படைவலிமை

கூற்று உடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்றல் அதுவே படை

கந்தப் புராணத்திலே முருகப் பெருமானுக்கும் சூரனுக்கும் நடந்த யுத்தம் பதினெட்டு யுகங்களில் முடிந்தது. கம்பராமாயணத்தில் இராமனுக்கும் இராவணனுக்கும் நடந்த யுத்தம் பதினெட்டு மாதங்களிலே முடிந்தது. மகாபாரத யுத்தமும் பதினெட்டு நாட்கள் தான் நடந்தது. அது போல ஈழ யுத்தமும் மே பதினெட்டாம் திகதிதான் முடிந்து போனது! பதினெட்டுக்கு அப்படியொரு பெருமை போலும்!

தலைமை அழிந்தது! தளபதிகள் அழிந்தார்கள்! படைகள் அழிந்தன! மக்கள் அழிந்தார்கள்! சிலர் மண்டியிட்டார்கள்! இன்னும் சிலர் காட்டிக் கொடுத்தார்கள்! பலர் கைதானார்கள்! உண்மைதான்! ஆனால் திருக்குறளின் படை மாட்சி என்ற அதிகாரத்து ஐந்தாவது குறளுக்கு ஏற்ப போராடி மறைந்த ஈழ மறவர்களையும் இந்த யுத்தத்தில் உலகம் கண்டுதான் இருக்கிறது!

மன்னார் மடுவிலே தொடங்கிய பின்னடைவு தொடர்ந்து கொண்டு போகிறது! பின்வாங்குகின்றன படைகள் தளபதிகள் கட்டளைப்படி! கிளிநொச்சி வீழ்கிறது! அதனால் படைகளின் ஒழுங்கு சிதைகிறது! விளைவு பரந்தனும் ஆனையிறவும் மணலாறும் கூட கைவிட்டுப் போகின்றன! எங்குமே ஓட முடியாத நந்திக் கடல் கரையிலே எஞ்சிய படைகளும் மிஞ்சிய மக்களும் குவிகிறார்கள்! பிள்ளைகள் வெளிநாட்டிலே மனைவி வெளிநாட்டிலே என்று ஓயாமல் பேசப்பட்ட தலைமையும் வன்னியின் முள்ளி வாய்க்கால் மண்ணிலே குடும்பத்தோடு ஒதுங்குகிறது மக்களை விட்டுப் போகாமல்! போக மனம் இல்லாமல்!

இராணுவம் நான்கு புறமும் மூன்று வகைப் படையோடும் சூழ்ந்து கொண்டு தாக்க எத்தனிக்கிறது! புலம் பெயர் சமூகமும் உலகம் முழுவதும் போராடிக் களைத்துவிட்டது எதுவுமே செய்ய முடியாமல்! நட்பும் பகையும் நடுநிலமையும் என்றிருந்த உலகம் பகை என்ற ஒரு கொடிக்கு கீழே ஒடுங்கி விடுகிறது காரணம் இல்லாமல்! தென்னகத்து வேடதாரிகள் தீர்வு தெரிந்தும் தீண்டி விடுகிறார்கள் குழப்பத் திரியை!

தோல்வி நிச்சயம் என்று தெரிகிறது! மக்கள் மடியப் போகிறார்கள் என்றும் தெரிகிறது! நாமும் அழியும் நேரம் வந்து விட்டது என்று படைகள் உணர்கின்றன. மறுகணமே அந்த வீரர்கள் ஆயதங்களை எடுத்துக் கொண்டு எழுகின்றார்கள்! தாக்கத் தொடங்குகிறார்கள்! இதைச் சற்றும் எதிர்பாராத எதிரியின் கண்கள் அகல விரிகின்றன ஆச்சரியத்தால்! தப்ப முடியாது என்று தெரிந்தும் தாக்குகிறார்கள் என்று தகவல் கொடுக்கிறார் தலைமைத் தளபதி! பயத்தோடு!

வெட்கத்தால் முகம் சிவக்கின்றன வீழ்த்த நினைத்த நாடுகள்! வெம்பு வெம் சேனையோடும் வேறுள கிளைஞரோடும் தம்பியை இழந்து கிடப்பனோ தமையன் மண்மேல்? என்று கேட்பாரே கம்பர்! ஆம்! தலைமைக்கு முன்னே தம்மை மாய்த்துக் கொள்கிறார்கள் அந்த வீரர்கள்!

எதிரி பீரங்கிகளால் சுட்டும் வானத்திலிருந்து குண்டுமழை பொழிந்தும் கூட சிறு சிறு குழுக்களாக் கூடித் தாக்கிவிட்டு வீழ்ந்து மடிகிறார்கள் அந்த வேங்கைகள்! அவர்கள் புறமுதுகிட்டு ஓடவில்லை! கவச வாகனங்களை வெறும் நிலத்தில் நின்று தாக்குகிறார்கள்! தாக்கிய படியே செத்தும் போகிறார்கள் அந்த வீரர்கள்! வீராங்கனைகள்!

வெட்கத்தை விட்டு வெளிப்படையாகவே சொன்னது இராணுவம் இறுதி நாளில் ஆயிரக்கணக்கில் படையினரை இழந்தோம் என்று மிரட்சி மாறாமல்!

வள்ளுவர் சொன்னார்! கூற்றுவன் எனப்படும் இயமனே கோபங்கொண்டு எதிரே வந்தாலும் அஞ்சாமல் ஒன்று கூடி எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடையதே படையாகும் என்றார் அவர்.

கூற்று உடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்றல் அதுவே படை

கூற்று உடன்று – இயமனே கோபம் கொண்டு: மேல்வரினும் – தங்களுடன் போருக்கு வந்தாலும்: கூடி எதிர் நிக்கும் – உயிருக்குப் பயந்து பின்வாங்காமல் தம்முள் ஒன்று கூடி எதிர்த்து நிற்கும்: ஆற்றல் அதுவே படை – ஆற்றலை உடையதே படையாகும்!

இயமனே கோபம் கொண்டு தங்களுடன் போருக்கு வந்தாலும் உயிருக்குப் பயந்து பின்வாங்காமல் தம்முள் ஒன்று கூடி எதிர்த்து நிற்கும் ஆற்றலை உடையதே படையாகும்!

திருக்குறளின் படை இலக்கணத்துக்கு எடுத்துக்காட்டாக அவர்கள் வாழ்ந்து விட்டுப் போய்விட்டார்கள் ஈழ மண்ணை விட்டு! மானத்தோடும் தான்! மாசும் இல்லாமலும் தான்!!

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.