கலித்தொகை காட்டும் காதல்!
சங்க இலக்கியம் என்றாலே ஐந்து நிலங்களும் அகம் புறம் என்ற இரண்டு திணைகளும் அதற்குள் கற்பு களவு என்று இரு ஒழுக்கங்களும் என்ற வேலிகளுக்குள் நின்று படைக்கப்பட்ட செய்யுட்கள் தான் என்று எம்மில் பலரும் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அந்த இலக்கியங்கள் காட்டும் வாழ்வியல் நாகரிகம் இன்று கூட எம்மால் எட்டிப் பிடிக்க முடியாதது. இயற்கையோடு தம்மை இணைத்துக் கொண்டு இன்பமாக வாழ்ந்த அந்த மக்கள் எங்களுக்காக வைத்துவிட்டுப் போன செய்திகள் ஏராளம்.
குறிஞ்சி நிலத்திலே வாழ்ந்த மலைவாழ் குறப்பெண் ஒருத்தி எட்டுத் தொகை நூல்களில் ஒன்றான கலித்தொகையிலே தன் காதல் பிரச்சனை பற்றித் தோழியோடு பகிர்ந்து கொள்கிறாள். முற்றிய தினைக் கதிர்களை விலங்குகளும் பறவைகளும் வந்து சேதப்படுத்தி விடாமல் பாதுகாப்பதற்கு பகலில் இளம் பெண்களும் இரவிலே இளைஞர்களும் தினைப் புலங்களிலே காவல் இருப்பது அவர்கள் வழக்கம். அப்படிக் காவலுக்கு போன அவளுக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பற்றித்தான் தோழிக்குச் சொல்கின்றாள் அவள். நான் தினைப் புலத்தில் இருக்கும் போதெல்லாம் கையிலே வில்லும் அம்பும் ஏந்திய இளைஞன் ஒருவன் தப்பி ஓடிய மானின் காலடியைத் தேடிக் கொண்டு வருவது போல பொய்யான நடிப்பு நடித்துக் கொண்டு தினமும் வருவான். வந்து என்னையே பார்த்துக் கொண்டு நிற்பான். ஆனால் எதுவுமே பேசாமல் போய் விடுவான். இரவிலே நான் படுக்கையில் கிடந்து கொண்டு இவன் ஏன் வருகின்றான் என்று தினமும் நினைத்துப் பார்ப்பேன். அவனின் பார்வையில் என்னிடம் அவனுக்கு விருப்பம் உள்ளது போல தோன்றியது. அது பற்றி அவனோடு கதைக்க நினைத்தேன். ஆனால் நான் பெண். முன் பின் தெரியாதவனோடு எப்படி முதலில் நானே கதைப்பது என்று நினைத்துப் பேசாமல் இருந்தேன். காலப் போக்கில் அவன் வருகையை எதிர்பார்த்து என் மனமும் ஏங்கத் தொடங்கியது. என் மனத்திலே இப்படி ஒரு ஆசையை வளர்த்து விட்டு பேசாமலே போய்விடுவானோ என்று தவித்தேன். ஒருநாள் அவன் வந்தான். அப்போது நான் எங்கள் தினைப் புலத்திலே ஒரு ஊஞ்சலில் மெதுவாக ஆடிக் கொண்டிருந்தேன். வந்தவனிடம் என்னைக் கொஞ்சம் விரைவாக ஆட்டி விடுகிறீர்களா என்று கேட்டேன். அவனும் அதற்குச் சம்மதித்து விருப்பத்தோடு என்னை விரைவாக ஆட்டிவிட்டான். நான் வெட்கத்தையும் மறந்து ஏதோ கை வழுக்கி விழுபவள் போல அவனின் மார்பிலே சாய்ந்து விட்டேன். நான் நினைத்தது போலவே அவனும் என் கை வழுக்கி விட்டதாக நினைத்து ஓ என்று தன் உதட்டினைக் கடித்து என்னைக் கீழே விழ விடாமல் பக்குவமாக அணைத்துக் கொண்டான். நான் பயத்தினால் மயங்கியவள் போல அவன் நெஞ்சிலேயே கிடந்தேன். பின்பு அது தப்பு என்று மனம் சொல்ல மயக்கம் தீர்ந்தவள் போல துள்ளி எழுந்தேன். நான் மயங்கியவள் போலக் கிடந்த நேரத்தில் அவன் என்னை என்ன வேண்டும் என்றாலும் செய்திருக்கலாம். அதை ஏற்றுக் கொள்வும் நான் தயாராக இருந்தேன். ஆனால் அவன் மிகவும் பண்பு மிக்கவனாக நடந்து கொண்டான். கவனமாகப் போய்வா என்று சொல்லி விட்டு நான் நடந்து மறையும் வரை பார்த்துக் கொண்டு நின்றான். அவன் விருப்புவது என் காதலை என் தேகத்தை அல்ல என்று உணர்ந்து நான் மெய்சிலிர்த்தேன் என்று தன் தோழிக்குச் சொன்னாள் அந்தப் பெண்.
கய மலர் உண்கண்ணாய் காணாய் ஒருவன்வய மான் அடித் தேர்வான் போலத்
தொடை மாண்டகண்ணியன் வில்லன் வரும் என்னை நோக்குபுமுன்னத்தின் காட்டுதல்
அல்லது தான் உற்றநோய் உரைக்கல்லான் பெயரும் மன் பல் நாளும்பாயல் பெறேஎன்
படர் கூர்ந்து அவன் வயின்சேயேன் மன் யானும் துயர் உழப்பேன் ஆயிடைக்கண்
நின்று கூறுதல் ஆற்றான் அவன் ஆயின்பெண் அன்று உரைத்தல் நமக்கு ஆயின்ன்னதூஉம்காணான்
கழிதலும் உண்டு என்று ஒரு நாள் என்தோள் நெகிழ்பு உற்ற துயரால் துணிதந்து ஓர்நாண்
இன்மை செய்தேன் நறு நுதால் ஏனல்இனக் கிளி யாம் கடிந்து ஓம்பும் புனத்து அயல்ஊசல்
ஊர்ந்து ஆட ஒரு ஞான்று வந்தானைஐய சிறிது என்னை ஊக்கி எனக் கூறத்தையால்
நன்று என்று அவன் ஊக்கக் கை நெகிழ்புபொய்யாக வீழ்ந்தேன் அவன் மார்பில் வாய்யாச்
செத்துஒய்யென ஆங்கே எடுத்தனன் கொண்டான் மேல்மெய் அறியாதேன் போல் கிடந்தேன்
மன் ஆயிடைமெய் அறிந்து ஏற்று எழுவேன் ஆயின் மற்று ஒய்யெனஒண் குழாய் செல்க
எனக் கூறி விடும் பண்பின்அங்கண் உடையன் அவன்.
கலித்தொகையிலே குறிஞ்சிக் கலியிலே கபிலர் பாட்டாக இது தொகுக்கப்பட்டிருக்கின்றது. ஒரு ஆடவன் தான் காதலிக்கும் பெண்ணை எப்படிப்பட்ட பண்பாட்டுடன் போற்றி நடத்த வேண்டும் என்பதற்கும் எப்படிப் பட்ட ஒருவனை ஒரு பெண் தன் வாழ்க்கைக்குத் துணையாகத் தெரிவு செய்து கொள்ள வேண்டும் என்பதற்கும் தங்கள் வாழ்வியலை உதாரணம் காட்டி இன்றைய சமுதாயத்துக்கு சங்க மக்கள் மிகப்பெரும் செய்தியொன்றை வைத்துவிட்டுப் போயிருக்கின்றார்கள்.
இரா.சம்பந்தன்
கனடா தமிழர் தகவல் சஞ்சிகையில் (5.1.2021) வெளியான எனது கட்டுரை!