுடிந்து
நாறிநின்ற காலத்தை நான்நினைப்பேன் வெளிநாட்டில்
ஏறிநின்று தலையினிலே எனைமிதித்த சமூகமெலாம்
போத்தினிலே தண்ணீரை புலம்பெயர்ந்து குடிக்குதுகள்.
ஊர்ச்சனமும் போத்தல்தான் உதறிவிட்டு ஓடிவந்த
கார்ச்சனமும் போத்தல்தான் கடவுளுக்கும் போத்தல் தான்
நானும் போத்தல்தான் நான்பிறந்த சமூகமெது?
இரா.சம்பந்தன்