ஐந்திணை ஐம்பதும் நம்தமிழ்ப் பெண்களும்!
அலையெறியும் கடற்கரையில் அமைந்திருந்த அவ்வூரில் வலை எறியும் மீனவர்கள் மட்டுமல்ல அவரோடு குலையெறியும் தெங்கினமும் குதித்து விளையாடும் முலையெறியும் விலங்கினமும் முதுகில் மூன்று கோடணியும் நிலையடைந்த அணிற்குலமும் நிலத்தில் வேர் பதித்து இலையெறிந்த மரங்களுடன் இணைந்து படருகின்ற மலையெறியும் கொடியினமும் கலந்தே நிறைந்திருக்கும்.
விண்ணில் இரவு வைக்கும் விடிவிளக்காம் நிலவொளியில் கண்ணில் காதலுடன் காத்திருக்கும் கன்னியரை எண்ணிக் கலம் ஏறாக் காதலர்கள் சந்தித்துப் பெண்ணின் சுகமடைந்து பேசித் தினமிருந்து மண்ணில் கிடைத்த சங்கம் மறைந்திருந்த சிப்பி என்றும் விண்ணில் பறந்து வரும் பறவைகளின் இறகு வைத்த தொன்னைச் சுறாநெய்யும் தொட்டதற்குப் பரிசளிப்பார்.
நாணல் அறியும். நாரையதும் தானறியும். வானில் வட்டமிட்டு வந்திறங்கும் கொக்கறியும். காதல் நாடகத்தை. கலமுடைடைக்கும் அலைவெறியை. ஆனால் வீட்டிலுள்ளோர் அறியார்கள் இவையெதுவும். கூட்டில் அடைபட்ட குருவியெனத் தம்மகளைப் பாட்டி முதற்கொண்டு பலர்பார்த்து மகிழ்திருக்க ஏட்டில் மறுபக்கம் எத்தனையோ கறைத் தடங்கள்.
தேடுவார் அற்றுத் திருத்தவும் முடியாமல் ஆடியோர் பக்கத்தில் அலைகடலும் தள்ளிவைத்த நீடியதோர் ஓடத்தில் நெடுங்காலம் பெண் சுகத்தை காதல் விருந்தாகக் கைநிறையக் கொடுத்தவொரு காமக் கிழத்தியவள் கன்னியல்ல இப்போது. அழுதாள் கண்கசிவப்ப அவலமுற்ற வாழ்வையெண்ணி. தொழுதாள் தொட்டவனும் தொலைந்த திசைநோக்கி.
எச்சில் சோறேனும் எறிந்தால் நாயுண்ணும். மிச்சத் தேனிருந்தால் மேலே எறும்பூரும். குச்சித் தடி கிடைத்தால் குருவியதைக் கூடு கட்டும். கொச்சைப் படுத்திவிட்டால் குடும்பப்பெண் எதுக்குதவும்? அழுதாள் சோலையெலாம் அவன் வரவைத் தினமெண்ணி.
ஒருநாள் அவளிருந்து தொட்டனனை நினைத்தேங்கி இருகாந்தள் கையெடுத்து இமைபனித்த துளி நீரை துடைத்தாள் கண்சிவப்ப தூரத்தே அவள் அன்னை. ஓடி வந்தாள். ஓவென்று அழுதிட்டாள். வாடிக் கிடந்த முது கரமதனால் தன்மகளைக் கட்டி அணைத்தாள் கனநேரம் பேசாமல்.
பின்பு கேட்டாள் பிள்ளாய் என்மகளே
நாற்றுக்கு வைத்த பயிர் நாள்தோறும் நாமுன்னை சோற்றுக்கோ சேலைக்கோ சிரழிய விட்டதில்லை. நேற்றும் இப்படித்தான். நெடுநாளாய் இப்படித்தான். காற்றுக் கறுப்போ கலங்குகின்றாய் தினமும் இங்கு வந்து. சின்னக் குழந்தையம்மா. சிறகின்னும் முளைக்கவில்லை. என்னதான் கவலை ஏனழுது சாகின்றாய்
எனக்கேட்டாள் அன்னையவள். எதைச்சொல்வது இப்போது. கொதித்த உலைக்கரிசி கொட்டியதைச் சொல்லுவதா. குதித்த கொக்கலகால் குத்தியதைச் சொல்லுவதா மிதித்த கால்சேற்றை மேனியிலே காட்டுவதா பதித்து விட்டுப் போன நகம் பாரிதனை என்பதுவா எதைப்பதிலாய்ச் சொல்லுவது
அழுகையை நிறுத்திவிட்டு அவள் ஓர் கதை அளந்தாள் அலை வந்து தொட்டழிக்கா தூரத்தில் தானம்மா சிலையொன்று நான்வடித்தேன் சிறுமணலால் கடற்கரையில். இல்லம் அமைத்தேன். இருபுறமும் மரம் வைத்தேன். நெல்லை விதைப்பதற்கும் நீண்டமணல் வயலமைத்தேன். தினமும் மாலையிலே தீட்டிவைத்த ஓவியத்தை தின்றுவிட்டுப் போனதுவே தேடிவந்து அலையொன்று.
எல்லாம் கரைந்தழிந்து என்முயற்சி தோற்றுப்போய் சொல்லால் விளக்கவொண்ணாச் சோகத்தில் நானம்மா. தொட்ட அலைவருமா தொட்தெல்லாம் தந்திடுமா கெட்ட மனத்துடனே கிடைக்காதே போய்விடுமா எட்டியெட்டி என் நினைவு எங்கெங்கோ செல்கிறது என்ன செய்வேன் நானென்று ஏங்கியந்த மகள் அழுதாள்.
கொண்கன் பிரிந்த குளிர்பூம் பொழினோக்கி
உண்கண் சிவப்ப வழுதே னொளிமுகங்
கண்டன்னை யெவ்வம்யா தென்னக் கடல்வந்தென்
வண்டல் சிதைத்ததென் றேன்.
(சங்க இலக்கியம் – பதிணெண்கீழ்க்கணக்கு – ஐந்திணை ஐம்பது பாடல் 44 )
இதன் பொருள்
கொண்கன் பிரிந்த – என்னுடன் சேர்ந்து உறவாடிக் கணவனாக நடந்து கொண்ட காதலன் என்னை விட்டுப் பிரிந்த இடமான
குளிர் பூம் பொழில் நோக்கி – சில்லென்ற காற்று வீசும் மலர்கள் நிறைந்த சோலையிலே நின்று கொண்டு
உண்கண் சிவப்ப அழுதேன் – கரிய மை தீட்டப்பட்ட என் கண்கள் சிவந்து போகும்படி நான் அழுது கொண்டிருந்தேன்
ஒளி முகம் கண்டு அன்னை – அப்போது அங்கு வந்த எனது அம்மா எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் என் முகத்திலே கண்ணீரைப் பார்த்து
எவ்வம் யாது என்ன – மகளே உனக்கு என்ன துன்பம் வந்துவிட்டது ஏன் இப்படித் தனிமையில் இருந்து அழுகின்றாய் என்று கேட்க
கடல் வந்து – கடல் அலையொன்று வந்து அம்மா
என் வண்டல் சிதைத்தது என்றேன் – நான் ஆசையோடு கட்டிவைத்திருந்த அழகான எனது மணல் வீட்டை அழித்துவிட்டுப் போய்விட்டது என்று பொய் சொன்னேன்.
பதிணெண் கீழ்க்கணக்குப் பழையகதை ஆனாலும் பதியதொரு செய்தியினை புகட்டுமொரு செய்யுளிது. மாறன் பொறையனெனும் மனிதனவன் பாடியது. பிழை ஒன்றைச் சரிசெய்யப் பொய்யுரைக்கும் வரலாறு. இன்றுள்ள கணணி இருந்ததில்லை அவர்களிடம். எம்முடைய வசதிகளை கண்டதில்லை அந்த மக்கள். என்றாலும் காதல் இடைப்பொருட்கள் பரிமாற்றம் இதனால் வாழ்க்கையிலே இழந்தவைகள் மனக்கவலை என்பதெல்லாம் இன்றும் அன்றும் என்றும் உள்ளதென இயற்றிவைத்த இலக்கியங்கள் அறிவோம். அவைக்குள்ளே ஒளித்துவைத்த சுவையறிவோம் ஒன்றும் தவறாமல்!
தமிழர் தகவல் (கனடா) சஞ்சிகையில் இன்று 5.3.2023 நான் எழுதிய கட்டுரை இது