ஆரை மீனும் அதை மேய்ந்த நாரையும்!
ஊர் கூடிருந்தது அந்தத் தினைப்புலத்து மண் மேடைக்கு முன்னால். அந்த வழக்கை விசாரித்துத் தீர்ப்புச் சொல்ல ஊர்ப் பெரியவர்களும் வந்துவிட்டார்கள். அப்பனும் அம்மையும் அழைத்துவர அங்கே வந்து தலைகுனிந்து நிற்கின்றாள் அந்தப் பெண். ஓரக் கண்ணால் எதிரே நிற்கும் அவனையும் பார்த்துக் கொள்கின்றாள் அவள்.தம்பி! உன்னைத் தான் மணம் முடிப்பேன் என்று உறுதி மொழி கொடுத்து அருவிக் கரையில் தன்னிடம் நீ கணவனாக நடந்து கொண்டதாக உன்மீது ஒரு குற்றச்சாட்டு இந்தப் பெண்ணால் கூறப்பட்டுள்ளது. எங்கு என்ன நடக்கின்றது என்பதைக் கண்காணிக்கும் வல்லமை கொண்ட ஒரு பொருள் இந்த உலகத்தில் உண்டு. அதற்குப் பெயர் தெய்வம். அதன் தண்டனை பின்பு மிகவும் கடுமையான இருக்கும். அதனால் இப்போதே நீ உண்மையைச் சொல்லி விடுவது உனக்கு நல்லது.இவள் சொல்வது பொய். இவள் யாரென்றே எனக்குத் தெரியாது. இவள் கூறுவது போல அருவிக் கரைக்கு நான் என்றும் போனதும் இல்லை.தினை வயல் அறுவடை முடிந்ததும் உன்னைக் கட்டிக்கொள்கிறேன் என்று நீ என்னிடம் சொல்லவில்லை.இல்லை.அதற்கு மேல் அவள் எதுவுமே பேசவில்லை. தலை கவிழ்ந்து நின்றாள். மனம் தான் அவளின் சொல்லைக் கேட்டு மௌனமானதே ஒழிய கண்கள் முத்து முத்தாக் கொட்டிக் கொண்டுதான் இருந்தன.மகளே! இவன் உன்னோடு கூடியிருந்ததைக் கண்ட சாட்சிகள் யாராவது இருக்கிறார்களா. அதுதான் வேண்டாம். அருவிக் கரையிலே இவன் உன்னோடு உலவுவதைக் கண்டவர்கள் இருந்தாலே போதும். நீ சொன்னதை உண்மையென்று அறிவித்து விடுகின்றோம்.யாரும் இல்லை. ஓடுகின்ற நீரிலே வரும் ஆரை மீன்களைப் பிடிப்பதற்கு நாரைகள் தான் அங்கே நிறைய இருந்தன.பறவைகள் வந்து உனக்காகச் சாட்சி சொல்லுமா அம்மா ஊர் சிரித்தது. வழக்கும் முடிந்து விட்டது. இத்தனை காலமும் மானத்தால் வேலி போட்டுக் காப்பாற்றிய தங்கள் உயிரென்ற பயிர்களை மகளின் காதல் என்ற மான் வந்து மேய்ந்து விட்ட காயத்தோடு அவளைப் பெற்றவர்கள் கூனி நடந்தார்கள் வீட்டுக்கு.வீட்டு வாயிலே தனக்காகக் காத்திருந்த தோழியின் கைகளைப் பிடித்துக் கொண்டு வீட்டின் பின்றுமாக இருந்த ஒதுக்குப் புறத்துக்கு வந்தாள் அவள். மண்ணிலே அமர்ந்தாள். கண்களுக்கு மட்டுமா அழத் தெரியும். உள்ளத்துக்கும் தான் அழத் தெரியும். ஆனால் அது அழுவதற்கு ஏற்ற இடத்தைத்தான் தேடிக் கொண்டு பொறுமையாக இருந்துவிடும்.அந்தப் பெண்ணும் தோழியின் தோளிலே சாய்ந்து கொண்டு அழுது முடித்தாள். பின்பு சொன்னாள். அருவிக் கரையிலே அவன் வரும் வரையில் நான் நாரைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். தினைக் கதிரின் தாள் போன்ற கால்களை உடைய அவை எங்கிருந்தோ வந்து அருவி கலக்கும் நதியிடத்திலே அயிரை மீனைப் பிடித்து உண்டன.தினையினது தாள் போன்ற வரிபடர்ந்த அந்த நாரைகளின் கால்களை நீரிலே கண்டு அவையும் தங்களைப் போன்ற மீனென்று நம்பி அருகில் வந்து ஏமாந்து நாரைகளுக்கு இரையாகின அந்த அயிரை மீன்கள். அவை போலத் தான் என் வாழ்வும் ஆகி விட்டது.எத்தனை ஆசை வார்த்தைகளைச் சொன்னான். நீ இல்லாவிட்டால் இந்த அருவியிலே பாய்ந்து உயிரை மாய்த்துக் கொள்வேன் என்றும் சொன்னான். இப்போது தினை விதைப்புக் காலம். அறுவடை முடியட்டும் எங்கள் கல்யாணத்தை வைத்துக் கொள்வோம் என்று சத்தியம் கூடச் செய்தான். அவனைப் பார்க்கப் பாவமாக இருந்தது. இடம் கொடுத்தேன். இன்றைக்கு இப்படி ஒரு பொய்யைச் சொல்லி என்னை அந்தக் கள்வன் மறுத்தால் நான் என்ன செய்வேன் என்றாள் அந்தப் பெண்.யாரும் இல்லைத் தானே கள்வன்தானது பொய்ப்பின் யானெவன் செய்கோதினைத்தாள் அன்ன சிறுபசுங் காலஒழுகுநீர் ஆரல் பார்க்கும்குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே.(சங்க இலக்கியம் குறுந்தொகை செய்யுள் 25)தோழி கேட்டாள். இப்போது வள்ளுவன் என்றொரு புலவன் புதிதாகத் திருக்குறள் என்னும் பெயரிலே குறள் வெண்பாக்களைப் பாடிக்கொண்டு வருகின்றான். சங்க காலச் சமுதாயம் என்ற கட்டுப்பாடற்ற காட்டாற்று வெள்ளத்துக்கு அணை கட்டிச் சீர்ப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கும் அவன் உன் போன்ற நிலையடைந்த அபலைப் பெண்களுக்காவும் குரல் கொடுத்திருக்கிறான் தெரியுமா? உனக்கு அவன் நூலான திருக்குறள் பற்றி ஏதாவது தெரியுமா?இல்லை. அது பற்றி எனக்குத் தெரியாது. அவன் என்ன சொல்கிறான் என்று தன் துன்பத்தையும் மறந்து கேட்டாள் அந்தப் பெண்.பெண்கள் உண்மையாகவே ஒழுக்கமானவர்களாகத் தான் இருக்க ஆசைப்படுகின்றார்கள். ஆனால் அந்த மனக் கட்டுப்பாடுகளை சில வேளைகளில் ஆண்களின் பணிவான வார்த்தைகளும் பொய்யான நடிப்பும் தகர்த்தெறிந்து விடுகின்றன. இது பெண்களின் குற்றமல்ல. பெண்மையைக் களவாட நினைக்கும் அந்தக் கள்வர்கள் பயன்படுத்தும் இந்த ஆயுதங்களுக்கு முன்னால் சில பெண்களால் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடிவதில்லை என்று சொல்லியிருக்கிறான் வள்ளுவன் என்றாள் தோழி.அந்தக் குறள் என்ன?பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்பெண்மை உடைக்கும் படை(திருக்குறள் நிறை அழிதல் குறள் 1258)அந்தப் புலவன் உண்மையைத்தான் சொல்லியிருக்கின்றான் என்று அந்தப் பெண் சொல்ல இல்லை அவன் சொன்னது ஆயிரத்து முன்னூற்று முப்பது உண்மைகள் என்றாள் தோழி.(கனடா தமிழர் தகவல் சஞ்சிகையில் இன்று 5.12.2020 வெளியான எனது கட்டுரை இது)