|

எங்கள் பூந்தோட்டம்!


என்வீட்டின் முன்னாலே கனடா நாட்டில்
எத்தனையோ பூஞ்செடிகள் மனைவி வைத்தாள்
தன்பாட்டில் பூத்திருந்த செடிகள் எல்லாம்
தன்னகத்தில் குளிர்வந்து தாக்க வாடி
தென்நோக்கி உயிர்துறந்து மடிந்து போகத்
தேகமெலாம் பதைக்கநான் அவளைக் கேட்டேன்
உன்பாட்டில் வைத்தபயிர் அழிந்து போச்சே
உனக்கதிலே கவலையில்லை என்று கேட்டேன்


பயிர்வளர்க்க வெய்யிலுக்கோர் காலம் போல
பனிபொழிந்து பயிர்சாகும் நாளும் உண்டு
உயிர்பிறந்து மடிவதெலாம் இயற்கை ஆனால்
உண்மையிதைப் புரிந்துகொண்டு குளிரின் முன்னால்
தயிரெடுத்து நெய்விளைய வைத்தல் போல
தண்டுகளை உள்வீட்டில் வளர்க்கின்றேன் நான்
மயிர்க்குளிர்தான் என்செய்யும் பயிரை மீண்டும்
மண்ணடுவேன் பூமலரும் மனைவி சொன்னாள்

சொன்னவளை ஒருகணம்நான் நிமிர்ந்து பார்த்தேன்
சுட்டதவள் வார்த்தையெந்தன் நெஞ்சக் கூட்டை
சின்னவொரு செயல்முறையால் செடிகள் கூடச்
சீரழிந்து போகாமல் இவளும் காத்தாள்
என்னினத்தை என்சனத்தை உலகம் கொல்ல
எதனையும்நாம் செய்யவில்லை அந்த நேரம்
ஒன்றிரண்டைக் காத்திருந்தால் கூட இன்று
ஒன்றுபத்தாய் பூத்திருக்கும் ஐயோ! ஐயோ!!


இரா.சம்பந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.