நண்பர்கள் அனைவருக்கும்!
கோடு கிழித்தொரு கொள்கை வகுத்திங்கு
குலைந்து கிடந்தது போதும் – அன்பால்
இணைந்து மகிழுவோம் வாரும்!
கூடு கலைந்தவோர் குருவி எனத்தினம்
கூடி அழுததும் போதும் – இனி;
ஆடி மகிழுவோம் வாரும்!
நாடு பிடித்திட நடத்திய சண்டையால்
நாங்கள் இழந்தவை போதும் – அந்த
நாட்களை வெல்லுவோம் வாரும்!
சூடு பறந்திடும் கோபத்தை ஆற்றிநாம்
குனியப் பழகுவோம் போதும் – கொஞ்சம்
குரலைத் தளர்த்துவோம் வாரும்!
ஓடு மறைந்தொரு உயிரைக் காத்திடும்
ஓடையின் ஆமையைப் பாரும் – அந்த
உண்மையை உணருவோம் வாரும்!
வாடு பயிர்நிலம் வான மழையொடு
வாதிட்ட காலங்கள் போதும் – அதனால்
வந்த விளைவுகள் பாரும்!
பாடு பட்டுநாம் பலரும் புகழ்ந்திடப்
பண்புடன் வாழுவோம் போதும் – நெஞ்சின்
பாரத்தை நீக்குவோம் வாரும்!
நீடு புகழுக்கு நிகழும் ஆண்டிலே
நேரம் ஒதுக்குவோம் போதும் – எங்கள்
நிலத்தைப் போற்றுவோம் வாரும்!
இரா.சம்பந்தன்