கம்பனும் விசுவாமித்திர முனிவனும்!
இராமாயணத்திலே கம்பனால் படைக்கப்பட்ட பாத்திரங்களில் ஒன்று விசுவாமித்திர முனிவன். அயோத்தியில் தசரத மன்னனிடம் வந்து இராம இலக்குவர்களை வேள்வி காக்க அழைப்பதில் தொடங்கி மிதிலையிலே சீதா கல்யாணம் வரை இராமாயணத்தில் அவனைக் காண்கின்றோம்.
கம்பன் இந்த விசுவாமித்திரனை இராமாயண பாத்திரமாகக் கொண்டு வந்த போது அவனுக்கு ஒரு பண்பு கொடுக்கின்றான். அந்த விசுவாமித்திரன் நாவன்மை மிக்கவனாகக் காட்டப்படுகின்றான். நாவன்மை மிக்க ஒருவனை எந்த நிலையிலும் எந்த இடத்திலும் யாரும் பேச்சினால் தோற்கடிக்க விட்டுவிடக் கூடாது என்பதில் கம்பன் கவனமாக இருந்தான்.
விசுவாமித்திரன் தான் செய்யும் யாக வேள்விகளுக்கு அரக்கர்கள் வந்து கெடுதல் செய்வதால் பாதுகாப்புக்கு இராமனைத் தரும்படி கேட்க தசரதனைத் தேடி அயோத்தி அரண்மனைக்கு வருகின்றான். நீண்ட காலம் குழந்தைகள் இல்லாமல் துன்பப்பட்டு பின்பு பெற்ற பிள்ளையை தசரதன் தர மாட்டான் மறுப்பான் என்று அவனுக்குத் தெரியும்.
தசரதன் கேட்டான் முனிவரே என்னைத் தேடிவந்த காரணம் என்ன?
விசுவாமித்திரன் எடுத்த எடுப்பிலேயே உனது பிள்ளையை என்னோடு அனுப்பு என்று கேட்டுவிடவில்லை. அவனுக்கு தசரத மன்னனுடன் எப்படிப் பேசிக் காரியத்தைச் சாதித்துக் கொள்ள வேண்டும் என்பது தெரியும். விசுவாமித்திரன் பேசத் தொடங்கினான்.
தசரதா இது என்ன கேள்வி. என்னைப் போன்ற முனிவர்களுக்கும் தேவர்களுக்கும் ஏதாவது இடையூறு நேர்ந்தால் நாங்கள் புகலிடம் தேடிப் போவதற்கு ஐந்து இடங்கள் தான் உண்டு. சிவபெருமான் இருக்கும் கயிலை மலைக்குப் போவோம் திருமால் வாழ்கின்ற பாற்கடல் உலகமான வைகுண்டம் போவோம். தாமரைப் பூவிலே வீற்றிருக்கும் பிரமனின் சத்திய உலகம் போவோம் கற்பக மரம் இருக்கும் இந்திர உலகமான மனோர்வதிக்குப் போவோம் அல்லது மாட மாளிகைகளை உடைய அயோத்திக்கு உன்னிடம் வருவோம்.
போரிலே பாவிக்கப்பட்டதால் புரால் மணம் மாறாத வேலை உடையவனே இது உனக்குத் தெரியாதா என்று கேட்டான் விசுவாமித்திரன்.
என் அனைய முனிவரரும் இமையவரும் இடையூறு ஒன்று உடையரானால்
பல் நகமும் நகு வெள்ளிப் பனிவரையும் பாற்கடலும் பதும பீடத்து
அந்நகரும் கற்பக நாட்டு அணி நகரும் மணி மாட அயோத்தி என்னும்
பொன் நகரும் அல்லாது புகல் உண்டோ இகல் கடந்த புலவு வேலோய்
(கம்பராமாயணம் – பால காண்டம் – கையடைப்படலம் )
இங்கே தசரதனைத் தூக்கி சிவனோடும் திருமாலோடும் பிரம்மனோடும் இந்திரனோடும் சமமாக வைத்துப் புகழ்ந்து பேசுகிறான் விசுவாமித்திரன். அவர்களுக்கு இருக்கும் ஆற்றல் உனக்கும் இருப்பதால் உன்னை நாடி வந்தேன் என்று தான் கேட்கப்போவதை மறுக்க முடியாத இக்கட்டான நிலைக்கு தசரதனைத் தன் பேச்சினால் கொண்டுவந்து விடுகின்றான் அவன். இது கம்ப நாடகம்.
அடுத்து விசுவாமித்திரனுடைய வாய் வல்லமையை தாடகை வதத்திலே ஒரு இடத்தில் காண்கிறோம். இராமன் கேட்டான் முனிவரே முதன் முதல் போருக்கு வில்லைக் கையில் எடுக்கும் என்னைப் பார்த்து ஒரு பெண்ணைக் கொல்லச் சொல்கிறீரே நான் பெண் கொலை செய்ய மாட்டேன் இது இராமன் நிலை.
இராமா இவள் எல்லா முனிவர்களையும் பிடித்துக் கொண்டு சாப்பிடுகின்றாள். இவளைப் போய் பெண் என்று தயங்குகின்றாயே கொல் இவளை என்றான் விசுவாமித்திரன். இராமன் விடவில்லை. முனிவரிடம் கேட்டான். எல்லோரையும் கொன்று தின்பவள் என்கிறீரே அப்போது என் உம்மைக் கொன்று தின்ன முயற்சிக்வில்லை?
இங்கே இராமனின் கேள்விக்கு தக்க பதில் சொல்லி அவன் வாயை அடைத்தால் தான் விசுவாமித்திரன் நாவன்மை உடைய பாத்திரம் ஆவான். இது கம்பனுககும் தெரியும்.
விசுவாமித்திரன் இராமன் வாய் மூடுவதற்குள் பதில் சொன்னான். இராமா உண்பதற்கு என் உடலிலே என்ன இருக்கின்றது. இது வெறும் கோது என்று நினைத்து என்னைக் கொல்லாமல் இருக்கிறாள் அது தான் விசயம் என்றான் அவன்.
தீது என்றுள்ளவை யாவையும் செய்துஇ எமைக்
கோது என்று உண்டிலள்; இத்தனையே குறை
யாது என்று எண்ணுவது இக் கொடியாளையும்இ
மாது என்று எண்ணுவதோ மணிப் பூணினாய்!
(கம்பராமாயணம் – பால காண்டம் – தாடகை வதைப்படலம்)
இனி விசுவாமித்திரனின் பேச்சு வன்மையை மிதிலையிலே காண்கிறோம்.. ஜனகன் மகளான சீதையை இராமனுக்கு மணம் முடித்து வைக்க எண்ணுகிறான் விசுவாமித்திரன். அவன் மனத்திலே ஒரு அச்சம் தோன்றுகின்றது.
ஜனக மன்னனிடத்திலே இராமனை எப்படி அறிமுகப்படுத்துவது. தசரதன் மகன் என்றதும் ஓ! அந்த மூன்று மனைவிகளோடும் கணக்கற்ற அழகிகளோடும் குடும்பம் நடத்தும் தசரதன் பிள்ளையா என்று கேட்டுவிடுவானா. அப்பனைப் போலத்தான் பிள்ளையும் இருப்பான் என்று நினைத்து பெண் தர மறுத்து விடுவானோ என்று அஞ்சிய முனிவன் இராமனை அறிமுகப்படுத்த தன் பேச்சு வன்மையைப் பயன்படுத்துகின்றான்.
ஜனக மன்னனே இவன் தசரத மன்னனுடைய புதல்வன் இராமன். ஆனால் இவனைப் பெற்றது மட்டும் தான் தசரதன். மற்றப்படி பிறந்ததில் இருந்து உபநயனச் சடங்கு செய்து படிப்பித்து இன்றுவரை வளர்த்தவன் வசிட்ட முனிவனப்பா என்று முந்தி விழுந்து வசிட்டனை அங்கே துணைக்கு கொண்டுவருகிறான் விசுவாமித்திரன்
என்ன காரணம் என்றால் கற்புக்கரசியான அருந்ததி என்ற ஒரு பெண்ணோடு மட்டும் குடும்பம் நடத்தியவன் வசிட்ட முனிவன். அவனிடம் வளந்த பிள்ளைக்கு அப்பன் குணம் வராது என்ற நம்பிக்கையை ஜனகன் நெஞ்சத்திலே விதைக்கத் தன் சொல் ஆற்றலைப் பயன்படுத்தினான் விசுவாமித்திரன்.
திறையோடும் அரசு இறைஞ்சும் செறி கழற் கால் தசரதன் ஆம்
பொறையோடும் தொடர் மனத்தான் புதல்வர் எனும் பெயரேகாண்
உறை ஓடும் நெடு வேலாய் உபநயன விதி முடித்துஇ
மறை ஓதுவித்துஇ இவரை வளர்த்தானும் வசிட்டன்காண்.
(கம்பராமாயணம் – பால காண்டம் – வரலாற்றுப்படலம்)
இரா.சம்பந்தன்
கனடா தமிழர் தகவல் சஞ்சிகையில் 5.6.2021 ஆகிய இன்று வெளிவந்த எனது கட்டுரை!