சிலம்பு காட்டும் பிரச்சனைகள்!
சிலப்பதிகார காவியத்திலே கண்ணகி என்றதும் மதுரையை எரித்த ஒரு வீர மறத்தியும் மாதவி என்றதும் இந்திர விழாவும் ஒரு காதல் மங்கையும் தான் எம் மனக்கண் முன் தோன்றி மறைகின்றார்கள். அரச சபையிலே வழக்குரைத்த வரலாறு கண்ணகியை வீரப் பெண்ணாகவும் காவிக் கரையிலே யாழ் மீட்டிக் கிடந்த காட்சி மாதவியைக் காதல் கிழத்தியாகவும் நாம் கொண்டாட வழிவகுத்து விடுகின்றது.
உண்மை அதுவல்ல. அழகிலோ காதல் உணர்ச்சிகளிலோ கண்ணகி எந்த விதத்திலும் மாதவிக்குக் குறைந்தவள் அல்ல. அவள் மணமுடித்துக் குடும்ப வாழ்க்கையைத் தொடங்கியபோது வயது அதிகம் இல்லை. பன்னிரண்டு வயது தான். கோவலனுக்கு அவளை விட ஆறு வயது அதிகம்.
திருமணம் முடிந்தபின் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வீடு ஏழு மாடிகளைக் கொண்ட கோவலனின் பெற்றார் மாளிகையில் நான்காவது தளத்தில் இருந்தது. அது கண்ணகிக்குப் புகுந்த வீடு. அங்கே திறந்து வைக்கப்பட்ட ஜன்னல் வெளிகளால் இனிய வாசனை உடைய தென்றல் காற்று உள்ளே நுழைய கோவலன் வா மேலே நிலா முற்றத்துக்குப் போவோம் அது இன்னும் அழகாக இருக்கும் என்று கண்ணகியை அழைத்துக் கொண்டு மொட்டை மாடிக்குப் போனான்.
விரைமலர் வாளியோடு வேனில் வீற்றிருக்கும்
நிரைநிலை மாடத்து அரமியம் ஏறி
(சிலப்பதிகாரம் – மனையறம்படுத்த காதை)
அங்கே வைத்துக் கண்ணகியைக் கட்டித் தழுவினான். கோவலன் எதிர் பார்த்தது போல அவள் அவனை அரவணைக்கவில்லை. கண்ணகிக்கு நெற்றி வியர்த்தது. அவளின் பயத்தைப் பார்த்த கோவலன் அவளை விடுத்துத் தள்ளி இருந்து கொண்டு நீயே மிகவும் அழகானவள். அப்படியிருக்கும் போது ஏன் இத்தனை நiகையையும் உனக்கு அள்ளிப் போட்டிருக்கின்றர்கள். தாலிக் கொடியோடு மட்டும் விட்டிருக்கக் கூடாதா தலையிலே ஒன்றிரண்டு பூக்கள் வைத்தால் போதாதா பெரிய மாலை ஒன்றையே கட்டித் தொங்க விட்டிருக்கிறார்கள் . உன்னுடைய ஆட்களுக்குப் பைத்தியமா என்று கேட்டான்.
மறு இல் மங்கல அணியே அன்றியும்
பிறிது அணி அணியப் பெற்றதை எவன்கொல்?
பல் இருங் கூந்தல் சில் மலர் அன்றியும்
எல் அவிழ் மாலையொடு என் உற்றனர்கொல்?
(சிலப்பதிகாரம் – மனையறம்படுத்த காதை)
பிரச்சனை இங்குதான் தொடக்கி வைக்கப்படுகின்றது. இருவருமே பணக்கார வீட்டுப் பிள்ளைகள். பெண் வீட்டார் தங்கள் மகளுக்கு செய்த மிகைப்படுத்தப்பட்ட அலங்காரம் கோவலனுக்கு பெரிதாகப் பிடிக்கவில்லை. அதை அவன் சொல்லிக் காட்டியது கண்ணகிக்கும் பிடிக்கவில்லை.
கண்ணகியிடம் குழலும் யாழும் அமுதும் குழைத்து நீ பேசும் மழலை மொழிக்கு கிளிகள் கூடத் தோற்று வருந்துகின்றன என்று கோவலன் சொன்னதாகச் சிலப்பதிகாரம் பேசுகின்றதே ஒழிய அவள் பேசியதாக ஒருவரி கூட இளங்கோவடிகள் காட்டவில்லை.
தாமே, சிறு பசுங் கிளியே
குழலும் யாழும் அமிழ்தும் குழைத்த நின்
மழலைக் கிளவிக்கு வருந்தின ஆகியும்
(சிலப்பதிகாரம் – மனையறம்படுத்த காதை)
கோவலன் புகழ்ந்தாலும் சரி இகழ்ந்தாலும் சரி கண்ணகி தலைகவிழ்ந்து வெட்கத்தினால் மௌனமாக இருந்தாள். இந்த உம்மாண்டித் தனமும் கோவலனுக்கு ஒத்துவரவில்லை. கோவலன் இளம் வயதிலேயே வியாரத்தில் ஈடுபட்டவன். அவனுக்கு நன்றாகப் பேசத் தெரியும். ஆனால் கண்ணகி உலகம் தெரியாமல் வளர்ந்தவள். அவளால் கோவலனின் கலகலப்பான வாழ்வுக்கு ஈடு கொடுக்கத் தெரியவில்லை.
கோவலன் விடவில்லை. அவளைப் புகழ்ந்து உச்சி குளிர்விக்கப் பார்த்தான். நீ கிடைப்பாய் என்று நான் நினைத்திருக்கவில்லை. மலையிலே பிறவாத மணி போன்றவள் நீ கடலிலே பிறக்காத அமுதம் போன்றவள் நீ யாழிலே பிறக்காத இசை போன்றவள் நீ உன்னை நான் என்ன சொல்லிப் பாராட்டுவதோ தெரியவில்லை என்றான் கோவலன்.
அப்போதும் கண்ணகி வாய் திறக்கவில்லை. இவர்களுக்கு இடையே இருந்த இடைவெளியை கோவலனின் அம்மா கவனித்தாள். கூட்டுக் குடும்பமாக இருப்பதால் தான் கோவலனுடன் கதைக்கவே கண்ணகி வெட்கத்தினால் அஞ்சுகிறாள் என்று நினைத்தாள் அந்தத் தாய்.
வலிந்து பேசிக் கூடி வாழ்ந்த அவர்களைத் தனிக்குடித்தனம் அனுப்பினால் தான் சரி என்று முடிவெடுத்தாள் கோவலன் அம்மா. போங்கோ போய் தனிக் குடும்பமாக இருந்து அறநெறியாளர்களையும் விருந்தினர்களையும் உபசரித்து செல்வச் சிறப்போடு இருங்கள் என்று அனுப்பி வைத்தாள்.
வார் ஒலி கூந்தலைப் பேர் இயல் கிழத்தி
மறப்பு அரும் கேண்மையோடு அறப் பரிசாரமும்,
விருந்து புறந்தரூஉம் பெரும் தண் வாழ்க்கையும்,
வேறுபடு திருவின் வீறு பெறக் காண,
உரிமைச் சுற்றமோடு ஒரு தனிப் புணர்க்க
யாண்டு சில கழிந்தன, இல் பெருங்கிழமையின்
காண் தகு சிறப்பின் கண்ணகி தனக்கு என்.
(சிலப்பதிகாரம் – மனையறம்படுத்த காதை)
தனிக் குடித்தனம் வந்த பின்பு கண்ணகி சற்று மாறினாள். மன்மதனும் இரதியும் போலவும் கோபம் கொண்டபாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து கிடப்பது போலவும் கோவலனைக் கட்டித் தழுவிக் கொண்டு குடும்ப சுகத்தை அனுபவித்துக் கிடந்தாள் கண்ணகி. நாளைக்கு இந்த உலகம் அழியப் போகின்றது என்று கேள்விப்பட்டவர்கள் இன்றைக்கே அனுபவிக்க வேண்டியதையெல்லாம் எப்படி விரைவாக அனுபவிப்பார்களோ அது போல கோவலனும் கண்ணகியும் குடும்ப சுகத்தை அனுபவித்தார்கள் என்று சொல்லும் சிலப்பதிகாரம்
தூமப் பணிகள் ஒன்றித் தோய்ந்தால் என ஒருவார்
காமர் மனைவி எனக் கைகலந்து நாமம்
தொலையாத இன்பம் எலாம் துன்னினார் – மண்மேல்
நிலையாமை கண்டவர்போல் நின்று.
என்று கண்ணகியின் இல்லற வாழ்வை வருணித்தார் இளங்கோவடிகள்.
என்ன இருந்தாலும் திருமணமான புதிதில் கண்ணகி நடந்து கொண்ட விதம் கோவலன் மனத்திலே ஒரு வெறுப்பாக இருந்திருக்கவேண்டும். அவனது மன வருத்தத்துக்கு சரியான மருந்தாக கலையுலக மாதவி தெரிந்தாள். அவளின் வெட்கத்தை உதறிய துடிப்பான வாழக்கை முறை கோவலனுக்குப் பிடித்துப்போய் விட்டது.
எனவே சிலம்பிலே கோவலன் பிரிவுக்கு மாதவி தான் முழுமுதல் காரணமல்ல. மாதவியும் ஒரு காரணம் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் கோவலன் தொடர்பு மாதவியைப் பொறுத்தவரை பணக்பார வீட்டுப் பிரச்சனையான காரணத்தால் முழுப்பழியையும் அவளே ஏற்க நேரிட்டது. அதனால் தான் பண உலகத்துக்கு முன்னால் எதிர்த்து நின்று மேலும் பிரச்சனையை வளர்க்காமல் ஒதுங்கிக் கொண்டாள்.
சிலப்பதிகாரம் என்ற தேன் கூட்டை இதுவரை காலமும் பிழிந்து தேன் எடுத்துக் கொண்டவர்கள் தேவையில்லை என்று விட்டுவிட்ட மீதியே இந்தக் கட்டுரையாகும்.
இரா.சம்பந்தன்.
கனடா தமிழர் தகவல் சஞ்சிகையில் இன்று (5.9.2021) வெளியான எனது கட்டுரை இது.