யானையும் நரியும்!

கால்ஆழ் களரின் நரிஅடும் கண்அஞ்சா
வேல்ஆள் முகத்த களிறு

 

எதற்கும் பயப்படாமல் வேலோடு தாக்க வரும் பகைவர்களை தந்தத்தினாலே குத்திக் கோர்த்தெடுத்த வீரம் மிக்க யானையானது கால் புதைகின்ற சேற்று நிலத்திலே போனால் நரிகளால் கொல்லப்படும்!

பொழுது சாயத் தொடங்கி விட்டது. களத்திலே அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கேட்டுக் கொண்டிருந்த வாட்கள் மோதும் ஓசையும் முற்றாக அடங்கி விட்டது. ஆம்! அன்றைய நாள் போர் முடிந்து விட்டது. இனிக் காலையிலே தான் போர் தொடங்கும். வானிலே கழுகுகள் வட்டமிடுகின்றன அறுபட்ட அங்கங்களைத் தூக்கிப் போக!

குதிரைகளின் குளம்பொலிக்கும் யானைகளின் பிளிறலுக்கும் அஞ்சித் தூரத்தே அலைந்த நரிகள் கூட்டம் பயந்தெளிந்து களம் புகுந்து ஆறாக ஓடும் இரத்தத்தை சுவைத்து மகிழ்கின்ற இரவும் வந்தது!

போர் புரிந்த வீரர்களும் போரிலே புண் அடைந்த விலங்குகளுக்கு மருந்து இடுவோரும் கூட உறங்கி விட்டார்கள் நாளை போராட!

இருளோடு இருளாக நின்ற அந்த யானையின் காவலர்களும் உறங்கி விட்டார்கள்! களத்திலே தலைமை தாங்கி நின்று வேல் கொண்டு தாக்க வந்த எத்தனையோ வீரர்களை அஞ்சாது தனது தந்தங்களினாலே குத்திக் கோர்த்தெடுத்த வீரம் மிக்க யானை மெதுவாக அசைந்து நடந்தது!

அது தனிமைக்கு அஞ்சவில்லை! தொடர்ந்து நடந்தது! இருளில்! குளிர் காற்று வீசியது முதலில்! நீரோடும் கடற்கரைக்கு வந்து விட்டது அது! திடீரென்று நீர் நனைத்தது கால்களை!

முதலில் அதன் அதன் முன் கால்கள் குளிர்ந்தன இருளில்! நிலைமையைப் புரிந்து கொள்வற்குள்ளாக முன்கால்கள் முற்றாகப் புதைந்து விட்டன சேற்றில்! அவற்றை எடுப்பதற்காக வைத்த பின்கால்களும் அப்படியே!  தனது நிலையின் விபரீதத்தைப் புரிந்து கொண்ட யானை தப்ப முயன்று திரும்பிப் பார்த்தது! எதுவும் தெரியவில்லை!

அப்போது தான் சில சருகுகள் அசையும் சத்தம்! எரியும் தணல் போன்ற கண்களுடன் நாற்புறமும் நரிகள்! வீரம் விலை போகா இடம்! பலம் பயன் தராத சூழ்நிலை! விவேகமற்ற செயலால் வாழ்க்கையே வீணாகும் தருணம்! துணை வேண்டும்! துணைக்குத் தூது வேண்டும்! தூதைத் துதிக்க வெண்டும்! துதித்தால் மானம் அழியும்! மானம் அழிவதால் தள்ளிப் போகும் சாவா? அல்லது மானம் அழியாமல் சாவை ஏற்றுக் கொள்ளுவதா?

எதிரிகள் பலம் அற்றவர்கள் தான்! ஆனால் அவர்களைச் சந்தித்த இடம் தவறானது! அதனால் தோல்வியும் மரணமும் கைகோர்த்து வருகின்றன! ஏற்றுக் கொள்ள வேண்டியது தான்! அது யாருக்கும் குரல் கொடுக்கவில்லை உதவிக்கு!

பொழுது விடிந்தது! காவலர்கள் கதறினார்கள்! படைகள் பதைத்தன! மக்கள் புலம்பினார்கள்! நம்ப முடியாமல்! சதுப்பு நிலத்திலே சாய்ந்து கிடந்தது மாபெரும் வீரம் நரிகள் கடித்த காயத்தோடு!

வள்ளுவர் எழுதினார்!

 

கால்ஆழ் களரின் நரிஅடும் கண்அஞ்சா
வேல்ஆள் முகத்த களிறு

கண்அஞ்சா வேலாள் – எதற்கும் பயப்படாமல் வேலோடு தாக்க வரும் பகைவர்களை: முகத்த களிறு – தந்தத்தினாலே குத்திக் கோர்த்தெடுத்த வீரம் மிக்க யானையானது: கால்ஆழ் களரின் – கால் புதைகின்ற சேற்று நிலத்திலே போனால்: நரிஅடும் – நரிகளால் கொல்லப்படும்!

எதற்கும் பயப்படாமல் வேலோடு தாக்க வரும் பகைவர்களை தந்தத்தினாலே குத்திக் கோர்த்தெடுத்த வீரம் மிக்க யானையானது கால் புதைகின்ற சேற்று நிலத்திலே போனால் நரிகளால் கொல்லப்படும்!

( திருக்குறள்- இடன் அறிதல் )

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.