|

இடமும் பொருளும் தமிழும்!

அமைச்சராக இருந்து கொண்டு பெரிய புராணம் என்ற இலக்கியத்தை எழுதியவர் சேக்கிழார். அந்தப் பெரிய புராணத்திலே அரச குமாரன் ஒருவன் பசுக்கன்று ஒன்றைத் தவறுதலாகத் தேரால் அடித்துக் கொன்றதும் அந்தக் கன்றின் தாய் சென்று அரண்மனை வாசலிலே மக்கள் குறைகளை அறியக் கட்டப்பட்டிருந்த மணியைத் தன் கொம்பினாலே அடித்து நீதி கேட்டதும் மன்னன் வந்து நடந்ததை அறிந்து குற்றம் செய்த இளவரசனை மகன் என்றும் பார்க்காமல் மனு தர்மத்தைப் பின்பற்றி தானே தேர் ஏற்றிக் கொன்றதும் போன்ற செய்திகள் விபரிக்கப்பட்டு இருப்பது பலருக்கும் தெரிந்த பழைய செய்தியாகும்.

ஆனால்!

பசு வந்து மணி அடித்த ஒரு செயலுக்கு மூன்று வேறுபட்ட இடங்களில் மூன்று வேறுபட்ட சொற்களை சேக்கிழார் பயன்படுத்தி இருப்பது எல்லோரும் தெரிந்து வைத்திருக்கும் செய்தி அல்ல. அது பெரிய புராண அறிவுக்கு அப்பால் உணர்ச்சி சம்மந்தப்பட்டது. தமிழ் மொழிச் சொற்களின் செறிவோடு தொடர்புடையது. அறுபத்துமூன்று நாயன்மார்களின் வரலாறும் முழுவதும் தெரிந்தவர்க்கும் அப்பாற்பட்ட இலக்கியத் தடாகம் அது.

முதலிலே தன் கன்று இறந்ததும் அந்தப் பசு பெரு மூச்சு விட்டு அழுது முகத்திலே கண்ணீர் வடிய அரன்மனைக்குச் சென்று மணியை அடிக்கும் இடத்தில் புடைத்தல் என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றார் சேக்கிழார். இந்தப் புடைத்தல் என்ற சொல்லுக்கு என் பிள்ளையைக் காப்பாற்றத் தெரியாத அரசுக்கு இந்த மணி என்னத்துக்கு என்ற உணர்வு கொடுக்கப்படுகின்றது! அங்கே கொம்பு வேகமாக இடிக்கின்றது. ஆத்திரத்தால்.

தன்னுயிர்க் கன்று வீயத் தளர்ந்த ஆத் தரியாதாகி
முன் நெருப்புயிர்த்து விம்மி முகத்தினில் கண்ணீர் வார
மன்னுயிர் காக்குஞ் செங்கோல் மனுவின் பொற் கோயில் வாயில்
பொன்னணி மணியைச் சென்று கோட்டினால் புடைத்தது அன்றே.

(திருத்தொண்டர் புராணம் – திருநகரச் சிறப்பு)

மணி ஓசை கேட்ட மன்னன் சிம்மானத்திலே இருந்து எழுந்தும் இறங்கவில்லை. நொடியிலே அந்த இடத்தக்குச் செல்வதற்காக படிகளை மிதிக்காமல் வழுக்கி இறங்கி ஓடினான். அதைத்தான் அரியணை இழிந்து போந்து என்றார் சேக்கிழார். மன்னன் அரண்மனை வாசலுக்கு வர காவலர்களும் வந்து பசு செய்த வேலையைப் பார்க்கிறார்கள்!

பசு மணி அடித்த செயலைக் காவலர்கள் மன்னனுக்கு சொல்லும் போது அங்கே புடைத்தல் என்ற சொல்லை நீக்கிவிட்டு துளக்குதல் என்ற சொல்லைக் கொண்டு வருகின்றார் சேக்கிழார். இங்கே துளக்குதல் என்ற சொல் அசைத்தல் என்ற பொருளிலே கையாளப்படுகின்றது.

இறைவா இங்கே பாருங்கள். மணியை இந்த மாடு தவறுதலாக கொம்பினாலே தட்டிவிட்டு நிற்கின்றது என்ற பொருள்பட வேலைக்காரர் சொல்கிறார்கள்.

ஆங்கது கேட்ட வேந்தன் அரியணை இழிந்து போந்து
பூங்கொடி வாயில் நண்ணக் காவலர் எதிரே போற்றி
ஈங்கிதோர் பசுவந்தெய்தி இறைவ! நின் கொற்ற வாயில்
தூங்கிய மணியைக் கோட்டால் துளக்கியது என்று சொன்னார்.

(திருத்தொண்டர் புராணம் – திருநகரச் சிறப்பு)

வேலைக்காரர் சொன்னதை அரசன் கண்டு கொள்ளவில்லை. ஒரு பசு வந்து கவலையோடு மணி அடிக்கிறது. வேணும் என்று அடிக்கவிலை என்று இந்த மடைப்பயல்கள் சொல்கிறார்கள்! என்ன இதெல்லாம்? விலங்குகள் கூட துன்பமின்றி வாழ முடியாமல் வந்து மணி அடிக்கும் அளவுக்கு நாங்கள் நன்றாக ஆட்சி செய்கிறோம் என்று இகழ்ச்சிச் சிரிப்பொன்றை மந்திரியைப் பார்த்துச் செய்கின்றான்.

மந்திரிக்குத் தெரியும். நடந்த விசயத்தைச் சொன்னதும் மகனைப் பிடித்துக் கொல்லப் போகின்றானே இந்த அரசன் என்ற பயத்தில் அரசே உங்கள் மகன் படைகளும் தேர்களும் சூழ்ந்துவர அரச வீதியிலே போன போது இந்தப் பசுவின் கன்று தேரின் இரண்டு சக்கரங்களுக்கும் இடையிலே வந்து புகுந்து அடிபட்டு இறந்து விட்டது. அதனாலே இந்தத் தாய் வந்து இந்த வேலையை செய்து விட்டது அப்படி அது செய்திருக்கக் கூடாது தான் என்ற பொருள் பட பையனைக் காப்பாற்றும் எண்ணத்தோடு சொல்கிறான்.

வளவ! நின் புதல்வன் ஆங்கோர் மணி நெடுந் தேர்மேல் ஏறி
அளவில் தேர்த்தானை சூழ அரசுலாந் தெருவில் போங்கால்
இளையஆன் கன்று தேர்க்கால் இடைப் புகுந்து இறந்ததாக
தளர்வுறும் இத்தாய் வந்து விளைத்ததித் தன்மை என்றான்.

(திருத்தொண்டர் புராணம் – திருநகரச் சிறப்பு)

பசு அடித்த மணி முதல் பாட்டிலே புடைத்தல் என்றும் அடுத்த செய்யுளிலே துளக்குதல் என்றும் மூன்றாவது பாட்டிலே இத்தன்மை என்றும் பிரச்சனையின் தீவிரம் படிப்படியாக குறைக்கப்படுவதைக் காணலாம். மந்திரி பசு மணி அடித்த செய்கையைத் தன் வாயாலே இன்னுமொரு முறை மன்னனுக்குச் சொல்லி நினைவுபடுத்த விரும்பாமல் இத்தன்மை என்று சொல்கிறான்.

இங்கே தமிழ் வளைந்து விளையாடுகிறது பெரியபுராணம் எழுதிய கவிஞனோடு. செய்திக்கும் சம்பவத்துக்கும் மட்டும் சொற்களை அடுக்கிக் கொண்டு போகாமல் உணர்ச்சி ததும்பும் இடங்களுக்கெல்லாம் சொற்களைப் ஆய்ந்து எடுத்துப் போடக் கூடிய மொழியாக இருக்கின்றது எங்கள் தமிழ்! ஆனால் அதை அனுபவிக்கத்தான் யாரும் இல்லை இன்று. காட்டில் எறித்த நிலா என்று சொல்கிறார்களே! அது எங்கள் தமிழ் இலக்கியங்களாக இருக்குமோ?

இரா.சம்பந்தன் (தமிழர் தகவல் இதழில் 5.7.2015 இடம்பெற்ற கட்டுரை)

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.