குறத்தியும் முடவனும்!
அந்தப் பெண்கள் இருவரும் தங்களுக்குள் உரையாடிக் கொண்டே தினைப்புலங்களைக் கடந்து மலையடிவாரத்துக்கு வந்து விட்டார்கள். சிறிய தண்டுகளையும் வெண்மையான மலர்களையும் கொண்ட கூதளச் செடிகள் அந்த மலை முழுவதும் பரந்து வளர்ந்து காணப்படுகின்றன.
அவற்றிலே சுரக்கும் தேனை உறுஞ்சி எடுக்கும் தேனீக்கள் யாரும் ஏற முடியாத மலைப் பாறைகளிலே தாம் கட்டிக் கொண்ட கூடுகளில் சேகரித்து வைப்பதும் திரும்பவும் பறப்பதுமாக இருக்கின்றன.
அவனைத் தான் காதலிக்கிறேன். அவனைத் தான் கட்டிக் கொள்வேன் என்று அடம் பிடிக்கிறாயே. இது நடக்கக் கூடிய காரியமா? சேரியில் வாழும் நாமும் மாளிகையில் வாழும் அவனும் ஒரு காலமும் ஒத்துப் போக முடியாது. எத்தனை முறை நாம் தினை வயலில் நேருக்கு நேர் அவனைக் கண்டிருக்கின்றோம்.
மரியாதைக்காவது ஒரு வார்த்தை அவன் பேசியிருப்பானா என்றாள் ஒருத்தி.
சரி. இப்ப என்ன பண்ணலாம் என்கிறாய் என்றாள் மற்றவள்.
இந்த ஒருதலைக் காதல் உனக்கு வேண்டாம்.. மறந்திடு. அவன் வரும் போது ஓடிச் சென்று பார்க்கிறது சிரிக்கிறது போன்ற வேலையெல்லாம் இனிமேல் வைச்சுக்காதே. சரியோ
எனக்கு அவனிலே விருப்பமாக இருக்கிறதே நான் என்ன செய்ய
அவன் தான் கட்ட மாட்டானே அப்புறம் என்ன செய்வாய்
அவன் என்னைக் கட்டாமலே போகட்டும். ஆனால் அவனைப் பார்க்காமல் நான் இருக்க மாட்டேன். பார்ப்பேன் எப்போதும் பார்ப்பேன்.
நீ என்ன லூசா
அப்படித் தான் வைத்துக் கொள்ளேன். இங்கே உனக்கு ஒரு விசயம் காட்டுறேன். அதோ பார். அங்கே என்ன நடக்கின்றது என்று பார். மற்றவள் பார்த்தாள்.
மலை உச்சியிலே ஒரு மிகப்பெரிய தேன் கூடு. கீழே ஒரு எழுந்து நிறற்கவே முடியாமல் கைகளையே கால்களாகக் கொண்டு நடக்கும் முடவன் ஒருவன் தரையிலே அமர்ந்து ஆசையோடு அமர்ந்து அந்தத் தேன் கூட்டைப் பார்க்கின்றான்.
அவனுக்கு அந்தக் கூட்டில் உள்ள தேனில் மிகுந்த விருப்பமாக உள்ளது. ஆனால் உயரத்தில் இருக்கும் அந்தத தேன் கூட்டில் உள்ள தேனை ஏறிச் சுவை பார்க்க அவன் படைப்பு தான் ஏற்றதாக இல்லையே. ஆனாலும் அவன் தன் நிறைவேறாத ஆசையைக் கைவிடவில்லை.
தனது இரண்டு கைகளையும் சேர்த்துக் கவிழக்கப்பட்ட குடை போல உட்புறமாக கோலிப் பிடித்துக் கொண்டான். தேன் கூட்டில் இருந்து தேனானது தன் கைக்குள் விழுவது போலக் கற்பனை பண்ணிக் கொண்டான். அந்தக் கையை ஆவலோடு நக்கத் தொடங்கினான். அவன் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது.
சிரித்தான். திரும்பவும் ஏந்தினான் நக்கிக் குடித்தான். மகிழ்ந்தான். நீண்ட நேரமாக அவன் அதையே செய்து கொண்டிருந்தான்.
அவள் கேட்டாள். இந்தக் காட்சியைப் பார்த்தாயா?
அவனுக்கு தேனுக்கும் ஆசையாக இருக்கின்றது. அந்த உயரத்துக்கு ஏறி அதை அடைய முடியாமலும் இயற்கை தடுத்து விட்டது. அவன் வெறும்; கையை மட்டும் நக்கி இன்பம் அடைகின்றானே நீ அவனைப் பார்த்துப் பரிதாபப் படுவாயா அல்லது லூசு என்று சொல்லி விட்டுக் கடந்து போவாயா
என் நிலையும் அப்படித்தான். அவன் எனக்குக் கிடைக்க மாட்டான் என்று எனக்கும் தெரியும். ஆனால் அவனைப் பார்ப்பதிலே ஒரு மகிழ்ச்சி. அவனை நினைத்துப் பார்ப்பதிலே ஒரு இன்பம். முடிந்த வரை பார்ப்போம் என்று பெரு மூச்சு விட்டாள் அந்தப் பெண்.
குறுந்தாட் கூதளி யாடிய நெடுவரைப்
பெருந்தேன் கண்ட விருக்கை முடவன்
உட்கைச் சிறுகுடைஐ கோலிக் கீழிருந்து
சுட்டுபு நக்கி யாங்குக் காதலர்
நல்கார் நயவா ராயினும்
பல்காற் காண்டலு முள்ளத்துக் கினிதே.
இந்தப் பாடல் சங்க இலக்கியமான குறுந்தொகையில் அறுபதாவது பாடலாக தொகுக்கப்பட்டுள்ளது. பரணர் என்ற புலவர் பாடியிருக்கின்றார்.
இன்றைய சமுதாயத்தில் கூட உதாரணமாக எத்தனையோ ஆண்களும் பெண்களும் திரைப்படங்களில் நடிக்கும் நடிக நடிகைகளை விளையாட்டு; வீரர்களை மேடைப் பாடகர்களை அவர்களை நெருங்க முடியாது என்று தெரிந்து கொண்டும் கூட மனதளவில் அவர்களைக் காதலித்து பார்ப்பது பேசுவது போன்ற செய்கைகளால் தங்களைத் தாமே மகிழ்வித்துக் கொள்வதைக் காண்கின்றோம்.
அது போலத் தான் சங்க காலத்திலும் ஏறு தழுவுதல் வரை பாய்தல் போன்ற விளையாட்டுக்களில் புகழ் பெற்றோரையும் தினைப்புலக் காவலில் ஈடுபடும் கட்டுடல் மிக்கவர்களையும் போரில் வேல் கொண்டு எறிந்து வீரம் காட்டுபவர்களையும் அழகிய உயர் குடும்பத்துப் பெண்களையும் கண்டு ஒரு தலைக் காதல் கொண்டு கவலையோடு வாழ்ந்து மடிந்திருப்பார்கள் போலும்.
இரா.சம்பந்தன்
கனடா தமிழர் தகவல் சஞ்சிகையில் இன்று (5.11.2021) வெளிவந்த எனது கட்டுரை இது.