குருவும் சீடனும்! உருவகக் கதை!
ஒரு குருவும் சில சீடர்களும் ஒரு ஆற்றைக் கடக்க நேரிட்டது. அப்போது ஒரு இளம் பெண்ணும் அவர்களோடு சேர்ந்து கொண்டாள். சுவாமி ஆற்று வெள்ளத்தைப் பார்க்கப் பயமாக இருக்கின்றது. தயவு செய்து என்னையும் எப்படியாவது மறு கரைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று வேண்டினாள்.
பெண்ணே நாங்கள் சன்னியாசிகள். பெண்களை நாம் தீண்டுவதில்லை. உன்னை மறுகரைக்கு அழைத்துச் செல்வதாக இருந்தால் தொட்டுத் தூக்க வேண்டும். நாம் அதைச் செய்ய மாட்டோம். அது பாவம் என்றார் குரு.
ஒரு சீடனோ குருவே ஆபத்துக்குப் பாவமில்லை. இவளை நான் சுமந்து கரை சேர்க்கின்றேன் வாருங்கள் என்று சொல்லி அந்தப் பெண்ணைத் தூக்கிக் கொண்டு ஆற்றில் இறங்கிவிட்டான். பெண்ணின் அங்கங்கள் எல்லாம் தன் உடலில் பட தூக்கிச் செல்லும் சீடனைப் பார்த்தார் குரு.
குருவை மதிக்காத குருத்துரோகி. பாவி. இவனெல்லாம் ஒரு சீடனா. என்று மற்றச் சீடர்களுக்குச் சொல்லித் திட்டிக் கொண்டே போனார் அவர். மறுகரையில் பெண்ணை இறக்கிவிட்டு சீடன் குருவின் பின்னாலே வந்தான்.
குருவுக்கு கோபம் ஆறவில்லை.மாலையில் நடந்த பிரசங்கத்தில் குரு பேசும் போது இதோ இங்கே நிற்கிறானே என் சீடன் இவன் இன்று ஒரு காரியம் செய்தான். தனது சன்னியாச ஆசாரத்தைக் காற்றில் பறக்க விட்டு ஒரு பெண்ணைத் தூக்கிச் சுமந்தான். இவனெல்லாம் எப்படி என் உபதேசத்தைக் கேட்டு ஆத்ம ஈடேற்றம் அடைவான் என்று சொல்லுங்கள் பார்க்கலாம் என்று பேசினார்.
சீடன் எழுந்தான். குருவே அவளைத்தானே நான் ஆற்றங்கரையில் இறக்கிவிட்டு வந்துவிட்டேன். நீங்கள் ஏன் அவளை இறக்கி விடாமல் இப்பவும் சுமக்கிறீர்கள் என்று கேட்டான்.