|

தூக்கணமும் குரங்கும்

நீதி நூல் கதை

தூக்கணமும் குரங்கும்

வானரம் மழைதனில் நனையத் தூக்கணம்
தானொரு நெறிசொலத் தாண்டிப் பிய்த்திடும்
ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும்
ஈனருக்கு உரைத்திடில் இடரது ஆகுமே


ஒரு காட்டிலே அடர்ந்து வளர்ந்த மரம் ஒன்று இருந்தது. அந்த மரத்தின் ஒரு கிளையிலே குருவி ஒன்று கூடு கட்டி குடும்பத்தோடு நீண்ட காலமாக வசித்து வந்தது. பெண்களின் காதிலே தொங்கும் தூக்கணம் போல அதன் கூடு இருந்தமையால் எல்லோரும் அதனை தூக்கணம் குருவி என்று அழைப்பாhகள்.

அதன் கூடும் உள்ளே மிகவும் அழகாக இருக்கும். அதன் வாயில் மழை நீர் உட்புக முடியாதவாறு கீழ்ப்புறமாகவே அமைக்கப்பட்டிருக்கும். கூட்டினுள்ளே மூன்று அடுக்குகள் இருக்கும். உச்சியிலுள்ள தட்டில் முட்டைகளும் அடுத்த கீழ்த்தட்டில் தாய்க்குருவியும் குஞ்சுகளும் இருக்கும். வாசலோடு கூடிய கீழ்த்தட்டில் பாதுகாப்பாக ஆண்ககுருவியும் இருக்கும்.

தாய்க் குருவி காட்டிலே பறக்கும் மின்னிமின்னிப் பூச்சிகளைப் பிடித்து வந்து அற்றங்கரைக் களிமண் சேற்றிலே புதைத்து வைத்து குஞ்சுகளுக்கு வெளிச்சமாகக் கூட்டிலே பயன்படுத்தும் என்று மிகமிக வயது முதிந்த மூதாதையர்கள் யாழ்ப்பாணத்தில் சொல்வார்கள். அதன் உண்மைத் தன்மை யாருக்கும் தெரியாது.

அப்படிப்பட்ட அழகான தூக்கணம் வாழும் மரத்திலே இன்னொரு கிளையில் ஒரு குரங்கும் பல காலமாக இருந்து வந்தது. ஒருநாள் இரவு மிகவும் பலத்த மழை பெய்தது. மரங்கள் புயல் காற்றிலே பேயாட்டம் ஆடின. மிருகங்கள் எல்லாம் குகைகளில் பதுங்கிக் கொண்டன. பறவைகள் கூடுகளில் ஒளித்துக் கொண்டன. ஆனால் அந்தக் குரங்கு மட்டும் தன் கைகளால் மரக்கிளையை இறுகக் கட்டிக்கொண்டு முழுவதுமாக மழையில் நனைந்து குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தது. மழையோ விட்டபாடில்லை.

கூட்டில் இருந்த ஆண் குருவி குரங்கைப் பார்த்துக்கொண்டு இருந்தது. அதன் மனம் உருகித் தவித்தது. குரங்கின் நடுக்கத்தைப் பார்த்து கவலை தாங்க முடியாமல் கேட்டது.

நண்பரே! இப்படிப் பெரு மழையில் வீணாக நனைந்துகொண்டு இருக்கிறீரே. உமக்குத்தான் மனிதரைப் போல இரண்டு கைகள் இருக்கின்றனவே. எங்களைப் போல நீரும் முன்னரே வீடு ஒன்றைக் கட்டிக்கொண்டிருந்தால் இப்போது மழையில் நனைய வேண்டி வந்திருக்காதல்லவா? யோசித்துப் பாரும் என்றது.

தூக்கணத்தின் வார்த்தைகளைக் கேட்ட குரங்கு கோபத்தின் உச்சிக்குச் சென்றது. அது எதுவும் பேசாது தூக்கணம் இருந்த கிளைக்குத் தாவியது. தன் இரண்டு கைகளாலும் தூக்கணம் இருந்த கூட்டைப் பிய்த்து எறிந்தது.

விவேகசிந்தாமணி என்ற நீதி நூலிலே இந்தக் கதை வருகின்றது. கெட்டவர்களுக்குப் புத்தி சொல்லப் போனால் சொல்பவர்களுக்கே அது ஆபத்தாக முடியும் என்கிறது விவேகசிந்தாமணிப் பாடல்.

வானரம் மழைதனில் நனையத் தூக்கணம்
தானொரு நெறிசொலத் தாண்டிப் பிய்த்திடும்
ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும்
ஈனருக்கு உரைத்திடில் இடரது ஆகுமே

வாரணம் மழை தனில் நனைய – குரங்கானது மரக்கிளையில் இருந்து கொண்டு மழையில் நனைந்து கொண்டிருக்க தூக்கணம் தான் ஒரு நெறி சொல – அதே மரத்திலே தன் கூட்டில் நனையாதிருந்த தூக்கணம் குருவியானது குரங்கிலே இரக்கப்பட்டு எங்களைப் போல நீயும் ஒரு வீடு கட்டியிருந்தால் மழையில் நனையாமல் இருந்திருக்கலாமே என்று புத்தி சொல்ல தாண்டிப் பிய்த்திடும் – கோபம் கொண்ட குரங்கு பாயந்து வந்து தூக்கணத்தின் கூட்டைப் பிய்த்து எறிந்தது போல ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும் – மெய்ஞானத்தையும் கல்வியறிவையும்; எடுத்துச் சொல்லுகின்ற நூல்களை ஈனருக்கு உரைத்திடில் – கெட்டவர்களுக்கு எடுத்துச் சொல்லப் போனால் இடர் அது ஆகுமே – அதனாலே துன்பம்தான் சொன்னவருக்கு வந்து சேரும்.

குரங்கானது மரக்கிளையில் இருந்து கொண்டு மழையில் நனைந்து கொண்டிருக்க அதே மரத்திலே தன் கூட்டில் நனையாதிருந்த தூக்கணம் குருவியானது குரங்கிலே இரக்கப்பட்டு எங்களைப் போல நீயும் ஒரு வீடு கட்டியிருந்தால் மழையில் நனையாமல் இருந்திருக்கலாமே என்று புத்தி சொல்ல கோபம் கொண்ட குரங்கு பாயந்து வந்து தூக்கணத்தின் கூட்டைப் பிய்த்து எறிந்தது போல மெய்ஞானத்தையும் கல்வியறிவையும்; எடுத்துச் சொல்லுகின்ற நூல்களை கெட்டவர்களுக்கு எடுத்துச் சொல்லப் போனால் அதனாலே துன்பம்தான் சொன்னவருக்கு வந்து சேரும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.