தமிழ் வளர்ச்சியில் சமணர்கள்!
தமிழர் வாழ்வில் அழிக்கப்பட்ட பின்னர் தான் அதன் பெறுமதியை உணர்ந்து கொண்ட பொருட்கள் அதிகமானவை. முடிக்கப்பட்ட பின்னர் தான் தேவைப்படும் மனிதர்கள் அதிகமானவர்கள். அது போல வெறுக்கப்பட் பின்னர் தான் வேண்டப்பட்ட அமைப்பாயிற்று சமண சமயமும்.
சங்க காலத்திலே மன்னனம் மற்றவர்களும் சேர்ந்து கள் உண்டார்கள். ஒளவை கூட அதியமான் அஞ்சி கொடுத்த தண்ணியில் மிதந்த வரலாறு தமிழருடையது. ஈசல் பூச்சிகளைப் பொரித்து அவற்றை மோரிலே கலந்து இரசித்துக் குடித்தவன் சங்கத் தமிழன் (புறநானூறு 119). பன்றியைப் பெண்ணுடன் சேரவிடாது நிலத்திலே குழி வெட்டி அதனுள் வைத்து வளர்த்து நெல்லை இடித்து மாவாக்கி ஊட்டிக் கொழுக்கச் செய்த பின்பு அறுத்துச் சாப்பிட்டவனும் சங்கத் தமிழன் தான். (பெரும்பாணாற்றுப்படை 341-345)
இளப் பெண்களின் கையில் மதுக் கிண்ணத்தைக் கொடுத்து அழகு பார்த்தவனும் சங்கத் தமிழன் தான். ஓண்டொடி மகளிர் பொலங்கலத்து ஏந்திய தண்கமழ் தேறல் என்று மதுரைக் காஞ்சி இதை அழகாகச் சொல்லும்.
இந்தக் குற்றங்களை எல்லாம் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பூங்குன்றன் பாட்டாலே மறைத்து விட்டு வாழ நினைத்த தமிழ்ச் சமுதாயத்துக்கு சமணரின் வருகை பேரிடராக அமைந்தது. சமணர்கள் சங்கத் தமிழரின் மது மாது மாமிசம் மூன்றினையும் குறிவைத்துத் தாக்கினார்கள்.
அந்தத் தாக்குதலால் சங்கத் தமிழன் மட்டுமல்ல எங்களுடைய தமிழும் வளம் பெற்றது. சமணர்கள் தான் பள்ளிக் கூடம் என்ற சொல்லைத் தமிழுக்குக் கொண்டுவந்தார்கள். சங்கம் என்ற சொல்லைத் தந்தார்கள். தங்கள் மதத்தைப் பரப்பத் பட்டி தொட்டி எல்லாம் அலைந்த சமணர்கள் பிராமணர்களைப் போலப் புரியாத மொழியில் வழிபடவில்லை. தமிழைப் படித்து அதன் மூலமே சமயத்தைப் பரப்பினார்கள்.
பிராமணர்களைப் போல நூல்களை ஒளித்து வைத்திராது சாதி பார்க்காது அனைவருக்கும் வழங்கினர். தாங்களும் புதிய பல நூல்களை இயற்றித் தமிழுக்குத் தந்தனர். இன்று தமிழைத் தக்க வைத்திருக்கும் நூல்கள் எல்லாமே சமணர்கள் எழுதியவை தான். கச்சியப்பர் முருகனைப் பாடினார். கம்பன் இராமனைப் பாடினான். சேக்கிழார் அறுபத்துமூவரைப் பாடினார். சமணர்களோ தமிழைப் பாடினார்கள்.
சங்ககால் முடிவிலே எழுந்த உன்னதமான நூல் திருக்குறள். இதிலே கூறப்பட்ட அதிகமான அறங்கள் சமணருக்குச் சொந்தமானவை. திருக்குறளுக்கு அடுத்தாகத் தமிழர்களின் பெருமையை நிலைநாட்டும் நூல் நாலடியார். அதுவும் சமண முனிவர்கள் எழுதிய நூலாகும். அது போல முன்றுரை அரையனார் எழுதிய பழமொழி நானூறு என்ற நூலும் சமணர்களுடையதாகும்.
ஓவ்வொரு பாட்டிலும் ஆறு அறங்களை எடுத்துக் கூறும் கணிமேதையாரின் ஏலாதி காரியாசன் ஐந்து அறங்களைச் சொன்ன சிறுபஞ்ச மூலம் மனைப்பாடியாரின் அறநெறிச்சாரம் எல்லாமே சமண மதத்தின் சொத்துக்கள். திணைமாலை நூற்றைம்பது என்ற கீழ்க்கணக்கு நூலும் சமணருக்குச் சொந்தமானதே
தமிழரின் வாழ்வியல் கலாச்சாரத்தை உலகிற்கு முதலில் தெரிவித்த நூல் சிலப்பதிகாரம். எல்லா இலக்கியங்களும் மன்னர் குடும்பத்தைப் பற்றி மற்றவர்கள் பாட குடிமக்கள் கதையை ஆட்சி இழந்த மன்னனான இளங்கோவடிகள் பாடிய இலக்கியம் அது. தமிழ்மக்களின் வாழிடங்கள் தெருக்கள் உணவு கலை வழிபாடு கலை பண்பாடு என்று எதையுமே தவறவிடாமல் காவியத்துள் கொண்டுவந்த இளங்கோ சமணத் துறவியாவார்.
தான் சமணராக இருப்பினும் முருகனையும் சிவனையும் திருமாலையும் கொற்றவையையும் பிற தேவ இனத்துத் தெய்வங்களையும் காழ்புணர்ச்சி இல்லாமல் போற்றிப் பாடியவர் இளங்கோவடிகள்.
பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோவிலும்
வால்வளை மேனி வாலியோன் கோவிலும்
நீல மேனி நெடியோன் கோயிலும்
(சிலப்பதிகாரம் – இந்திரவிழா ஊரெடுத்த காதை)
என்று அழகாக இந்து மதத்தை ஒரு சமணர் பாட நாங்களோ சமணரின் தலையை அறுக்க வேண்டும் என்று தேவாரம் பாடினோம்.
வெறுப்பொடு சமண முண்டர் வதியில் சாக்கியர்கள் நின்பால்
பொறுப்பரி யனகள் பேசிப் போவதே நோயராகிக்
குறிப்பெனக் கடையு மாகில் கூடுமெல் தலையை ஆங்கே
அறுப்பதே கருமம் கண்டாய் அரங்கமா நகருளானே
( நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் – தொண்டரடிப் பொடியாழ்வார் )
சேக்கிழாருக்கும் கம்பனுக்கும் ஒரு காப்பியம் எப்படி அமைய வேண்டும் என்று வழிகாட்டிய பெருமை சீவக சிந்தாமணிக்கே உரியது. விருத்தப் பாடலாக தேவர் காட்டிக் கொடுத்த யாப்பு மரபிலே தான் கம்பன் தன் இதிகாசத்தை இயற்றினான். இந்த நூலும் சமணருடையது. நீலகேசி சூளாமணி போன்ற நூல்களும் அவர்களுடையவை தான்.
தொல்காப்பியம் தோன்றாது போயிருந்தால் தமிழ் இலக்கணம் என்றோ கரையுடைத்த வெள்ளமாகப் போயிருக்கும். அந்தத் தொல்காப்பியம் சமணருடையதாகத் தான் இருக்க வேண்டும். ஏனெனில் அதைப் பின்பற்றி எழுந்த நன்னூல் பவணந்தி என்னும் சமண முனிவர் எழுதியது ஆகையால் அந்தக் கொள்கை வலுப் பெறுகின்றது. தொல்காப்பியம் சமணருடையதென்று நிறுவப்படுமானால் சைவம் தமிழைச் சொந்தம் கொண்டாட முடியாமல் போகும்.
தொல்காப்பியம் காட்டும் அகப்பொருள் இலக்கணத்தை விபரித்துப் பேசும் நம்பி அகப்பொருள் என்ற நூல் நாற்கவிராச நம்பி என்ற சமணரால் எழுதப்பட்டதாகும். நேமிநாதத்தை எழுதிய குணவீர பண்டிதர் சமணர் ஆவார்.
இன்று செய்யுள் இலக்கணத்தைத் தாங்கிப் பிடிப்பது அமிர்த சாகரர் என்ற சமணர் எழுதிய யாப்பருங்கலக் காரிகையாகும் இது போல தொல்காப்பியத்துக்கு முதலில் உரை எழுதிய இளம்பூரணர் ஆவார். அவரின் சமயமும் சமணமேயாகும்.
எனவே தமிழுக்கு சைவம் வைணவம் போன்ற சமயங்களை விட சமண சமயம் செய்த தொண்டே மிகப் பெரியது. ஆனால் மிகவும் படித்தவர்களான சமணர்கள் விதி வசத்தால் சில தவறான கோட்பாடுகளில் உறுதியாக இருந்தார்கள். அதில் மிகவும் கவலைக்குரியது இல்லறம் வீடு பேற்றுக்குத் தடை என்பதாகும். அதனால் பெண்களைப் பாவப் பிறவிகள் என்று சமணர்கள் வருணித்தார்கள். சம்பந்தர் அந்தப் பலவீனத்தை வைத்துச் சமணரைக் கடுமையாகத் தாக்கினார்.
இல்லற வாழ்வில் இருந்து கொண்டே வீடு பேறு அடையலாம் என்று போகுமிடமெல்லாம் பேசினார் சம்பந்தர். சமணரின் இல்லற வெறுப்பால் துயருற்றிருந்த பலருக்கு சம்பந்தர் கொள்கை பிடித்திருந்தது.
தந்தைதாய் தன்னுடன் தோன்றினார் புத்திரர் தாரம் என்னும்
பந்தம் நீங்காதவர்க்கு உய்ந்து போக்கில் எனப்பற்றினாரே
வெந்த நீறாடியார் ஆதியார் சோதியார் வேதகீதர்
எந்தை ஆரூர் தொழுது உய்யலாம் மையல்கொண்டு அஞ்சல் நெஞ்சே
(சம்பந்தர் தேவாரம் – திருவாரூர்ப் பதிகம்)
தந்தை தாய் தன்னுடன் பிறந்தவர்கள் பிள்ளைகள் மனைவி என்ற பந்தங்களை விடாதவர்களுக்கு வீடுபேறு கிடையாது என்று சொல்கிறார்கள். அது தவறு குடும்பமாக இருந்து கொண்டே இறைவனைத் தொழுது வீடு பேறு அடையலாம் என்ற சம்பந்தரின் கொள்கை விளக்கப் பாடல் இதுவாகும். இதோடு சம்பந்தர் நின்றுவிடவில்லை. எண்ணாயிரம் சமணரைக் கொலை செய்ய உடந்தையாக இருந்தார்.
தானும் சமண மதத்தை விட்டு விலகி மகேந்திர வர்மனையும் சைவ சமயத்துக்கு கொண்டு வந்த திருநாவுக்கரசர் சமணக் கோயிலை இடித்து குணபரஈச்சரம் என்ற சிவன் கோவிலைக் கட்ட ஆதரவாக இருந்தார்.
அன்று பிராமண சமுதாயம் தானும் புரால் உண்பதை விடுத்து வேள்விகளிலும் உயிர்ப்பலியை விலக்கிக் கொண்டது சமணர்களின் நெருக்குதலினால் நிகழ்ந்த நன்மையாகும். இப்படி எத்தனையோ நல்லவற்றுக்கு அடிப்படையாக இருந்த சமணர்களின் முடிவு மிகவும் பரிதாபத்துக்குரிய ஒன்றாகவே இன்றும் இருக்கின்றது.
—————————