|

கம்பன் காட்டிய இராவணன்!

கம்பர் சித்திரம் 11

கனடா தமிழர் தகவல் சஞ்சிகையில் இன்று (5.12.2022) வெளிவந்துள்ள எனது கட்டுரை இது!

இன்றைய உலகில் அறிவியல் ஏற்படுத்தியிருக்கும் தொலைத்தொடர்பு வசதிகளைக் கண்டு அரசுகள் எல்லாம் இரகசியங்களை தங்களுக்குள் பரிமாறிக் கொள்ளவே அஞ்சுகின்றன. சிறு கவனக் குறைவு ஏற்பட்டாலும் பூட்டிய அறைக்குள் எடுக்கப்படும் கொள்கை முடிபுகள் எல்லாம் கணப்போதில் எதிரிகள் கைகளுக்குப் போய்ச் சேர்ந்து விடுகின்றன.

இந்தப் பிரச்சனை இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் பரினாமம் என்று நாம் மகிழ்ந்து போகின்றோம். ஆனால் கம்பராமாயணத்திலே இராவணன் தனது அமைச்சரவை ஆலோசனைக் கூட்டத்தை நடத்துவதற்கு முன்பு எடுத்த பாதுகாப்பு நடபடிக்கைகள் இன்றைய வல்லரசுகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளையே மிஞ்சுவதாகக் காணப்படுகின்றன.

அநுமன் வந்து இலங்கையை எரியூட்டும் வரை தனக்கோ தன் நாட்டுக்கோ சேதம் ஏற்படுத்த எவரும் இல்லை என்றுதான் இராவணன் நம்பியிருந்தான். ஆனால் நாட்டுக்குள் புகுந்து தீ வைத்தது மட்டும் அன்றி அந்தக் குற்றத்தைச் செய்தவன் தப்பியும் போய்விட்டான் என்ற நிலை வந்த போது தான் நாட்டின் பாதுகாப்பு நெறிமுறையில் தவறு இருக்கின்றது என்று உணருகின்றான் இராவணன்.

உடனடியாக மந்திரிசபைக் கூட்டத்தை கூட்டி மேற்கொண்டு எடுக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் பற்றிப் பேசவேண்டிய நிலை ஏற்படுகின்றது அந்த மன்னனுக்கு. ஆலோசனைக் கூடத்துக்கு வந்து சிங்காசனத்திலே அமருகின்றான் இராவணன். அமர்ந்தவன் ஒருகணம் அந்தச் சபையிலே இருந்த அனைவரையும் உற்றுப் பார்க்கின்றான்.

முனிவர்கள் பிராமணர்கள் தம்பிமார்கள் பிள்ளைகள் சுற்றத்தவர்கள் இவர்களோடு பல்வேறு படைத் தளபதிகளும் அங்கே தலைகவிழ்ந்து அமர்ந்திருக்கின்றார்கள். தனக்குப் பக்கத்திலே தேவர் உலகப் பெண்கள் இருவர் கவரி வீசிக்கொண்டு நிற்பதையும் பார்க்கின்றான் இராவணன்.

வரம்பு அறு சுற்றமும் மந்திரத் தொழில்

நிரம்பிய முதியரும் சேனை நீள் கடல்

தரம்பெறு தலைவரும் தழுவத் தோன்றினான்

அரம்பையர் கவரியோடு ஆடும் தாரினான்.

ஒரு காவலாளியை அழைத்து முனிவர்கள் பிராமணர்கள் தேவர்கள் அறிவு முதிர்ச்சி இல்லாத இளையவர்கள் பெண்கள் இவர்களை இந்த மண்டபத்தில் இருந்து வெளியேற்றுங்கள் என்று ஆணை பிறப்பிக்கின்றான் இராவணன். இவர்களில் எல்லாம் இராவணனுக்கு நம்பிக்கை இல்லை.

இராவணனுக்குத்தான் திருக்குறள் தெரியாவிட்டாலும் கம்பனுக்கு அது தெரியுமே. தான் கற்ற திருக்குறளை இராவணன் எண்ணமாக கம்பன் காட்டுகின்றான்.

துறந்தார் படிவத்தவர் ஆகி இறந்தாராய்ந்து

என்செய்யினும் சோர்விலது ஒற்று

(திருக்குறள் ஒற்றாடல் 586)

உளவாளிகள் முற்றும் துறந்த முனிவர்கள் போல வேடமிட்டு வந்து தங்களை சந்தேகித்துப் பிடித்து என்ன துன்பம் செய்து விசாரித்தாலும் தாங்கள் யாரென்று காட்டிக்கொள்ள மாட்டார்கள் என்பார் திருவள்ளுவர்.

அதனால் தான் முனிவராக இருந்தாலும் வெளியேற்றுங்கள் என்றான் இராவணன்.

முனைவரும் தேவரும் மற்றும் உற்றுளோர்

எனைவரும் தவிர்க என ஏய ஆணையான்

புனைகுழல் மகளிரோடு இளைஞர்ப் போக்கினான்

நினைவு உறு காரியம் நிகழ்த்தும் நெஞ்சினான்.

அனைவரும் வெளியேற்றப்பட்ட பின்பு மீண்டும் அங்கிருப்பவர்களைப் பார்க்கின்றான் இராவணன். அறிஞர்கள் நீண்டகாலம் பழகியவர்கள் முதியவர்கள் பதவியில் இருந்து கொண்டு பொருள் சேர்க்காத மந்திரிகள் (தண்டல் இல் மந்திரத் தலைவர்) மட்டும் இருங்கள் மற்றவர்கள் எழுந்து செல்லுங்கள் என்று அடுத்து ஒரு ஆணை பிறப்பிக்கின்றான் இராவணன்

ஒரு பாதுகாவலனை அழைத்து வண்டு காற்று என்ற இரண்டும் கூட்டம் முடியும்வரை உள்ளே வரக்கூடாது கவனமாக இரு என்றான் இராவணன்.

நளன் தமயந்தி கதையிலே நளனின் காதலியாகிய தமயந்தியில் ஆசை கொண்ட தேவர்கள் நளனையே அவளிடம் தூதாக அனுப்பிவிட்டு வண்டாகவும் காற்றாகவும் உருமாறி நளனைப் பின்தொடர்ந்து அவன் தமயந்தியிடம் தங்களுக்காக பேசுகின்றானா என்று வேவு பார்த்தார்கள் என்று சொல்லப்படுகின்றது. அது போல தேவர்கள் உருமாறிக் கூட தன் மந்திரி சபைக்கூட்டத்தில் நுளைந்துவிடககூடாது என்பதில் கவனமாக இருந்தான் இராவணன்.

பண்டிதர் பழையவர் கிழவர் பண்பினர்

தண்டலில் மந்திரத் தலைவர் சார்க எனக்

கொண்டு உடன் இருந்தனன்; கொற்ற ஆணையான்

வண்டொடு காலையும் வரவு மாற்றினான்

இந்தப் பிரச்சனை இன்று உலக நாடுகள் பறவைகள் வண்டுகள் போல வடிவமைத்து கமராக்களைப் பொருத்தி அனுப்பி எதிரிகளை வேவு பார்க்கும் அதி நவீன ரோன்களின் நடமாட்டத்தை ஞாபகப் படுத்துகின்றது அல்லவா.

இவையெல்லாம் நடந்த பின்பும் இராவணனுக்குத் திருப்தி இல்லை. இங்கே அரசியல் தெரிந்த அறிவாளிகள் இருக்கிறார்கள். போர்களைத் தலைமை தாங்கி நடத்தும் சிறந்த தளபதிகள் இருக்கிறார்கள். உயிருக்கு உயிராகப் பழகும் நண்பர்கள் இருக்கின்றார்கள். உறவினர்கள் இருக்கின்றார்கள். ஆனாலும் அதிலொருவர் உளவாளியாக இருந்துவிட்டால் என்ன செய்வது?

இறுதியாக இராவணன் சொன்னான். எனது தம்பிகள் எனது பிள்ளைகள் நான் கை காட்டும் உறவுகள் தவிர மற்றவர்கள் என்ன பதவியில் இருந்தாலும் இந்த இடத்தை விட்டு வெளியேறிவிடுங்கள்.

ஆன்று அமை கேள்வியர் எனினும் ஆண் தொழிற்கு

ஏற்றவர் நண்பினர் எனினும் யாரையும்

வான் துணைச் சுற்றத்து மக்கள் தம்பியர்

போன்றவர் அல்லரைப் புறத்துப் போக்கினான்

இதன் பிறகே இராவணன் பிரச்சனைகளைப் பேசத் தொடங்குகின்றான். ஒரு குரங்கு வந்து தீயினால் எங்களைச் சுட்டுவிட்டது. எங்கள் அழகிய தேசத்தையும் சூறையாடிவிடடது. எங்கள் சுற்றத்தவர்களும் நண்பர்களும் கொல்லப்பட்டனர். மிகுந்த அவமானம் சூழ்ந்துவிட்டது. இவையெல்லாம் நடக்கும் போது என் உடல் இந்தச் சிங்காசனத்திலே தான் இருந்திருக்கின்றது என்று தன்னையே இகழ்ந்தபடி அவன் பேச்சு எழுகின்றது.

சுட்டது குரங்கு; எரி சூறை ஆடிடக்

கெட்டது கொடிநகர் கிளையும் நண்பரும்

பட்டனர்; பரிபவம் பரந்தது எங்கணும்

இட்டது இவ் அரியணை இருந்தது என் உடல்

இன்றைய உலக நாடுகள் உளவு பார்ப்பவர்களால் பிரச்சனை வராமல் என்னென்ன முன்னெச்சரிக்கை நடபடிக்கைகளை எடுப்பார்களோ அதையே இராவணனும் எடுத்துள்ளதை கம்பன் மூலமாக நாம் காண்கின்றோம். காலம் தான் ஓடுகின்றதே ஒழிய கருத்துக்கள் ஒன்றாகத்தான் இருக்கின்றன அன்றும் இன்றும்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.