அகநானூறும் அன்றைய வாழ்வியலும்!
தோழி! என் எழுத்துக்களை உன்னால் வாசிக்க முடியுமோ தெரியவில்லை. அதை விட இத்தனை ஓலைச் சுவடிகளையும் பொறுமையோடு படிப்பதற்கு உனக்கு நேரம் இருக்குமோ என்றும் தெரியவில்லை. எனது கவலைகளையும் மகிழ்ச்சிகளையும் நீ இந்த ஊரில் இருந்தவரை உன்னுடன் மட்டுமே பகிர்ந்து கொண்டேன். இன்று நீயோ மணம் முடித்து அயலூருக்குச் சென்று விட்டாய். ஆனாலும் இந்த மகிழ்ச்சியான செய்தியை உனக்கு அறிவிக்காமல் இருக்க முடியவில்லை.எதிகளும் கண்டால் ஆசை கொள்ளக் கூடிய பிள்ளைகளைப் பெற்றவர்கள் இந்த உலகத்திலும் புகழோடு விளங்கி மறு உலகத்திலும் குற்றமற்று வாழ்வார்கள் என்று முன்னோர்கள் சொன்ன வார்த்தைகள் என் வாழ்க்கையில் உண்மைதான் என்று நினைக்குபடியான சம்பவங்கள் அண்மையில் நடந்தேறிவிட்டன.பல காலமாக என்னைப் பிரிந்து இருந்த என் கணவனுக்கு இன்னொரு திருமணம் ஏற்பாடாகி எங்கள் வீடு இருக்கும் தெருவழியாக மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் வந்து கொண்டிருந்தது. நான் எட்டியும் பார்க்கவில்லை. மணிகள் ஒலிக்கும் குதிரைகள் பூட்டப்பட்ட தேரிலே அழகிய ஆடை ஆபரணங்களோடு வந்து கொண்டிருந்த என் கணவனை எனக்குத் தெரியாமல் என் மகன் தளர்ந்த குறுநடை போட்டுச் சென்று தெருவிலே வேடிக்கை பார்த்திருக்கின்றான்.மகனைக் கண்டதும் தேரை நிறுத்தச் சொல்லி அதனை விட்டு இறங்கிக் கீழே வந்த என் கணவன் தன் மகனின் பவளம் போன்ற சிவந்த வாய் தன் நெஞ்சிலே படும்படியாக இறுக அணைத்து மகனே நீ வீட்டுக்குப் போ என்றான். என் மகன் அதைக் கேட்கவில்லை. அப்பாவைக் கட்டிக் கொண்டு அழுதான். அவனைச் சமாதானப்படுத்த முடியாத என் கணவன் மகனை ஒரு கையில் பிடித்துக் கொண்டு என் வீட்டுக்கு வந்தான்.இருவரையும் கண்டு திகைத்த நான் நடந்ததை அறிந்து நடுங்கினேன். கல்யாணத்தைக் குழப்புவதற்காக நான் தான் திட்டமிட்டு மகனை வைத்து நாடகம் ஆடியிருக்கிறேன் என்று என் கணவனும் ஊர் உலகத்தவரும் நினைக்கப் போகிறார்களே என்று பயந்து ஒரு தடி எடுத்து யாருக்கு கல்யாணம் நடந்தாலும் உனக்கு என்ன நல்ல காரியங்களைக் குழப்பவா எனக்கு நீ மகனாகப் பிறந்திருக்கின்றாய் என்று கேட்டுக் கோபத்தோடு என் மகனை அடிப்பதற்கு ஓடினேன்.என்னை அடிக்க விடாது என் கணவன் மகனை அணைத்துக் கொண்டான். அது மட்டுமல்ல முகூர்த்தம் நெருங்குகின்றது வெளியே வா என்பது போல மேள வாத்தியங்களும் குழல்களும் நீண்ட நேரமாக என் வீட்டு வாசலிலே ஓங்கி ஒலித்தும் என் கணவன் வெளியே செல்லவில்லை. என் வீட்டிலேயே தங்கி விட்டான். என் குழந்தை தன் அம்மாவுக்கு நல்லது ஒன்றைச் செய்திருக்கின்றது.நாங்கள் மூவரும் மகிழ்ச்சியாக இருக்கின்றோம். அவன் பிரிந்து சென்றதைக் குறையாக இப்போது நான் எடுக்கவில்லை. நாங்கள் இளம் வயதிலே விளையாடும் காலத்தில் அவன் சொன்ன அன்பு மொழிகள் எனக்காகத் தன் மறு மணத்தை கணப்பொழுதில் உதறிவிட்ட செயல் மூலம் திரும்பவும் உண்மையாக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு மேலே அவனிடம் கேட்பதற்கு ஒன்றுமில்லை.இதை உனக்குத் தெரியப்படுத்துவது எனது கடமை. எங்கள் பிரிவு உன்னை எப்படிக் கலங்க வைத்ததோ அது போல நாங்கள் திரும்ப ஒன்று சேர்ந்த செய்தியும் உனக்கு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். ஆதனால் இந்த மடலை எழுதித் தின் பண்டங்களோடு ஒரு பானையில் இட்டு உழவுத் தொழிலுக்காக உன் ஊருக்கு வரும் ஒருவரிடம் கொடுத்து அனுப்பியிருக்கிறேன்; . இப்படிக்கு உன்னை என்றும் மறவாத தோழி.இம்மை உலகத்து இசையொடும் விளங்கிமறுமை உலகமும் மறு இன்று எய்துபசெறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச்சிறுவர்ப் பயந்த செம்மலோர் எனப்பல்லோர் கூறிய பழமொழி எல்லாம் வாயே ஆகுதல் வாய்த்தனம் தோழிநிரை தார் மார்பன் நெருநல் ஒருத்தியொடுவதுவை அயர்தல் வேண்டிப் புதுவதின்இயன்ற அணியன் இத்தெரு இறப்போன்மாண் தொழில் மா மணி கறங்கக் கடை கழிந்து காண்டல் விருப்பொடு தளர்பு தளர்பு ஓடும்பூங்கண் புதல்வனை நோக்கி நெடுந்தேர்தாங்குமதி வலவ என்று இழிந்தனன் தாங்காதுமணி புரை செவ்வாய் மார்பகம் சிவணப்புல்லிப் பெரும செல் இனி அகத்து எனக் கொடுப்போற்கு ஒல்லான் கலுழ்தலின் தடுத்தமாநிதிக்கிழவனும் போன்ம் என மகனொடுதானே புகுதந்தோனே யான் அதுபடுத்தனென் ஆகுதல் நாணி இடித்து இவன்கலக்கினன் போலும் இக்கொடியோன் எனச்சென்று அலைக்கும் கோலொடு குறுகத்,தலைக்கொண்டுஇமிழ் கண் முழவின் இன் சீர் அவர் மனைப்பயிர்வன போல வந்து இசைப்பவும் தவிரான்கழங்கு ஆடு ஆயத்து அன்று நம் அருளியபழம் கண்ணோட்டமும் நலிய அழுங்கினன் அல்லனோ அயர்ந்த தன் மணனே.இந்தச் செய்தி சங்க இலக்கியமான அக நானூற்றிலே ஆறுபத்தாறாவது பாடலாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றது. கடிதமாக அவர்கள் எழுதியதற்கு ஆதாரம் இல்லை என்றாலும் தோழி அருகில் இல்லை என்பதற்குப் போதிய ஆதாரம் இருந்ததால் இலக்கியச் சுவைக்காக கடிதமுறை சேர்க்கப்பட்டது. இந்தப் பாடலை செல்லூர் கோசிகன் கண்ணனார் என்ற புலவர் பாடியிருக்கின்றார். இந்தப் பாடல் சங்கச் சமூகத்தின் வாழ்வியல் அடையாளம் ஒன்றை எமக்கு வைத்துவிட்டுப் போயிருக்கின்றது.
இரா.சம்பந்தன்
கனடா தமிழர் தகவல் சஞ்சிகையில் இன்று (5.3.2021) வெளிவந்த எனது கட்டுரை இது!