உரையாளர்கள் கோட்டை விட்ட இறைவனின் எட்டுக் குணங்கள்!
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை
(திருக்குறள்: கடவுள்வாழ்த்து:9)
எண்வகைப்பட்ட குணங்கள் – தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேர்-அருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை என்பன.
– பரிமேலழகர் சொன்னது
இவையெல்லாம் தவறு. இந்தக் குறள் வள்ளுவரின் 9வது பாடல் ஆகையால் அவர் அதற்கு முந்திய எட்டுத் திருக்குறளிலும் சொன்ன எட்டுக் குணங்கள் தான் 9வது குறளில் வரும் எண் குணங்கள் என்பதே சரியான உரையாக இருக்கும்.
வள்ளுவர் நினைத்த எட்டுக்குணங்கள்
1. ஆதி முதன்மை பெறுதல்
2. குற்றமற்ற அறிவுடைய வாலறிவாக நிற்றல்
3. மலர்களின் மீது சென்று வாழுதல்
4. வேண்டுதல் வேண்டாமை என்ற விருப்புவெறுப்பு இன்மை
5. வினையின்மை
6. ஐந்து பொறிகளையும் அடக்கி ஆளும் தன்மை
7. தனக்கு உவமை இல்லாமை
8. அறவழியில் கருணையுள்ளவனாகத் திகழ்தல்
திருக்குறள் கடவுள் வாழ்த்திலே முதல் எட்டுக் குறளையும் பார்த்துவிட்டு இந்தகக் குறளுக்குப் பொருள்காண உரையாளர்கள் தவறிவிட்டார்கள். இது அவர்கள் குற்றமல்ல. அவர்கள் சார்ந்திருந்த இடங்களும் பின்பற்றிய கொள்கைளும் நல்ல உரை காண தடையாக அமைந்துவிட்டன.