விலாங்கு மீன்கள்!

ஆணையிறவிலும் பலாலியிலும் இருந்த ஆமியை எங்களுடைய வீட்டுக் கோடிக்குள்ளே கொண்டுவந்து விட்டுப் போட்டு போட்டினம். அவையாலே நாங்கள் கண்ட பலன் இது தான். இதுகளைக் கதைச்சால் வீண் மன வேதனை கண்டியோ. நான் போட்டு வாறன் தேவன். இனி ஆரும் விடுதலை அது இது என்று சொல்லிக் கொண்டு வரட்டும் பார்ப்போம். அப்ப தான் பிரச்சனை இருக்கு.

 

 

கோபாலண்ணை எழுந்து போய்விட்டார். தேவன் தலை குனிந்து இருந்தான். கண்டறியாத அரசியல்! ஒரு நாள் ஓய்விலேயாவது வீட்டு வேலைகளை பார்ப்போம்! பிள்ளைகளின்ரை படிப்பைப் பார்ப்போம் என்று இல்லாமல் தெருவாலே போறவையை கூப்பிட்டு வைச்சு  என்ன ஊர்க்கதை! வந்த மனுசன் தேத்தண்ணீரும் குடிக்காமல் போட்டுது. ஏனப்பா நீங்கள் இனியாவது திருந்த மாட்டியளா? இரைந்தாள் மனைவி சகுந்தலா.

 

இனியாவது என்கிறாள் மனைவி! இனி ஆரும் வரட்டும் என்கிறார் கோபாலண்ணை! மே பத்தொன்பதுக்குப் பின்பு புலியை விட இனி என்ற சொல்லை உச்சரிப்பவர்கள் தான் கனடாவில் கூடிப்போய் விட்டார்கள்! எல்லாம் முடிந்து போய்விட்டது என்ற மிக நீண்ட பொருளை உணர்த்த இனி என்ற இரண்டு எழுத்துக்களைப் பாவிக்கத் தொடங்கியிருப்பது ஆதரவாளர்கள் மட்டுமல்ல அவர்களுக்கு அப்பாற்பட்டவர்களும் தான்!

 

 

ஒருவேளை கோபாலண்ணை ஆட்கள் சொல்லுவதில் நியாயம் இருக்குமோ? என்று கூட அவன் மனம் சிலவேளைகளில் நினைக்கும். அவர்களின் கதைகள் அப்படி! எட தம்பி இந்தியா எந்தப் பெரிய தேசம். அந்த நாட்டுத் தலைவரை நீங்கள் குண்டுவைத்து கொல்லுறியளே உங்களை விடுவானா? இதென்ன அமுதரே! நீங்கள் நினைத்த பாட்டுக்கு அழித்தொழிக்க!

 

இப்ப பார்! வன்னியிலே எத்தனை இலட்சம் சனம் அழிஞ்சு அங்கவீனமாகப் போட்டுது. தாங்கள் குடிச்சு சாக ஏதாவது தரச் சொல்லித்தான் அந்தச் சனங்கள் கேட்குதாம்! இந்தப் பழி விடாது கண்டியோ! இந்தச் சனங்களுக்கு உதவ என்று யாராவது தொடங்கட்டும் கடவுள் சத்தியமாக வீட்டை வித்தாவது குடுக்கிறது என்றுதான் நினைச்சுக் கொண்டிருக்கிறன். அதுகள் அங்கே தவிக்க இங்கே என்ன வீடும் காரும் வேண்டிக்கிடக்குது எங்களுக்கு?

 

கோபால் இப்படிச் சொல்லும் போது எதிர்த்துக் கதைக்க எதுவும் இருப்பதில்லை தேவனுக்கு! ஆனால் றேடியோவிலும் சில பத்திரிகைகளிலும் இரகசிய கூட்டங்களிலும் இந்தக் கோபாலுகள் கதைத்து விமர்சனம் செய்யும் அளவுக்கு இயக்கத்தில் இருந்தவன்கள் எல்லாம் மடையன்கள் அல்ல என்பதும் தேவனுக்குத் தெரியும்!

 

விடுதலைப் பயணத்துக்குப் போடப்பட்ட பாதையில் தடைக்கல்லாக இருந்தவைகள் அகற்றப்பட்டனவே ஒழிய அவற்றின் தராதரமும் பெறுமதியும் ஏன் தருமமும் கூடப் பார்க்கப்படவில்லை என்பது தான் உண்மை. இது தான் சரி என்பதை விட இது தான் வழி என்ற நோக்கில் தான் காரியங்கள் முன்னெடுக்கப்பட்டன என்பது அவர்களின் வரலாற்றைப் பார்ப்பவர்களுக்குத் தெரியும்.

 

ஒரு உயிருக்கும் துன்பம் செய்யக் கூடாது என்று சொன்ன திருக்குறள் கூட நெல்லுக்குள்ளே முளைத்த களைகள் போன்றோரை அகற்றுவதில் தப்பில்லை என்றுதானே சொல்கிறது.

 

அந்த இறுக்கத்தால் தான் கொஞ்சக் காலம் ஏனும் தமிழ் மண்ணின் பெரும் பகுதியை மீட்டு வைத்திருக்க முடிந்தது. இன்று தோற்றுப் போயிருக்கலாம். ஆனால் அந்த இயக்கம் இல்லாமல் இருந்திருந்தால் எத்தனையோ கோடாரிக் காம்புகள் தமிழ்ப் பகுதிகளில் இருந்து பாராளுமன்றம் போயிருக்கும். இனத்தை விற்றிருக்கும்!

 

அந்தக் கனவைக் கலைத்த இயக்கத்தை எப்படி வரவேற்பது என்பது தான் கோபால் வர்க்கத்துக்குப் பிரச்சனை! மற்றப்படி கொள்கை ரீதியான எந்த வேறுபாடும் கிடையாது! கொள்கை என்று ஒன்று இருந்தால் தானே வேறு படுவதற்கு!

 

உண்மையான எதிரிக்கு தோற்றுப் போனவன் மீது ஒருவித மரியாதை இருக்கும். ஆனால் இந்தக் கும்பல் வானொலிகளிலும் செய்தித் தாள்களிலும் ஆயிரம் ஆயிரம் போராளிகளைப் பறிகொடுத்த இயக்கத்தை எள்ளி ஏளனம் செய்கின்றன.

 

நீங்கள் செய்த எந்த நல்ல காரியம் இயக்கத்தால் தடைப்பட்டது? என்று ஒரு முறை கோபாலைக் கேட்டுவிட்டான் தேவன். அதுக்குப் பிறகு கன காலம் கதைக்காமல் இருந்த மனுசன் இப்பவும் அந்தக் குறையை மனத்திலே வைத்திருக்கு போல. அதனால் தான் சுருக்கமாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டது.

 

கோபாலண்ணை மட்டுமல்ல. இன்னும் பலரையும் தேவனுக்குத் தெரியும். சிற்றூரவையிலே தண்டிக்கப் பட்டவர்களும் இங்கிருந்து கொண்டு பெரிய பெரிய வீடுகளைப் பூட்டி வைக்க நினைத்தவர்களும் வியாபார முதலைகளும் சாதி உணர்வுகளும் என்று அந்தப் பட்டியல் இயக்க எதிர்ப்புக் கொள்கையில் நீண்டு கொண்டு போகும்!

 

நான் தம்பி கனடாக்கு வரும் போது வீட்டுத் திறப்பை பெரியக்கா கையிலே கொடுத்து அங்கேயே சமைத்து சாப்பிட்டுப் படுங்கோ என்று சொல்லிப் போட்டு வந்தனான். அது சனிக்கிழமையிலே வளர்த்த பாசம் பேரப்பிள்ளைகளைப் பார்க்கப் போய்விடும் ராசா.

 

இதைக் கண்டு பிடிச்சு வந்து உனக்கு கல்வீடு வேறு ஊரிலே இருக்க இங்கே ஏன் இருக்கிறாய் என்று வெருட்டி திறப்பை வாங்கி யாரோ வந்தான் வரத்தானை கொண்டுவந்து குடிவைச்சுப் போட்டான்களாம். உவன்கள் உருப்படுவான்கள் என்றே நினைக்கிறாய் தேவன்? அன்றையிலே இருந்து உவங்களை எனக்கு கண்ணிலே காட்டேலாது தேவன்!

 

தனது இயக்க எதிர்ப்புக்கான காரணத்தை என்றைக்கோ அழகாக சொல்லி விட்டது மனுசன். ஏதோ சமுதாய நலனால் வந்த எதிப்பல்ல கடைந்தெடுத்த சுயநல எதிர்ப்பு என்று தெரிந்து கொண்டு தேவன் கேட்டான்.

 

அண்ணே வந்து குடியேறினவர்கள் கார் மோட்டார் சைக்கிள் என்று வசதியானவையோ?

 

எடதம்பி அப்படியென்றாலும் பரவாயில்லை. வாடை ஏதாவது தருங்கள் என்று நம்பலாம் இது எங்கேயோ கிடந்த பஞ்சப் பரதேசிகளாம் தம்பி. கன பொம்பிளைப் பிள்ளைகளாம்! ஒன்று இயக்கத்துக்குப் போட்டுதாம். மற்றதுகள் வந்த நாள் தொடங்கி கூலி வேலை கேட்டு ஊர்ச்சனத்தை மன்றாடிக் கொண்டு திரியுதுகளாம் அக்கா எழுதியிருக்கு. கறையான் புற்றெடுக்க பாம்பு வந்து குடி கொண்ட கதையாய் போட்டுது பாரன்! பெருமூச்சு விட்டார் கோபாலண்ணை.

 

ஓ! இயக்கம் நல்ல வேலை தான் செய்திருக்குது. யாரோ வறுமைப்பட்ட குடும்பத்துக்குத் தான் உதவியிருக்குது. நல்ல காரியம் என்றது தேவனின் மனம். தேவன் அதை வெளிக்காட்ட வில்லை!

 

ஆனால் கோபால் அதுக்கு எதிர்மாறாகத்தான் நடக்கும்.

 

சொந்தம் நட்புக்குள்ளே எந்தக் கொண்டாட்டம் என்றாலும் வந்தால் தன் இயக்க எதிர்ப்புக் கோசத்தை காட்டாமல் மனுசன் விட ாது. தன் மனத்தில் உள்ள எதிர்ப்பு விசத்தை ஏதோ முழு சமூக எதிர்ப்புப் போல காட்ட முயற்சிக்கும்! என்ன உங்களின்ரை ஆட்களின்ரை கதையை முடிச்சுப் போட்டான்கள் என்று தொடங்கும். அனேகமாக தேவன் வாய் மூடித்தான் இருப்பான். சில வேளைகளில் ஒரு வரியிலே மட்டும் பதில் சொல்வான்.

 

இப்படித்தான் ஒரு முறை கோபாலர் தம்பி தேவன் இப்ப யாழ்ப்பாணத்திலே இருந்து எங்கே வேண்டும் என்றாலும் போன் கதைக்கலாம் தெரியுமே என்று சொன்ன போது எங்கே வேண்டுமென்றாலும் கதைக்கலாம் சரி  அண்ணே! என்ன வேணும் என்றாலும் கதைக்கலாமோ? இல்லைத் தானே அதுக்குத்தானண்ணை இயக்கம் பாடுபட்டது பேசாமல் இருங்கோ என்று முகத்தைத் திருப்பிக் கொண்டான் அவன்.

 

கோபாலண்ணை இதைக் கேளுங்கோ ஊரிலே போராடியது இயக்கம்! அதை முடக்கியது அரசாங்கம்! தோல்வி இயக்கத்துக்கும் வெற்றி அரசாங்கத்துக்கும் வந்தது! கனடாவிலே இருக்கிற நீங்கள் சந்தோசப்பட இதில் என்ன இருக்குது?

 

ஏன் இலங்கை ஆமிக்கு நீங்கள் பயிற்சி கொடுத்தியளா? சந்தோசப்பட! வன்னிச் சனம் சாகும் போது வேலையாலே வந்து மானாட மயிலாட பார்த்த ஆள் தானே நீங்கள்? உங்களுக்கும் வன்னிச் சனத்துக்கும் என்ன தொடர்பு?

 

பரம்பரை பரம்பரையாக அரசாங்கத்துக்கு வால்பிடித்த குருவிச்சைகளுக்கு ஓட்டுப் போட்டு வந்த உங்களுக்கு ஏதாவது நல்லதைக் கண்டால் பிடிக்காது என்பது இரத்தத்தில் ஊறின குணம். அதனாலே தான் இப்படி எல்லாம் கதைக்கிறியள்.

 

வன்னிச் சனங்கள் இயக்கம் செய்தது பிழை அரசாங்கமும் எடுபிடிகளும் செய்யுறது தான் சரியென்றால் ஏன் கூண்டோடு தேர்தலிலே தோற்றுப் போனீர்கள். வென்றல்லோ இருக்க வேணும். வன்னி மக்கள் உங்களுக்கெல்லோ ஓட்டுப் போட்டிருக்க வேணும்!

 

இப்பதானே உங்கள் விருப்பப்படி இயக்கம் அழிந்து போச்சு. இனி உங்களின்ரை சேவையை ஆரம்பிக்க வேண்டியது தானே. அதைச் செய்யாதையுங்கோ. மாவீரர் கல்லறையிலே ஆடு மேயுது என்று தமிழ்நாட்டுப் பேப்பரிலே படம் போடுவான். அதை நீங்கள் ஒருவருக்கு ஒருவர் ஈ மெயில்லே அனுப்பிச் சிரித்து சந்தோசப்டுங்கோ.

 

அண்ணே தமிழ் எதிரியின் சமாதி மதிலிலே தன் தேரின் அச்சுப் பட்டதற்காக அந்த இடத்தாலே போறவர்கள் எல்லாரும் இறங்கி நடந்து போக வேண்டும் என்று சட்டம் போட்டவன் ஒருசிங்கள மன்னன். அவனும் எதிரிதான். ஆனால் உங்களைப் போல நரி இல்லை! அதனாலே ஆட்டையும் மேய விடவில்லை. உங்களைப் போல அதைப் பார்த்து சந்தோசப்படவும் இல்லை!

 

ஒரு பிறந்த நாள் கொண்டாட்டத்தில் வைத்து ரமணன் என்ற முன்னைநாள் போராளி கோபாலை கிழித்த போது தேவன்தான் இருவரையும் சமாதானப் படுத்தி விட்டவன்.

 

இல்லையடா தேவன்! சொந்த வெறுப்பை சமுதாயத்தின்ரை வெறுப்பாக காட்ட நினைக்கினம். மண்ணெண்ணைக்குப் பயந்த தௌ;;ளு மாதிரி மறைஞ்சு இருந்து போட்டு இப்ப கதைக்கிற கதையள்! இயக்கத்திற்கும் இவர்களாலே நன்மை இல்லை! இயக்கத்தை எதிர்க்கும் அரசுக்கும் இவர்களாலே ஐந்து சதத்துக்குப் பிரயோசனம் இல்லை!

 

காரணமில்லாத சந்தோச மடையரை இந்தக் கனடாவிலே தான் நான் பார்க்கிறன். நாளைக்கு ஒரு கண்ணிவெடி ஊரில் எங்காவது வெடித்தால் இழுத்துப் போர்த்துக் கொண்டு பதுங்குற ஆட்களை எனக்கு முன்னாலே உந்த விசர்க்கதைகள் கதைக்க வேண்டாம் என்று சொல்லி வை!

 

இங்கே ரமணன் அவர் வயதுக்கு மூத்தவர். அவையின்ரை குணம் தெரியும் தானே! நீ பேசாமல் இரு.

 

இல்லைத் தேவன்! என்னுடைய இரண்டு தங்கச்சியும் இயக்கத்துக்காக போராடி செத்துப் போச்சினம்! ஏன் மாவீரர் குடும்பமாக பதியேல்லை என்று ஐயாவை இயக்கம் கேட்டதுக்கு என்னுடைய பிள்ளைகள் விடுதலைக்காக செத்துப் போச்சுதுகள்!

 

அதைக் காட்டி சலுகை பெற்று வாழுவதும் ஒருவகை குற்றம் தான்! அதனாலே பதிய நான் விருப்பப்படவில்லை எங்களை விட கஸ்டப் பட்டதுகளுக்கு உதவி செய்யுங்கோ என்று சொன்னார் ஐயா! இத்தனைக்கும் வீட்டிலே சரியான வறுமை! அப்படிப் பட்ட சனங்கள் வளர்த்த இயக்கமடா தேவா!

 

நாட்டு விடுதலை தவிர வேறு எதைப்பற்றியும் நினைக்காத எத்தனையோ சின்னஞ் சிறிசுகள் உயிரைக் கொடுத்து வளர்த்த அமைப்பை பிள்ளை குட்டிகளோடு பாதுகாப்பாக இங்கே இருந்து கொண்டு குற்றம் சொல்கிறார்களே இவர்களுக்கு எல்லாம் இரக்கமே வராதா?

 

அன்று ரமணன் சொன்ன வார்த்தைகள் கோபாலண்ணையைக் காயப்படுத்தி இருக்க வேண்டும். அதன் பின்பு அவர் வேளைக்குபபோய்விட்டார். அந்த நிகழ்ச்சிக்குப் பின்பு இன்றுதான் ; அவரைத் தேவன் கண்டான்!

 

தேவா! வன்னி மக்களுக்கு நிவாரணம் கொடுக்க கனடாத் தமிழர்கள் முன்வர வேண்டும் என்று கோபாலு றேடியோவிலே கத்துது.  வன்னிச் சனத்துக்கு உதவி செய்ய ஒரு அமைப்பு ஏற்படுத்தி இருக்கிறோம். நீங்கள் ஏதாவது உதவி செய்யுங்கள் என்று கோபாலிட்டை யாரையாவது அனுப்பி என்ன சொல்கிறார் என்று அறியுங்கோ. கடைசி வரைக்கும் ஒரு சதம் ஈய மாட்டுது கோபாலு. பாரதியார் சொன்ன நடிப்புக் சுதேசிகள் இவர்கள் தான்.

 

கலங்கிய கண்ணோடு ரமணன் தன்னைத் தனிமையில் அழைத்துச் சொல்லி விட்டுப் போன விமர்சனமே கோபாலைக் காணும் போது  தேவன் மனத்தில் தலை காட்டும்.

 

என்னப்பா யோசிக்கிறியள் என்றாள் சகுந்தலா.

 

றேடியோவுக்கு குடுக்க ஒரு செய்தி ரேப் பண்ணி வைத்திருக்கிறேன். அதைக் கொடுக்கலாமா  இல்லை விட்டுவிடலாமா என்றுதான் யோசிக்கிறேன் என்றான் தேவன்

 

போடுங்கோ முடிவை நான் சொல்கிறேன் என்றாள் சகுந்தலா.

 

அண்ணே! இது போராட்ட இயக்கமல்ல. நாங்கள் வன்னி மக்களுக்கு உதவுவதற்காக ஒரு சமூக அமைப்பை ஏற்படுத்தி அதற்காக உதவி கேட்டு வந்திருக்கிறோம் போர் முடிந்த நிலையில் உணவுக்கும் மருந்துக்கும் உங்களைப் போன்றவர்கள் பெரிதாக கைகொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

 

நல்ல விசயம் தம்பி! கிடந்த காசெல்லாம் இறுதிப் போருக்கு என்று கொடுத்துப் போட்டன். எங்களின்ரை போராட்டமும் இப்படி ஆகி விட்டது. பொடியளும் நல்லாக கஸ்டப்பட்டவன்கள். எல்லாரும் போய்ச் சேர்ந்திட்டான்கள். நான் மனம் உடைஞ்சு கிடக்கிற நேரத்திலே இப்படி வந்து நிக்கிறியளே.

 

என்னைப் போன்றவர்கள் உதவவில்லை என்று உங்கள் முயற்சியைக் கைவிட்டுப் போடாதையுங்கோ. நல்ல திட்டம். வசதி வரும் போது நீங்கள் கேட்கத் தேவையில்லை நானாக உங்களைக் கூப்பிட்டுத் தருவேன். நாலு வீட்டுக்குப் போற உங்களை கன நேரம் மினக்கெடுத்தக் கூடாது பாருங்கோ. போட்டு வாங்கோ. இப்படி துன்பப் படுகிறவனுக்கு உதவ வெண்டும் என்று நினைக்கிற உங்கள் மனம் இருக்கே அது எல்லாருக்கும் வராது பிள்ளைகள் போட்டு வாங்கோ

 

வானொலியில் கணீரென்று ஒலிக்கும் கோபாலின் வசீகரக் குரலைக் கேட்டுப் பழகிப் போன சகுந்தலா    இன்று கோபாலின் மாறுபட்ட பேச்சைக் கேட்டு அதிர்ந்து போய் நிற்பதைப் பார்த்தான் தேவன்.

 

ஐயோ! இது கோபால்ணையின்ரை குரலல்லோ. இந்த மனுசன் எங்கே இயக்கத்துக்குக் காசு கொடுத்தது. இப்படிப் பச்சைப்பொய் சொல்லுது எப்ப பார்த்தாலும் இயக்கத்தைத் திட்டிக் கொண்டு திரியும். ஏன் இன்றைக்கு இப்படி எல்லாம் கதைக்குது இந்த மனுசன் என்றாள் சகுந்தலா

 

உண்மைதானப்பா  இது தான் கோபாலண்ணையின்ரை சுய உருவம். றேடியோவிலும் பேப்பரிலும் என்ன மாதிரிப் பேசும் எழுதும். இதைப் பார்த்தியோ  என்ன உலகம்? என்றான் தேவன்.

 

உங்களுக்கு ஒன்று சொல்லுறன் இதை அழியுங்கோ. எங்களுடைய சனங்களும் போராளிகளும் இயக்கமுமே அழிந்து போச்சாம்! இங்கே இந்த ஆட்கள் ஆவது எதையாவது சொல்லி வாழ்ந்து விட்டுப் போகட்டும்.

 

கடலிலே மீன் இனத்திலே மீன் தலையோடும் பாம்பு வாலோடும் விலாங்கு மீன் என்று ஒன்று இருக்குமாம்! அது மீனுக்குத் தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டித் தப்பித்துக் கொள்ளுமாம்!  அது போல வாழ நினைக்கும் அந்த மனுசனைக் காட்டிக் கொடுக்காதையுங்கோ. விடுங்கோ. இந்த ஆட்களை நம்பி ஒரு கூட்டம் இருக்கே அதுகள் தான் பாவம்!

 

சிரித்துக் கொண்டு உள்ளே போகும் சகுந்தலாவை வியப்போடு பார்த்தான் தேவன்.

 

———————————–

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.