நற்றிணை காட்டும் வருந்திய மனம்!
நான்கு புறமும் மதில்களால் சூழப்பட்ட அந்த வீட்டின் வாயில் கதவிலே மணிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. யாராவது அந்தக் கதவினைத் தொட்டுத் திறந்தாலோ மூடிக் கொண்டாலோ ஒலி எழுப்பி நடப்பதை அறிவிக்கும் பாதுகாப்புத் தன்மையுடன் இருந்தது அந்த வாயில்.
முற்றத்திலே போடப்பட்டிருந்த பந்தலின் நிலத்துக்கு மணலும் கூரைக்கு இலைகளும் பரப்பப் பட்டு இருந்தன. அந்தப் பந்தலிலே பாணர்களின் மெல்லிசைக் கச்சேரி நள்ளிரவிலும் நடந்து கொண்டிருந்தது. மங்கலத் தாலி அணிந்த இளம் பெண்கள் அங்கே அந்த இசை நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டும் நல்ல வார்த்தைகளைப் பேசிக் கொண்டும் இருக்கிறார்கள்.
அந்த வீட்டிலே இன்று ஒரு குழந்தை பிறந்திருக்கின்றது. அதனால் இந்த மகிழ்ச்சி வெள்ளம். வீட்டின் ஒரு அறையில் இனிய மணம் வீசும் துணிகள் விரிக்கப்பட்ட மெத்தையில் தன் அம்மாவை சிறு வயது முதல் வளர்த்த வளர்ப்புத் தாயான செவிலியுடன் குழந்தை உறங்கிக் கொண்டிருக்கின்றது.
குழந்தையைப் பெற்றெடுத்த தாயோ வெண்கடுகு எண்ணெய் தேய்த்துத் தோய்ந்து விட்டு காய்ந்தும் காயாத ஈரப்பதமான கூந்தலுடன் உடலிலே பசு நெய்யைத் தடவிக் கொண்டு குழந்தை பெற்ற களைப்பினால் இன்னொரு அறையில் கண்முடிக் கிடக்கின்றாள்.
குழந்தை தன் அருகே இல்லை என்று அந்தத் தாய் கவலைப்படவில்லை. தன்னை அன்போடு வளர்த்தவள் தன் குழந்தையையும் எப்படிப் பார்த்துக் கொள்வாள் என்று அவளுக்குத் தெரியும். அதனால் அவள் கலங்கவில்லை.
இப்போது அவள் உறங்கிவிட்டாள். ஆனால் உறங்கும் வரை அவள் மனம் பட்ட பாடு அவளுக்குத் தான் தெரியும். இந்த இயலாமை நேரத்தில் என் அருகே ஆதரவாக இருக்க வேண்டிய என் கணவன் எங்கே போனான். ஒருவேளை வெளியே பந்தலில் கச்சேரி கேட்டுக் கொண்டு இருக்கிறான் போலும். என்னை விட அதுவா இப்போது முக்கியம்
இந்த இரவிலே நானும் அவனும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்கட்டும். ஆறுதலான வார்த்தைகளைப் பேசிக் கொள்ளட்டும். அவன் அரவணைப்புத் தானே பிரசவத்தால் ஒடிந்து போன என் தேகத்துக்கு இதம் தரும் மருந்து என்று தன் அனுபவ முதுமையாலே உணர்ந்து தானே குழந்தையைத் தன்னோடு கொண்டு போனாள் கிழவி!
இதைக்கூடப் புரிந்து கொள்ளும் அறிவற்றவனாக இருக்கின்றானே என் கணவன். சரி வரும்போது வரட்டும் என்ற கவலையோடு உறங்கிப் போனாள் அந்தத் தாய். ஆனால் அவள் எண்ணியது போல அந்தக் கணவன் பந்தலில் அமர்ந்து பாட்டுக் கேட்கவில்லை. அந்த வீட்டு எல்லையிலும் அவன் இல்லை.
அவன் வாயிற்கதவு மணி ஒலிக்கு அஞ்சி அந்தப் பக்கம் போகாமல் எப்படியோ மதில் கடந்து அனைவரது கண்ணிலும் மண்ணைத் தூவி விட்டுக் கள்வனைப் போல இருட்டிலே நடந்து தன் அன்புக்குரியவள் இன்னொருத்தி வீட்டுக் கதவைத் தட்டுகிறான். கதவு திறந்து கொள்கிறது.
என்னப்பா இந்த நேரத்திலே வருகின்றாய்
கதவைச் சாத்தடி சொல்கிறேன். யாராவது பார்த்துவிடப் போகின்றார்கள்.
சரி சொல்லு
இன்று எனக்கு ஒரு மகன் பிறந்திருக்கின்றான்
ஓ! அதைச் சொல்லத்தான் நடுச் சாமத்திலே கள்வனைப் போல ஒளித்து வந்து என் வீட்டுக் கதவைத் தட்டினாயா
இல்லை இல்லை அதையும் சொல்லத்தான் வந்தேன்.
அவன் சிரிக்கின்றான். அவளும் சிரிக்கின்றாள்.
நெடுநா ஒள் மணி கடி மனை இரட்ட
குரை இலைப் போகிய விரவு மணல் பந்தர்ப்
பெரும் பாண் காவல் பூண்டென ஒரு சார்த்
திருந்திழை மகளிர் விரிச்சி நிற்ப
வெறி உற விரிந்த அறுவை மெல் அணைப்
புனிறு நாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச
ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈரணிப்
பசு நெய் கூர்ந்த மென்மை யாக்கைச்
சீர் கெழு மடந்தை ஈர் இமை பொருந்த
நள்ளென் கங்குல் கள்வன் போல
அகல் துறை ஊரனும் வந்தனன்
சிறந்தோன் பெயரன் பிறந்தமாறே.
சங்க உலகத்து ஒருசில ஆடவரின் இழிந்த வாழ்வினையும் அவர்களோடு அன்பால் ஒன்றுபட்டு வாழத் துடித்த நல்ல குடும்பத்துப் பெண்களையும் இவர்களுக்கிடையே தொல்லையாக நின்ற பரத்தையர் என்ற விலைமாதர் குழுக்களையும் சித்தரிக்கும் இந்தப் பாடல் நற்றிணை என்ற சங்க நூலிலே 40 வது பாடலாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றது. இதை நெடுங் கோட்டனார் என்ற புலவர் பாடியிருக்கின்றார்.
வேலைக்காரியான செவிலித் தாயே குழந்தையுடன் பட்டு மெத்தையில் உறங்க அனுமதிக்கப்படுகிறாள் என்னும் போது அந்தக் குடும்பத்தின் செல்வ வளத்தை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். மனைவிக்குக் குழந்தை பிறந்த தினத்திலேயே பிற பெண்கள் வீடு தேடி செல்லும் ஆடவர்களை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். இவர்களால் தாங்க முடியாத வேதனைக்கு ஆளாகும் அக்காலக் குடும்பப் பெண்களை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.
இத்தகைய சம்பவங்கள் இன்றும்தான் எங்கள் சமுதாயத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்ந்த வண்ணமாகத்தான் இருக்கின்றன. ஆனால் அவை கூரை வீட்டு ஏழைகள் குடும்பங்களில் பெரும்பாலும் நடப்பதில்லை. பணம் படைத்தவர்களின் பங்களாக்களில் தான் அதிகமாக நடந்தேறுவதை ஊடகங்கள் அவ்வப்போது அறிவிக்கின்றன.
இதிலே என்ன ஆச்சரியம் என்றால் நற்றினை எடுத்துக்காட்டும் இந்தச் செய்தியும் ஏழை வீட்டுக் கதையாக இல்லாமல் பணம் படைத்தவர்களின் குடுப்பப் பிரச்சனையாக சித்தரிக்கப்பட்டு இருப்பது தான்.
இரா.சம்பந்தன் .
கனடா தமிழர் தகவல் 5.7.2021 இதழில் வெளியான எனது கட்டுரை!