சங்க இலக்கியமும் எங்கள் இலக்கியமும்!
சங்க இலக்கியத்தில் புறநானூறு என்ற நூலின் நினைவு வரும்போதெல்லாம் கெடுக சிந்தை கடிதிவள் துணிவே என்ற செய்யுளின் நினைவும் கூடவே வந்துவிடும் புறநானூற்றைக் கற்றவர்களுக்கு. சங்க இலக்கியம் பற்றித் தெரியாதவர்கள் கூட இந்தச் செய்யுளின் பொருளைக் கதையாகத் தெரிந்து வைத்திருக்கின்றார்கள் கிராமப் புறங்களில் இன்றும். அந்தக் கதை இது தான்.
அந்த மக்கள் வாழ்ந்த காலத்தில் ஓயாமல் போர் நடந்து கொண்டிருக்கின்றது. மக்கள் போரிலே கலந்து கொண்டு தினமும் மடிந்து கொண்டிருக்கின்றார்கள். ஒரு பெண்ணின் அண்ணன் தன் கையில் இருந்த வேலால் யானை ஒன்றை வீழ்த்திவிட்டு தானும் பகைவரின் அம்புக்கு இரையாகி மாண்டு விடுகின்றான். அது நடந்து அந்தத் துன்பம் ஆறுவதற்குள் நேற்று நடந்த போரிலே அவளின் கணவன் பகைவர்கள் ஊருக்குள் புகுந்து கைப்பற்ற நினைத்த பசுக் கூட்டங்களை அவர்கள் கைப்பற்றி விடாமல் தடுக்கும் தன்மானப் போரிலே பங்குபற்றி தன்னுயிரை இழந்து விட்டான்.
போர் ஓய்ந்தபாடில்லை. அது தொடருகின்றது என்பதற்கு அறிகுறியாக ஊரின் நாற்புறமும் போர்முரசு இன்றும் ஒலிக்கின்றது. பார்த்தாள் அவள். தன் குடும்பத்திலே போருக்குச் செல்ல இனிப் பெரியவர்கள் யாரும் இல்லை. எழுந்தாள் அவள்.
முற்றத்திலே புழுதி படிந்த தலை மயிரோடு விளையாடிக் கொண்டிருந்த தன் ஒரேயொரு மகனை அழைத்தாள். தலைக்கு எண்ணெய் பூசி இழுத்து குடுமி முடிந்தாள் அவனுக்கு. மடித்து வைத்திருந்த வெள்ளை வேட்டியை இவன் இடுப்பிலே இறுகக் கட்டினாள். வீட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வேலாயுதம் ஒன்றை எடுத்து வந்து அவன் கையிலே கொடுத்து அதோ அந்த வழியால் போ. போர்க்களம் வந்துவிடும். உன் அப்பனும் மாமனும் எந்த நாட்டுக்காக போராடினார்களோ அந்த வழியில் போராடு. மீதியைப் பின்பு பார்த்துக் கொள்வோம் என்று அனுப்பி வைத்தாள் அந்தத் தாய்.
இது புறநானூறு சொல்லும் கதை.இந்தக் கதையைச் செய்யுளாகப் பாடிய ஒக்கூர் மாசாத்துவான் என்ற புலவன் தானும் தன் மனக் கொதிப்பை இரண்டு வரிகளாகச் சேர்த்துக் கொண்டான். இவள் என்ன பெண் ஒரு பெண்ணுக்கு இப்படியும் கடுமையான மனத் துணிவு இருக்குமா. இவள் போன்றோரைத் தான் வீர மறத்திகள் என்று சொல்கிறார்களா இப்படியான எண்ணம் எந்தப் பெண்ணுக்கும் வரக்கூடாது என்று பாடலின் தொடக்கத்திலேயே தன் கருத்தை வெளிப்படுத்தி விட்டுப் பின்பு அந்த நிகழ்வைப் பாடினான் அவன்.
கெடுக சிந்தை கடிது இவள் துணிவே
மூதின் மகளிர் ஆதல் தகுமே
மேல் நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை
யானை எறிந்து களத்து ஒழிந்தன்னே
நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன்
பெரு நிரை விலக்கி ஆண்டுப்பட்டனனே
இன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
வேல் கைக் கொடுத்து வெளிது விரித்து உடீஇப்
பாறு மயிர்க் குடுமி எண்ணெய் நீவி
ஒரு மகன் அல்லது இல்லோள்
செருமுக நோக்கிச் செல்க என விடுமே.
(புறநானூறு – பாடல் 279)
புறநானூற்றுச் செய்தியை ஒருபுறம் வைத்துவிட்டு நாம் எங்கள் ஈழநாட்டுக்கு வருகின்றோம்.
அன்று அந்தத் தேசத்திலும் அன்றாடம் போர் நிகழ்ந்து கொண்டிருந்தது. அங்கும் ஒரு பெண். தன் கணவனைக் களத்துக்கு அனுப்பிவிட்டு வீட்டு முற்றத்திலே தனியாக அமர்ந்திருக்கின்றாள். மாலை நேரம். தோழி வந்தாள்.என்ன களத்திலே இருந்து ஏதாவது நல்ல செய்தி வந்ததா. மனுசன் எப்போ வாறாராம். கல்யாணம் கட்டிச் சில மாதங்கள் கூட ஆகவில்லை. அதற்குள் தாய் நாட்டுக்காக படையில் இணைந்து போரார வேண்டிய விதியாகப் போய்விட்டது. உன்னை நினைத்தால் பரிதாபமாக இருக்குதடி என்றாள் வந்தவள்.
அவள் தோழியை நிமிர்ந்து பார்த்தாள். என் காதலன் வீட்டுக்கு வரவில்லை உண்மைதான். ஆனால் போர் நடக்கின்ற போது அவனுக்கு இங்கே என்னுடன் என்ன வேலை வேண்டியிருக்கின்றது. வீட்டுக்கு இப்போது அவன் வரவேண்டாம். பகைவர்களோடு மோதிக்கொண்டு களத்திலேயே அவன் இருக்கட்டும். எங்களுக்கு போரிலே வெற்றி வரட்டும். அதன் பின்பு முத்தங்களையும் சத்தங்களையும் நானும் அவனும் வைத்துக் கொள்வோம் இது என் முடிபு என்றாள் அந்தப் பெண்.
போரிலே அவனுக்கு ஒன்று நடந்து விட்டால் பின்பு என்ன செய்வாய் என்றாள் தோழி கவலையோடு.
சோகமாகச் சிரித்தாள் அந்தப் பெண். நான் ஈழநாட்டுத் தமிழிச்சி. இந்த மண்ணிலே பிறந்த மாதர்களுக்கு வாழ்வின் எந்த விளைவையும் ஏற்றுக் கொள்கின்ற வீர மனப்பான்மை உண்டு. போரிலே என் கணவன் மாண்டு போனாலும் போகட்டும். அதுபற்றி எனக்குக் கவலையில்லை. அப்போதும் நான் அழமாட்டேன். என் கணவன் நாட்டுக்காக உயிர் விட்டானே என்று இன்னும் அதிக அன்போடும் காதலோடும் அவனை நினைத்து மகிழ்ச்சியோடு வாழ்வேன். நீ எங்கள் தமிழ் அன்னையின் புகழை மட்டும் என்னோடு பேசு. எங்கள் நாடு விடுதலை பெற்று வாழட்டும். இந்தக் காமக் கதைகளை எல்லாம் எனக்குச் சொல்லிக்கொண்டு இருக்காதே என்றாள் அவள்.
காதலர் வரவில்லைத் தோழி அவர்
களத்திலே இருக்கட்டும் இங்கென்ன வேலை
மோதட்டும் பகைவர்கள் முன்னால் தோழி
முத்தமும் சத்தமும் வெற்றிக்குப் பின்னால்
மாதர்கள் வீரமே பெரிதாம் அவர்
மாண்டாலும் போரிலே மாளட்டும் என்பேன்
ஆதலால் இசைபாடு தோழி தமிழ்
அன்னையின் புகழ்பாடு வாழட்டும் நாடு!
இந்தக் கவிதை தோழி என்ற தலையங்கத்தில் கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய கவிதைகளில் ஒன்று. எங்கள் மக்களுக்கு இந்தக் கவிதையின் கனம் தெரியவில்லை. புறநானூறு இறந்து பட்ட கணவனையும் அவனால் இல்லற சுகத்தை முழுமையாக அனுபவித்து ஒரு புதல்வனையும் பெற்ற பெண் பற்றி வியந்து பேசுகின்றது. ஆனால் புதல்வனைப் பெற்றெடுக்க வேண்டும் என்ற இல்லற ஆசையையும் அதற்கு உதவக்கூடிய கணவனையும் நாட்டுக்காக இழக்கத் தயாராக இருக்கும் ஒரு இளம் ஈழ மறத்தியைப் பற்றி எங்கள் இலக்கியம் பேசுகின்றது.
போரியல் அனுபவங்களின் காலம் தந்த இனிப்பையும் கசப்பையும் ஒதுக்கி வைத்து விட்டு ஈழ நாட்டினுடைய நல்லதொரு இலக்கியச் செய்யுள் என்ற நடுநிலை எண்ணத்தோடு நாம் பார்க்கப் பழகிக் கொண்டால் எத்தனையோ பெறுமதிமிக்க வாழ்வியல் தடயங்களை ஈழ இலக்கியங்களிலே நாம் காண முடியும்.
கனடா தமிழர் தகவல் சஞ்சிகையில் இன்று (5.12.2021) வெளிவந்த எனது கட்டுரை இது.